Sunday, December 2, 2007

நெஞ்சத்திரை - கண்ணுக்குத் தெரியும் மாயையுமல்ல, கற்பனை கலந்த நிஜமுமல்ல..

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னாடி என் ம‌ன‌தை பாதித்த‌ ஒரு அவல நிகழ்ச்சியை கதை வடிவில் செதுக்க முயற்சித்துள்ளேன்..


சொர்க்கமா.. நரகமா..

வாசற்படி - 1

என்னமோ, எப்பவோ, எப்படியோ தெரியலை..
விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து என் முருகேசு மாமாவை நான் மரிக்கொழுந்து மாமான்னு தான் கூப்பிடுவேன்..
எல்லாரும் நான் நையாண்டிக்குத்தேன் அப்படி என் மாமாவை கூப்பிடுறேன்னு நினைச்சாங்க..
ஆனா எனக்குத்தேன் தெரியும் ஏன் அப்படி கூப்பிடுறேன்னு..
பார்க்க பூமாதிரி தெரியாட்டாலும், மரிக்கொழுந்து பூ தான்..பச்சை உடம்பு.. அது வாசம் எந்த பூக்கும் வாராது.... வாட, வாட மெருகேரும் அது வாசம்..
அது மாதிரி தான் என் மாமனும்.. எங்க சாதிசனமும், ஊருசனமும் மெய்க்க பேசும் படிச்ச கிராமத்தான் .. ஆனாலும் இந்த பட்டிக்காட்டு பொட்டச்சியை நேசிக்கும் பூ மனசு..

அறைப்பாவாடை சட்டையில ஜைன்,ஜைன் கைதட்டும் பொம்மைக்காரன் கையில கட்டிவிட்ட ஜவ்வுமிட்டாய் வாட்சை நான் ஆசையா பார்த்து ரசிக்கையில, வெடுக்குன்னு என் கைய இழுத்து என் வாட்ச்சுமிட்டாய சப்பினவனை, அவன் நெஞ்சுள கைய வச்சு ச‌டுக்குன்னு அவன தள்ளி, என் கைய அவன்கிட்டேருந்து நான் புடுங்கி அழுகும் போது, பதறி ஓடியாந்த என் அம்மா நீ கட்டிக்கப்போற மாமன் மவன் தானடி.. ஏன் இப்படி கரையிறன்னு என்னை முறைசொல்லி வைய்யும்போது, அப்பத்தேன் .. வகுடெடுத்து சீவி, டவுசர் சட்டை போட்டு நிக்கும் என் மரிக்கொழுந்து மாமனை நான் பார்த்தேன்..

அம்மா சொன்ன முறையும் புரியாம, நான் கரைஞ்ச கரை எந்த மூலைக்கு போச்சுன்னும் தெரியாம வெள்ளையா நான் பார்க்க, இந்த உரிமையன் தான்டி உனக்கேத்த முறைக்காரன்னு பத்து வயசிலயே கண்ணால ஜாடை சொல்லி மரிக்கொழுந்து மாமா சிரிக்க, அது சப்பி சாப்பிட்ட என் மிட்டாயி வாச்சு டிக்,டிக்குன்னு அது கண்ணுல ஓடுறத பார்த்து நானும் கிளுக்குன்னு சிரிச்சுபுட்டேன்..

அந்நேயிலேருந்து என் மாமாவோட விளையாடும்போதுஞ்ச‌ரி, ம‌த்த‌வ‌க என் மாமாவ‌ப் ப‌த்தி பேசும்போதுஞ்ச‌ரி என் முறையையும், உரிமையையும் நான் விட்டுக்கொடுத்த‌துமில்ல‌, அதை யாராச்சும் சீண்டும்போது தொட்டாச்சினுங்கியா என் க‌ண்ணால அதுக்காக‌ சினுங்க‌ ம‌ற‌ந்த‌துமில்ல‌..
என் சிரிப்பு, சினுங்க‌ல்,அழுகை எல்லாத்துல‌யும் என் மாமாவை நிறைச்சு வ‌ச்சுருந்தேன்.. என் மாமா மேல‌ அம்புட்டுகொல்ல‌ ஆசை என‌க்கு..

ஆனா, முலை முட்டி, முழுப்பாவாடை ச‌ட்டை போட்டுகிட்டு, ஆம்ப‌ளை ப‌சங்க‌ளோட விளையாட‌க் கூடாதுன்னு நிர்ப‌ந்த‌ம் வ‌ந்த‌ வ‌ய‌சிலதேன் என் மாமனை ச‌ரியா பார்க்காம‌, என் உரிமையையும், ஆசைய‌யும், பாச‌த்தையும் ம‌றைச்சு காட்டுற‌ மேனாமினுக்கியானேன்..
ஆனாலும் என் மாமா என்னை எங்க‌ பார்த்தாலும் க‌ண்ஜாடை சிரிப்பால‌ நான் தான்டி உன‌க்கு, நீ தான்டி என் சிங்காரின்னு சொல்ல ம‌ற‌ந்த‌துமில்ல..ம‌றைச்ச‌துமில்ல‌..

நான் ப‌த்தாவ‌து ப‌டிக்கையில‌, வீட்டுக்கு அடுப்பெரிக்க சுள்ளியும், ச‌ருகும் பொருக்க‌, சினேகிதிக‌ளோட ஆர‌ஸ்ப‌தி காட்டுக்கு போனேன்..
அங்கே என் ம‌ரிக்கொழுந்து கையில பன்னெண்டாம் வகுப்பு இய‌ற்பிய‌ல் புத்த‌கத்தோட‌, முழுக்காலு டிர‌வுச‌ரோட, காத்துல கோடு போட்டு, எங்க ஊரு ம‌ந்தையில‌ நிக்கிற அம்பேத்காராட்ட‌ம் ப‌டிச்சிகிட்டு இருந்தாங்க‌..
சும்மா இல்லாம என் சினேகிதி ஒருத்தி "அடியே பொம்மி, அப்ப‌வே எங்க‌ அம்மா சொன்னுச்சு, பொழுது சாய‌ப்போற‌ நேர‌ம் பாத்து காட்டுக்கு போறிகளேடி காத்து க‌ருப்பு ஏதும் ப‌ய‌மூத்த போகுதுன்னு, இப்ப‌ பாரு ஒரு க‌ருப்பு புத்த‌க‌த்தோட‌ நிக்குதுன்னு" என் மாம‌ன‌ வ‌ம்புக்கு இழுத்தா...

என்னதான் ப‌டிப்பாளி புள்ளனாலும், என் மாமா ஒன்னும் வாயில்லா பூச்சியில்லையே.. "ம்ம் என்ன‌ கூட‌தான் ப‌ச‌ங்க‌ காட்டுக்கு போகாத‌டா, வ‌ய‌சு ப‌ச‌ங்க‌ளை மோகினிங்க விடாதுன்னு சொன்னானுங்க‌, ஆனா இப்ப‌டி என் மோகினியோட‌, ப‌ல‌ பிடாரிக‌ளும், காட்டேரிக‌ளும் என்னைத்தேடி வ‌ரும்னு ப‌ச‌ங்க‌ளும் சொல்லலை, நானும் எதிர் பார்க்க‌லையேன்னு" விறைப்பா சொன்னாங்க‌..
வாய‌க்குடுத்தா என் மாம‌ன்கிட்டேருந்து மீள‌ முடியாதுன்னு "அய்யா, புத்தக‌ சாமியாரே நீங்க உங்க வேலையை பாருங்க, நாங்க‌ எங்க‌ வேலையை பார்க்குறோம்.. அம்மாடி பொம்மி, இங்க‌ இருக்குற‌ சுள்ளிய நீ பொருக்கு, நாங்க கொஞ்சம் உள்ள‌ போயி பொருக்குறோம்னு" என‌க்கு... இல்ல, இல்ல எங்க‌ளுக்கு சாத‌கமா, குத்தலா சொல்லிட்டு போயிட்டா...

ஒன்னுந்தெரியாத‌வ‌ளாட்ட‌ம் த‌லையாட்டிவ‌ச்சேன் நானும்..

முறைப்பை‌ய‌ன் அக்க‌த்துல‌ நிக்க‌, வ‌ய‌சு நாண‌த்துல சிக்க‌, எதையோ பொருக்காம இதை பொருக்குறேனேன்னு கை நடு, ந‌டுங்க சுள்ளியை பொருக்குனேன்..
செவ்வந்தியையும்,ம‌ரிக்கொழுந்தையும் க‌ல‌ந்து நான் த‌லையில க‌ட்டி வ‌ச்சிருந்த க‌த‌ம்ப‌த்தில பட்டாம்பூச்சி ஒன்னு ப‌த‌ம் பார்த்து ஒக்காந்துருக்க... அதை என‌க்கு புடிச்சுத்த‌ர என் மாமா எனை நெருங்கி என் தலையில கைய வைக்க , ப‌த‌றி நான் திரும்பி, மூச்சு சர‌ச‌ர‌க்க, உட‌ம்பு ப‌ட‌ப‌ட‌க்க, கொஞ்சம் விலக நினைக்க‌யில‌, ப‌ய‌ந்துட்டேனோன்னு நினைச்சு ஆத‌ர‌வா, உரிமையா என் கை பிடிச்சாங்க என் மரிக்கொழுந்து மச்சான்..
உரிய‌வ‌ன் கைபட்ட‌துல‌ ம‌ன‌சு ம‌ட்டும் பூக்காம‌, உட‌ம்பும் பூக்க ஆர‌ம்பிச்சுருச்சு..
பூ, பூக்குற‌ வ‌லி பொருக்க‌ முடியாம, என் மாம‌ன் கையை இருக புடிச்சு அம்மான்னு நான் கத்த... விவரம் ஏதும் விளங்காம என் மாமன் கண் நடுங்க... ஓடி வந்த சினேகிதிகள் என்னடியாச்சுன்னு கேட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க..
விஷயம் புரியாம எங்க பின்னாடியே என் வீடு வரையிலயும் வந்த மாமனுக்கு பின்புதான் புரிஞ்ச‌து நான் பூப்படைஞ்ச‌து…

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)
--------------- ***--------------

வாசற்படி - 2

4 comments:

இளைய நிலா said...

நீங்கள் கதை சொல்லும் மொழி நடை எனக்கு மிகவும் பிடித்தது.
கதை சொல்லுவது என்னிடம் நீங்கள் பேசுவது போன்ற ஒரு உணர்வு.

இளைய நிலா said...

மிகவும் நன்றாகா போகிறது நான்குவது பகுதி

சோ.மஹாலெட்சுமி said...

அம்புலி,
தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி!

உயிரோடை said...

மஹா க‌தை ந‌ல்லா எழுதி இருக்கீங்க‌.