Sunday, December 2, 2007
நெஞ்சத்திரை - கண்ணுக்குத் தெரியும் மாயையுமல்ல, கற்பனை கலந்த நிஜமுமல்ல..
சொர்க்கமா.. நரகமா..
வாசற்படி - 1
என்னமோ, எப்பவோ, எப்படியோ தெரியலை..
விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து என் முருகேசு மாமாவை நான் மரிக்கொழுந்து மாமான்னு தான் கூப்பிடுவேன்..
எல்லாரும் நான் நையாண்டிக்குத்தேன் அப்படி என் மாமாவை கூப்பிடுறேன்னு நினைச்சாங்க..
ஆனா எனக்குத்தேன் தெரியும் ஏன் அப்படி கூப்பிடுறேன்னு..
பார்க்க பூமாதிரி தெரியாட்டாலும், மரிக்கொழுந்து பூ தான்..பச்சை உடம்பு.. அது வாசம் எந்த பூக்கும் வாராது.... வாட, வாட மெருகேரும் அது வாசம்..
அது மாதிரி தான் என் மாமனும்.. எங்க சாதிசனமும், ஊருசனமும் மெய்க்க பேசும் படிச்ச கிராமத்தான் .. ஆனாலும் இந்த பட்டிக்காட்டு பொட்டச்சியை நேசிக்கும் பூ மனசு..
அறைப்பாவாடை சட்டையில ஜைன்,ஜைன் கைதட்டும் பொம்மைக்காரன் கையில கட்டிவிட்ட ஜவ்வுமிட்டாய் வாட்சை நான் ஆசையா பார்த்து ரசிக்கையில, வெடுக்குன்னு என் கைய இழுத்து என் வாட்ச்சுமிட்டாய சப்பினவனை, அவன் நெஞ்சுள கைய வச்சு சடுக்குன்னு அவன தள்ளி, என் கைய அவன்கிட்டேருந்து நான் புடுங்கி அழுகும் போது, பதறி ஓடியாந்த என் அம்மா நீ கட்டிக்கப்போற மாமன் மவன் தானடி.. ஏன் இப்படி கரையிறன்னு என்னை முறைசொல்லி வைய்யும்போது, அப்பத்தேன் .. வகுடெடுத்து சீவி, டவுசர் சட்டை போட்டு நிக்கும் என் மரிக்கொழுந்து மாமனை நான் பார்த்தேன்..
அம்மா சொன்ன முறையும் புரியாம, நான் கரைஞ்ச கரை எந்த மூலைக்கு போச்சுன்னும் தெரியாம வெள்ளையா நான் பார்க்க, இந்த உரிமையன் தான்டி உனக்கேத்த முறைக்காரன்னு பத்து வயசிலயே கண்ணால ஜாடை சொல்லி மரிக்கொழுந்து மாமா சிரிக்க, அது சப்பி சாப்பிட்ட என் மிட்டாயி வாச்சு டிக்,டிக்குன்னு அது கண்ணுல ஓடுறத பார்த்து நானும் கிளுக்குன்னு சிரிச்சுபுட்டேன்..
அந்நேயிலேருந்து என் மாமாவோட விளையாடும்போதுஞ்சரி, மத்தவக என் மாமாவப் பத்தி பேசும்போதுஞ்சரி என் முறையையும், உரிமையையும் நான் விட்டுக்கொடுத்ததுமில்ல, அதை யாராச்சும் சீண்டும்போது தொட்டாச்சினுங்கியா என் கண்ணால அதுக்காக சினுங்க மறந்ததுமில்ல..
என் சிரிப்பு, சினுங்கல்,அழுகை எல்லாத்துலயும் என் மாமாவை நிறைச்சு வச்சுருந்தேன்.. என் மாமா மேல அம்புட்டுகொல்ல ஆசை எனக்கு..
ஆனா, முலை முட்டி, முழுப்பாவாடை சட்டை போட்டுகிட்டு, ஆம்பளை பசங்களோட விளையாடக் கூடாதுன்னு நிர்பந்தம் வந்த வயசிலதேன் என் மாமனை சரியா பார்க்காம, என் உரிமையையும், ஆசையயும், பாசத்தையும் மறைச்சு காட்டுற மேனாமினுக்கியானேன்..
ஆனாலும் என் மாமா என்னை எங்க பார்த்தாலும் கண்ஜாடை சிரிப்பால நான் தான்டி உனக்கு, நீ தான்டி என் சிங்காரின்னு சொல்ல மறந்ததுமில்ல..மறைச்சதுமில்ல..
நான் பத்தாவது படிக்கையில, வீட்டுக்கு அடுப்பெரிக்க சுள்ளியும், சருகும் பொருக்க, சினேகிதிகளோட ஆரஸ்பதி காட்டுக்கு போனேன்..
அங்கே என் மரிக்கொழுந்து கையில பன்னெண்டாம் வகுப்பு இயற்பியல் புத்தகத்தோட, முழுக்காலு டிரவுசரோட, காத்துல கோடு போட்டு, எங்க ஊரு மந்தையில நிக்கிற அம்பேத்காராட்டம் படிச்சிகிட்டு இருந்தாங்க..
சும்மா இல்லாம என் சினேகிதி ஒருத்தி "அடியே பொம்மி, அப்பவே எங்க அம்மா சொன்னுச்சு, பொழுது சாயப்போற நேரம் பாத்து காட்டுக்கு போறிகளேடி காத்து கருப்பு ஏதும் பயமூத்த போகுதுன்னு, இப்ப பாரு ஒரு கருப்பு புத்தகத்தோட நிக்குதுன்னு" என் மாமன வம்புக்கு இழுத்தா...
என்னதான் படிப்பாளி புள்ளனாலும், என் மாமா ஒன்னும் வாயில்லா பூச்சியில்லையே.. "ம்ம் என்ன கூடதான் பசங்க காட்டுக்கு போகாதடா, வயசு பசங்களை மோகினிங்க விடாதுன்னு சொன்னானுங்க, ஆனா இப்படி என் மோகினியோட, பல பிடாரிகளும், காட்டேரிகளும் என்னைத்தேடி வரும்னு பசங்களும் சொல்லலை, நானும் எதிர் பார்க்கலையேன்னு" விறைப்பா சொன்னாங்க..
வாயக்குடுத்தா என் மாமன்கிட்டேருந்து மீள முடியாதுன்னு "அய்யா, புத்தக சாமியாரே நீங்க உங்க வேலையை பாருங்க, நாங்க எங்க வேலையை பார்க்குறோம்.. அம்மாடி பொம்மி, இங்க இருக்குற சுள்ளிய நீ பொருக்கு, நாங்க கொஞ்சம் உள்ள போயி பொருக்குறோம்னு" எனக்கு... இல்ல, இல்ல எங்களுக்கு சாதகமா, குத்தலா சொல்லிட்டு போயிட்டா...
ஒன்னுந்தெரியாதவளாட்டம் தலையாட்டிவச்சேன் நானும்..
முறைப்பையன் அக்கத்துல நிக்க, வயசு நாணத்துல சிக்க, எதையோ பொருக்காம இதை பொருக்குறேனேன்னு கை நடு, நடுங்க சுள்ளியை பொருக்குனேன்..
செவ்வந்தியையும்,மரிக்கொழுந்தையும் கலந்து நான் தலையில கட்டி வச்சிருந்த கதம்பத்தில பட்டாம்பூச்சி ஒன்னு பதம் பார்த்து ஒக்காந்துருக்க... அதை எனக்கு புடிச்சுத்தர என் மாமா எனை நெருங்கி என் தலையில கைய வைக்க , பதறி நான் திரும்பி, மூச்சு சரசரக்க, உடம்பு படபடக்க, கொஞ்சம் விலக நினைக்கயில, பயந்துட்டேனோன்னு நினைச்சு ஆதரவா, உரிமையா என் கை பிடிச்சாங்க என் மரிக்கொழுந்து மச்சான்..
உரியவன் கைபட்டதுல மனசு மட்டும் பூக்காம, உடம்பும் பூக்க ஆரம்பிச்சுருச்சு..
பூ, பூக்குற வலி பொருக்க முடியாம, என் மாமன் கையை இருக புடிச்சு அம்மான்னு நான் கத்த... விவரம் ஏதும் விளங்காம என் மாமன் கண் நடுங்க... ஓடி வந்த சினேகிதிகள் என்னடியாச்சுன்னு கேட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க..
விஷயம் புரியாம எங்க பின்னாடியே என் வீடு வரையிலயும் வந்த மாமனுக்கு பின்புதான் புரிஞ்சது நான் பூப்படைஞ்சது…
(படிகள் உண்டு முடிவைத் தொட..)
--------------- ***--------------
Saturday, December 1, 2007
வாசற்படி - 2
பச்சை ஓலைகுச்சி வீட்டுக்குள்ள வெளக்கமாரு துணையிருக்க, ஒலக்கை அணைபோட, திரைச்சேலை தடுப்போட ஒண்டியா உட்காந்துருந்தேன் நானு.. என் மாமன்ங்கிற ஒத்தையடி பாதையில மரிக்கொழுந்து வாசம் வயப்பட்டு மயங்கிக் கிடந்தது என் மனசு.. திடுக்குன்னு ஒரு சலசலப்பு..
விடுக்குன்னு என்னை என் சுய புத்திக்கு கொண்டு வந்தது அந்த சத்தம்.. "அத்தே..அத்தே"ன்னு என் அம்மாவை கூப்பிட்டுகிட்டே எங்க வூட்டுக்குள்ள நுழைஞ்ச என் மாமனோட சத்தந்தேன் அது.. சத்தம் கேட்டு, ஓலைக்குச்சி இடுக்குள காமிரா பார்வையா என் மாமன பார்த்து ரசிக்க நான் முண்டிகிட்டு கிடந்தா...அடுப்பாங்கரையிலதானே அத்தை இருக்காக, நம்ப ஆசைக்கிளியை திரைச்சீலை வழியாவாவது பார்ப்போம்னு நினைக்காம, பொட்டபுள்ளையாட்டம் வெட்கப்பட்டுகிட்டு, என் ஓலைகுச்சியக்கூட பார்க்க சங்கோஜப்பட்டுக்கிட்டு என் அம்மாகிட்ட உலரிகிட்டே பதில் சொல்லிகிட்டு இருந்தாங்க..
என் அத்தை, சமைஞ்சிருக்க எனக்குன்னு உளுந்தங்களியும், கோழிக்கரி குழம்பும் குடுத்துவிட்டுருக்காங்க.. அதை சொல்றதுக்கு ஏதோ வாத்தியாருகிட்ட திக்கித் திணறி பேசுற மாதிரி எத்தனை திக்கலு, எத்தனை விக்கலு.. அய்யோ!! என் மக்கு மாமான்னு இருந்தது எனக்கு..
ஆனாலும் பாருங்க இந்த சாமிக்குத்தான் என்மேல எம்புட்டு கொல்ல பிரியம்.. இல்லைனா.. இப்படி உரியவன் கைபட்டுத்தேன் நான் உக்காரணும்னு என் தலையில எழுதி வச்சுருப்பாரா சொல்லுங்க..
என்னதேன் ஊருகட்டுப்பாடு, உறவு கட்டுப்பாடுன்னு இருந்தாலும், சின்ன வயசில எங்களுக்குள்ள போடப்பட்ட பதியம் எங்க உசிருலயும், மனசிலயும், கண்ஜாடை, வாய்ஜாடையா நல்லாவே வேருவிட ஆரம்பிச்சுருச்சு..
என் சினேகிதிங்க யாராவது.. ஏன் என் சினேகிதிங்கன்னு சொல்லணும்... என்னை நானே நீ உன் மரிக்கொழுந்து மாமனை காதலிக்கிறியான்னு கேட்டா, இல்லைன்னுதேன் சொல்லுவேன்.. எனக்குள்ள இருக்குற என் மாமனோட நினைப்பும், என் மாமா என்மேல வச்சிருக்கிற நேசமும் காதல்ங்கிற ஒரு சின்ன வார்த்தையில அடங்காதுங்கிறது என் ஆதங்கம்... கதையில வர்ற ஆண்டாளு ஆண்டவன் கண்ணனை எம்புட்டு நேசிச்சாகன்னும் எனக்கு சொல்லத்தெரியலை.. நான் என் மாமனை என் உசிரக்காட்டிலும் பெருசா நேசிச்சேன்னு மத்தவகளுக்கு விளங்குறாப்புலயும் எனக்கு சொல்லத்தெரியலை..
மத்த காதல் ஜோடிகளாட்டம் தொட்டுக்கிறது, பட்டுக்கிறதுன்னு எங்களுக்குள்ள இல்லாட்டியும் எங்க ஊருக்காரவக மத்தியிலயும், உறவுக்காரவக மத்தியிலயும் எங்க மாமா என்னைத்தேன் கட்டிக்கும்னு எல்லாத்துக்கும் ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்துச்சு...அதுமாதிரியே என்னதான் தொட்டு உறவாடாட்டாலும், மாமாவும் நானும் ஒரே ஊரில இருந்ததால எனக்கும் எந்த ஒரு ஏக்க உணர்வும் ஏற்படலை... மாமாவை பார்க்குறதே போதும்.. எப்படியும் இன்னும் கொஞ்ச நாளில மாமாவோடதானே இருக்கப்போறேன், அப்பறம் என்ன கவலைன்னு இருந்தது..
ஆனா காலேஜ் படிப்புக்குன்னு மாமாவை பட்டணத்தில இருக்குற காலேஜில சேர்த்து ஹாஸ்டலில தங்கி படிக்க வைக்கப்போறேன்னு என் பெரிய மாமா (என் மரிக்கொழுந்து மாமாவோட அப்பா) எங்க அப்பாருகிட்ட சொல்லும்போதுதான் எனக்குள்ள ஏதோ குடைய ஆரம்பிச்சுச்சு. எனக்குள்ள என் மாமனை பார்க்காமா இருக்க முடியுமாங்கிற பயமும், ஏக்கமும் வந்துருச்சு...
மேற்படிப்பு படிச்சா, பட்டிக்காட்டயும், பட்டிக்காட்டு மனுசாலயும் திரும்பிக் கூட பார்க்கமாட்டாகன்னு உள்குத்தலா உறவுக்காரவங்களும்... ஆம்பளைகளும், பொம்பளைகளும் ஒன்னா சேர்ந்து படிக்கிற காலேஜில படிச்சா பட்டணத்து பொட்டப்புள்ளைக கிராமத்து பசங்கள ஒரேயடியா வலைச்சு போட்டுறுவாகன்னு என் சிநேகிதிகளும் ஏதோ பிணாத்திகிட்டு கிடந்தாக... என் புத்தி அதுக்கெல்லாம் செவி சாய்க்காம என் மாமனையே சுத்தி வந்து பிரிவுங்கிற வேட்கையில புழுங்க ஆரம்பிச்சுருச்சு..
எதிர்காலத்துக்காக நிகழ்காலத்தை விட்டுக்கொடுத்துதானே ஆகணும்ங்கிற கட்டாய முடிவுல இரண்டுபேருமே பிரிவை ஏத்துகிட்டு நாட்களை கடத்தினோம்.
ஆனா விதி யாரைத்தேன் விட்டுத்தொலைக்குது... இந்த பிரிவு எங்களை வெகுசீக்கிரமா சேர்த்துவைக்கப்போற அறிகுறின்னு நம்புன எங்க நம்பிக்கைக்கு சகுணத்தடையா வந்தது, என் அத்தையோட ஒன்னுவிட்டத்தம்பி வீட்டு வருகை...
பட்டணத்தில பஸ் கண்டக்குட்டரா வேலைப் பார்த்தவரு, ஒன்னா சாதி சனத்தோட பொழைச்சு வாழலாமுன்னு பொஞ்சாதி சொன்ன யோசனையின் பேருல எங்க சிதம்பரப்பட்டிக்கு பக்கத்துல இருக்குற உசிலம்பட்டியில வந்து டேராபோட்டுட்டாக..
அந்த சின்னம்மாவுக்கு கொஞ்சம் வாயி அதிகமாம். சாதிசனத்தோட எப்பவும் ஒண்டாதாம்.. பட்டணத்துல இருந்ததுல ஏதோ தகராறும், சிக்கலும் ஆகிப்போனதாலதான் இப்படி பட்டிக்காட்டுல டேரான்னு எங்க சொந்தக்காரவுக எல்லாம் சொன்னாக..
என் மாமா இரண்டாவது வருசம் காலேஜ் படிக்கும்போதுதான் எங்க இரண்டு வீட்டு உறவுலயும் பல அடிகள் விழ ஆரம்பிச்சுச்சு..ம்ம்.. அடி மேல அடி விழுந்தா அம்மியே நகரும்போது மனுசாலுக எம்மாத்திரம்..
என் மாமா வீட்டில இருந்த பசுமாடு ஒன்னு மாசமா இருந்து செத்துப்போச்சு.. வீட்டில இருந்த நிறமாச பசுமாடு செத்துப்போனது குடும்பத்துக்கு ஆகாதுன்னும், அது குடும்பத்து ஆம்பளையோட பிறந்த வீட்டு கோளாறுன்னும்.. அதுவும் நான் சமைஞ்ச நேரம் சரியில்லன்னும் புறலியை கிளப்பிவிட்டுட்டாக அந்த புதுசா முளைச்ச சின்னம்மா.. அவுகளுக்கும் என் வயசில ஒரு பொண்ணு இருக்கு...
நான் வயசுக்கு வந்துருந்தப்ப எங்க அத்தை வீட்டில நடந்த சின்ன சின்ன கஷ்டத்தையெல்லாம் ஊதி பெருசாக்குனாங்க அந்த சின்னம்மா... வீட்டுக்குள்ள நல்ல மனசும், நல்ல பார்வையும் இல்லாத மனுசாலுக நுழைஞ்சா இப்படித்தேன் நடக்கும்னு புரியாம..அந்த சின்னம்மா பேச்ச கேட்டுகிட்டு அதிலேருந்து எங்க அத்தை எங்க அம்மாவோட விட்டாகுறை, தொட்டாகுறைன்னு எதுக்கெடுத்தாலும் சின்ன சின்னதா சண்டை போட்டாக..
இது எல்லாத்துக்கும் மேல சூடு ஏத்துறாப்புல ஒன்னு நடந்தது பாருங்க.... கடவுளே, கடவுளே!!! எங்க அம்மாவுக்கு மஞ்சக்காமாலை வந்ததால, தெம்மாவூரு சாமியாருகிட்ட மந்திருச்சு கயிறு கட்டிகிட்டு, பத்தியச்சோறும் அவருகொடுக்குற பச்சிலையும் சாப்பிட்டா குணமா போகும்னு ஊருக்காரவக சொன்னத நம்பி எங்க அப்பா, அம்மாவ கூட்டிகிட்டு தெம்மாவூரு போயிட்டு வந்தாரு..
இது நடந்து ஒரு இரண்டு நாளில, மாடுகளை ஓட்டியார வயலுக்கு போன எங்க அத்தை வழுக்கி விட்டு கீழே விழுந்து, காலில சுளுக்காகி படுத்துட்டாங்க.. "என்னைப் பத்தி பேசுனது பொறுக்காம, நடந்த சண்டைகளையெல்லாம் காரணமா வச்சு, என் அம்மா நோவுல படுத்ததுக்கு எங்க அத்தைதேன் காரணம்னு வஞ்சம் வச்சு, எங்க அப்பாரும் அம்மாவும் சாமியாருகிட்ட போயி மந்திருச்சு எங்க அத்தை வீட்டு மேல சூனியம் வச்சு, மந்திருச்ச தகடை எங்க அத்தை வீட்டு வயலில புதச்சுட்டாக... அதுதேன் அத்தையோட படுக்கைக்கு காரணம்"னு வதந்தியை விதச்சுட்டாக புதுசா வந்த மகராசி...
அதுக்கு சேத்து சுதி பாடுறதுக்குன்னு வயலுக்குப் போன என் பெரிய மாமாவை பாம்பு கடிக்க போயிருச்சு.. நல்ல வேளை பாம்பு கடிக்கலை, அதுக்காங்குள்ளியும் அடிச்சு கொன்னுபுட்டாக.. கடிக்க வந்தது ஓலை பாம்பானாலும் அது வந்ததுக்கு காரணம் வயலில புதஞ்சிருக்குற தகடுன்னு காரணம்காட்டி சண்டை போட்டாக எங்க அத்தை..
"என்னதேன் இன்னைக்கு, நேத்து வருத்தம்னாலும், சொந்த உறவுல சூனியம் வைக்கிற வஞ்சகக்காரி நான் இல்லை"ன்னு எங்க அம்மா வாயிலயும், மாருலயும் அடிச்சுகிட்டு கத்த.. சண்டை முத்தி மண்ணை வாரி இரைச்சுக்குற அளவுக்கு போயிடுச்சு... இது வரைக்கும் நடந்த சண்டைக ஒன்னுல கூட இரண்டு வீட்டு ஆம்பளைகளும் கலந்துக்கலை, அதையும் பெரிசு படுத்திக்கலை.. அவுக பாட்டுக்கு இருந்தாக.. ஆனா இந்த பெரிய சண்டை எல்லாத்தையும் ரொம்பவே உலுக்கிடுச்சு.. சண்டையில நேரடியா எங்க அத்தைக்குத் துணையா அந்த சின்னம்மா கலந்துகிட்டு வஞ்சகமா பல வார்த்தைகளை கூற, அதைகேட்டு "உன் பொண்ணை என் தம்பி வீட்டுல வாழ வைக்கத்தானடி இப்படி சகுனியாட்டம் ஆடுற கூனின்னு" எங்க அம்மா பொட்டுன்னு உண்மையை உடைக்க, அதை கேட்டு அந்த சின்னம்மா சாமியாட, கடைசியில சண்டை வெட்டுக்காயா முடிஞ்சுருச்சு..
ஆமாங்க ... இரண்டு குடும்பமுமே பெத்த பிள்ளைகளை, அவுகளுக்குள்ள இருக்குற ஆசையை, உறவை, பழைய குடும்ப உறவை எதையுமே நினைச்சு பார்க்காம, ரெண்டு குடும்பத்து பெரிய ஆம்பளைகளையும் சக்களத்தி இழுப்பா வீரமாகாளி கோயிலுக்கு இழுத்துட்டு போயி, ரெண்டு வீட்டு உறவுக்கும் செத்தா இல்லை, வாழந்தா இல்லைன்னு முறைப்பாடு போட்டுட்டு வந்துட்டாங்க.....
(படிகள் உண்டு முடிவைத் தொட..)
--------------***-------------