Sunday, December 2, 2007

நெஞ்சத்திரை - கண்ணுக்குத் தெரியும் மாயையுமல்ல, கற்பனை கலந்த நிஜமுமல்ல..

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னாடி என் ம‌ன‌தை பாதித்த‌ ஒரு அவல நிகழ்ச்சியை கதை வடிவில் செதுக்க முயற்சித்துள்ளேன்..


சொர்க்கமா.. நரகமா..

வாசற்படி - 1

என்னமோ, எப்பவோ, எப்படியோ தெரியலை..
விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து என் முருகேசு மாமாவை நான் மரிக்கொழுந்து மாமான்னு தான் கூப்பிடுவேன்..
எல்லாரும் நான் நையாண்டிக்குத்தேன் அப்படி என் மாமாவை கூப்பிடுறேன்னு நினைச்சாங்க..
ஆனா எனக்குத்தேன் தெரியும் ஏன் அப்படி கூப்பிடுறேன்னு..
பார்க்க பூமாதிரி தெரியாட்டாலும், மரிக்கொழுந்து பூ தான்..பச்சை உடம்பு.. அது வாசம் எந்த பூக்கும் வாராது.... வாட, வாட மெருகேரும் அது வாசம்..
அது மாதிரி தான் என் மாமனும்.. எங்க சாதிசனமும், ஊருசனமும் மெய்க்க பேசும் படிச்ச கிராமத்தான் .. ஆனாலும் இந்த பட்டிக்காட்டு பொட்டச்சியை நேசிக்கும் பூ மனசு..

அறைப்பாவாடை சட்டையில ஜைன்,ஜைன் கைதட்டும் பொம்மைக்காரன் கையில கட்டிவிட்ட ஜவ்வுமிட்டாய் வாட்சை நான் ஆசையா பார்த்து ரசிக்கையில, வெடுக்குன்னு என் கைய இழுத்து என் வாட்ச்சுமிட்டாய சப்பினவனை, அவன் நெஞ்சுள கைய வச்சு ச‌டுக்குன்னு அவன தள்ளி, என் கைய அவன்கிட்டேருந்து நான் புடுங்கி அழுகும் போது, பதறி ஓடியாந்த என் அம்மா நீ கட்டிக்கப்போற மாமன் மவன் தானடி.. ஏன் இப்படி கரையிறன்னு என்னை முறைசொல்லி வைய்யும்போது, அப்பத்தேன் .. வகுடெடுத்து சீவி, டவுசர் சட்டை போட்டு நிக்கும் என் மரிக்கொழுந்து மாமனை நான் பார்த்தேன்..

அம்மா சொன்ன முறையும் புரியாம, நான் கரைஞ்ச கரை எந்த மூலைக்கு போச்சுன்னும் தெரியாம வெள்ளையா நான் பார்க்க, இந்த உரிமையன் தான்டி உனக்கேத்த முறைக்காரன்னு பத்து வயசிலயே கண்ணால ஜாடை சொல்லி மரிக்கொழுந்து மாமா சிரிக்க, அது சப்பி சாப்பிட்ட என் மிட்டாயி வாச்சு டிக்,டிக்குன்னு அது கண்ணுல ஓடுறத பார்த்து நானும் கிளுக்குன்னு சிரிச்சுபுட்டேன்..

அந்நேயிலேருந்து என் மாமாவோட விளையாடும்போதுஞ்ச‌ரி, ம‌த்த‌வ‌க என் மாமாவ‌ப் ப‌த்தி பேசும்போதுஞ்ச‌ரி என் முறையையும், உரிமையையும் நான் விட்டுக்கொடுத்த‌துமில்ல‌, அதை யாராச்சும் சீண்டும்போது தொட்டாச்சினுங்கியா என் க‌ண்ணால அதுக்காக‌ சினுங்க‌ ம‌ற‌ந்த‌துமில்ல‌..
என் சிரிப்பு, சினுங்க‌ல்,அழுகை எல்லாத்துல‌யும் என் மாமாவை நிறைச்சு வ‌ச்சுருந்தேன்.. என் மாமா மேல‌ அம்புட்டுகொல்ல‌ ஆசை என‌க்கு..

ஆனா, முலை முட்டி, முழுப்பாவாடை ச‌ட்டை போட்டுகிட்டு, ஆம்ப‌ளை ப‌சங்க‌ளோட விளையாட‌க் கூடாதுன்னு நிர்ப‌ந்த‌ம் வ‌ந்த‌ வ‌ய‌சிலதேன் என் மாமனை ச‌ரியா பார்க்காம‌, என் உரிமையையும், ஆசைய‌யும், பாச‌த்தையும் ம‌றைச்சு காட்டுற‌ மேனாமினுக்கியானேன்..
ஆனாலும் என் மாமா என்னை எங்க‌ பார்த்தாலும் க‌ண்ஜாடை சிரிப்பால‌ நான் தான்டி உன‌க்கு, நீ தான்டி என் சிங்காரின்னு சொல்ல ம‌ற‌ந்த‌துமில்ல..ம‌றைச்ச‌துமில்ல‌..

நான் ப‌த்தாவ‌து ப‌டிக்கையில‌, வீட்டுக்கு அடுப்பெரிக்க சுள்ளியும், ச‌ருகும் பொருக்க‌, சினேகிதிக‌ளோட ஆர‌ஸ்ப‌தி காட்டுக்கு போனேன்..
அங்கே என் ம‌ரிக்கொழுந்து கையில பன்னெண்டாம் வகுப்பு இய‌ற்பிய‌ல் புத்த‌கத்தோட‌, முழுக்காலு டிர‌வுச‌ரோட, காத்துல கோடு போட்டு, எங்க ஊரு ம‌ந்தையில‌ நிக்கிற அம்பேத்காராட்ட‌ம் ப‌டிச்சிகிட்டு இருந்தாங்க‌..
சும்மா இல்லாம என் சினேகிதி ஒருத்தி "அடியே பொம்மி, அப்ப‌வே எங்க‌ அம்மா சொன்னுச்சு, பொழுது சாய‌ப்போற‌ நேர‌ம் பாத்து காட்டுக்கு போறிகளேடி காத்து க‌ருப்பு ஏதும் ப‌ய‌மூத்த போகுதுன்னு, இப்ப‌ பாரு ஒரு க‌ருப்பு புத்த‌க‌த்தோட‌ நிக்குதுன்னு" என் மாம‌ன‌ வ‌ம்புக்கு இழுத்தா...

என்னதான் ப‌டிப்பாளி புள்ளனாலும், என் மாமா ஒன்னும் வாயில்லா பூச்சியில்லையே.. "ம்ம் என்ன‌ கூட‌தான் ப‌ச‌ங்க‌ காட்டுக்கு போகாத‌டா, வ‌ய‌சு ப‌ச‌ங்க‌ளை மோகினிங்க விடாதுன்னு சொன்னானுங்க‌, ஆனா இப்ப‌டி என் மோகினியோட‌, ப‌ல‌ பிடாரிக‌ளும், காட்டேரிக‌ளும் என்னைத்தேடி வ‌ரும்னு ப‌ச‌ங்க‌ளும் சொல்லலை, நானும் எதிர் பார்க்க‌லையேன்னு" விறைப்பா சொன்னாங்க‌..
வாய‌க்குடுத்தா என் மாம‌ன்கிட்டேருந்து மீள‌ முடியாதுன்னு "அய்யா, புத்தக‌ சாமியாரே நீங்க உங்க வேலையை பாருங்க, நாங்க‌ எங்க‌ வேலையை பார்க்குறோம்.. அம்மாடி பொம்மி, இங்க‌ இருக்குற‌ சுள்ளிய நீ பொருக்கு, நாங்க கொஞ்சம் உள்ள‌ போயி பொருக்குறோம்னு" என‌க்கு... இல்ல, இல்ல எங்க‌ளுக்கு சாத‌கமா, குத்தலா சொல்லிட்டு போயிட்டா...

ஒன்னுந்தெரியாத‌வ‌ளாட்ட‌ம் த‌லையாட்டிவ‌ச்சேன் நானும்..

முறைப்பை‌ய‌ன் அக்க‌த்துல‌ நிக்க‌, வ‌ய‌சு நாண‌த்துல சிக்க‌, எதையோ பொருக்காம இதை பொருக்குறேனேன்னு கை நடு, ந‌டுங்க சுள்ளியை பொருக்குனேன்..
செவ்வந்தியையும்,ம‌ரிக்கொழுந்தையும் க‌ல‌ந்து நான் த‌லையில க‌ட்டி வ‌ச்சிருந்த க‌த‌ம்ப‌த்தில பட்டாம்பூச்சி ஒன்னு ப‌த‌ம் பார்த்து ஒக்காந்துருக்க... அதை என‌க்கு புடிச்சுத்த‌ர என் மாமா எனை நெருங்கி என் தலையில கைய வைக்க , ப‌த‌றி நான் திரும்பி, மூச்சு சர‌ச‌ர‌க்க, உட‌ம்பு ப‌ட‌ப‌ட‌க்க, கொஞ்சம் விலக நினைக்க‌யில‌, ப‌ய‌ந்துட்டேனோன்னு நினைச்சு ஆத‌ர‌வா, உரிமையா என் கை பிடிச்சாங்க என் மரிக்கொழுந்து மச்சான்..
உரிய‌வ‌ன் கைபட்ட‌துல‌ ம‌ன‌சு ம‌ட்டும் பூக்காம‌, உட‌ம்பும் பூக்க ஆர‌ம்பிச்சுருச்சு..
பூ, பூக்குற‌ வ‌லி பொருக்க‌ முடியாம, என் மாம‌ன் கையை இருக புடிச்சு அம்மான்னு நான் கத்த... விவரம் ஏதும் விளங்காம என் மாமன் கண் நடுங்க... ஓடி வந்த சினேகிதிகள் என்னடியாச்சுன்னு கேட்டு என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போனாங்க..
விஷயம் புரியாம எங்க பின்னாடியே என் வீடு வரையிலயும் வந்த மாமனுக்கு பின்புதான் புரிஞ்ச‌து நான் பூப்படைஞ்ச‌து…

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)
--------------- ***--------------

வாசற்படி - 2

Saturday, December 1, 2007

வாசற்படி - 2

பச்சை ஓலைகுச்சி வீட்டுக்குள்ள வெளக்கமாரு துணையிருக்க, ஒலக்கை அணைபோட, திரைச்சேலை தடுப்போட ஒண்டியா உட்காந்துருந்தேன் நானு.. என் மாமன்ங்கிற ஒத்தையடி பாதையில மரிக்கொழுந்து வாசம் வயப்பட்டு மயங்கிக் கிடந்தது என் மனசு.. திடுக்குன்னு ஒரு சலசலப்பு..


விடுக்குன்னு என்னை என் சுய புத்திக்கு கொண்டு வந்தது அந்த சத்தம்.. "அத்தே..அத்தே"ன்னு என் அம்மாவை கூப்பிட்டுகிட்டே எங்க வூட்டுக்குள்ள நுழைஞ்ச என் மாமனோட சத்தந்தேன் அது.. சத்தம் கேட்டு, ஓலைக்குச்சி இடுக்குள காமிரா பார்வையா என் மாமன பார்த்து ரசிக்க நான் முண்டிகிட்டு கிடந்தா...அடுப்பாங்கரையிலதானே அத்தை இருக்காக, நம்ப ஆசைக்கிளியை திரைச்சீலை வழியாவாவது பார்ப்போம்னு நினைக்காம, பொட்டபுள்ளையாட்டம் வெட்கப்பட்டுகிட்டு, என் ஓலைகுச்சியக்கூட பார்க்க சங்கோஜப்பட்டுக்கிட்டு என் அம்மாகிட்ட உலரிகிட்டே பதில் சொல்லிகிட்டு இருந்தாங்க..


என் அத்தை, சமைஞ்சிருக்க எனக்குன்னு உளுந்தங்களியும், கோழிக்கரி குழம்பும் குடுத்துவிட்டுருக்காங்க.. அதை சொல்றதுக்கு ஏதோ வாத்தியாருகிட்ட திக்கித் திணறி பேசுற மாதிரி எத்தனை திக்கலு, எத்தனை விக்கலு.. அய்யோ!! என் மக்கு மாமான்னு இருந்தது எனக்கு..

ஆனாலும் பாருங்க இந்த சாமிக்குத்தான் என்மேல எம்புட்டு கொல்ல பிரிய‌ம்.. இல்லைனா.. இப்ப‌டி உரிய‌வ‌ன் கைப‌ட்டுத்தேன் நான் உக்காரணும்னு என் த‌லையில‌ எழுதி வ‌ச்சுருப்பாரா சொல்லுங்க..

என்னதேன் ஊருகட்டுப்பாடு, உறவு கட்டுப்பாடுன்னு இருந்தாலும், சின்ன வ‌ய‌சில எங்க‌ளுக்குள்ள போட‌ப்ப‌ட்ட ப‌திய‌ம் எங்க உசிருல‌யும், ம‌ன‌சிலயும், க‌ண்ஜாடை, வாய்ஜாடையா நல்லாவே வேருவிட ஆர‌ம்பிச்சுருச்சு..
என் சினேகிதிங்க யாராவ‌து.. ஏன் என் சினேகிதிங்க‌ன்னு சொல்ல‌ணும்... என்னை நானே நீ உன் ம‌ரிக்கொழுந்து மாம‌னை காத‌லிக்கிறியான்னு கேட்டா, இல்லைன்னுதேன் சொல்லுவேன்.. எனக்குள்ள இருக்குற என் மாம‌னோட நினைப்பும், என் மாமா என்மேல வ‌ச்சிருக்கிற நேசமும் காத‌ல்ங்கிற ஒரு சின்ன வார்த்தையில அட‌ங்காதுங்கிற‌து என் ஆத‌ங்க‌ம்... க‌தையில வர்ற ஆண்டாளு ஆண்டவன் க‌ண்ணனை எம்புட்டு நேசிச்சாகன்னும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை.. நான் என் மாம‌னை என் உசிர‌க்காட்டிலும் பெருசா நேசிச்சேன்னு ம‌த்த‌வ‌க‌ளுக்கு விள‌ங்குறாப்புல‌யும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை..

ம‌த்த காத‌ல் ஜோடிக‌ளாட்ட‌ம் தொட்டுக்கிற‌து, ப‌ட்டுக்கிற‌துன்னு எங்க‌ளுக்குள்ள இல்லாட்டியும் எங்க ஊருக்காரவக ம‌த்தியில‌யும், உற‌வுக்காரவக ம‌த்தியில‌யும் எங்க மாமா என்னைத்தேன் க‌ட்டிக்கும்னு எல்லாத்துக்கும் ஒரு அசைக்க முடியாத ந‌ம்பிக்கை இருந்துச்சு...அதுமாதிரியே என்னதான் தொட்டு உறவாடாட்டாலும், மாமாவும் நானும் ஒரே ஊரில இருந்த‌தால எனக்கும் எந்த ஒரு ஏக்க உண‌ர்வும் ஏற்ப‌ட‌லை... மாமாவை பார்க்குற‌தே போதும்.. எப்ப‌டியும் இன்னும் கொஞ்ச நாளில மாமாவோட‌தானே இருக்க‌ப்போறேன், அப்ப‌ற‌ம் என்ன க‌வ‌லைன்னு இருந்த‌து..

ஆனா காலேஜ் ப‌டிப்புக்குன்னு மாமாவை ப‌ட்ட‌ண‌த்தில இருக்குற காலேஜில சேர்த்து ஹாஸ்ட‌லில த‌ங்கி ப‌டிக்க வைக்க‌ப்போறேன்னு என் பெரிய மாமா (என் ம‌ரிக்கொழுந்து மாமாவோட‌ அப்பா) எங்க அப்பாருகிட்ட சொல்லும்போதுதான் என‌க்குள்ள ஏதோ குடைய ஆர‌ம்பிச்சுச்சு. என‌க்குள்ள என் மாம‌னை பார்க்காமா இருக்க முடியுமாங்கிற ப‌ய‌மும், ஏக்க‌மும் வந்துருச்சு...

மேற்ப‌டிப்பு ப‌டிச்சா, ப‌ட்டிக்காட்ட‌யும், ப‌ட்டிக்காட்டு ம‌னுசால‌யும் திரும்பிக் கூட பார்க்கமாட்டாக‌ன்னு உள்குத்த‌லா உற‌வுக்கார‌வ‌ங்களும்... ஆம்ப‌ளைக‌ளும், பொம்ப‌ளைக‌ளும் ஒன்னா சேர்ந்து ப‌டிக்கிற காலேஜில ப‌டிச்சா ப‌ட்ட‌ண‌த்து பொட்ட‌ப்புள்ளைக கிராம‌த்து ப‌சங்க‌ள ஒரேய‌டியா வ‌லைச்சு போட்டுறுவாக‌ன்னு என் சிநேகிதிக‌ளும் ஏதோ பிணாத்திகிட்டு கிடந்தாக... என் புத்தி அதுக்கெல்லாம் செவி சாய்க்காம என் மாம‌னையே சுத்தி வ‌ந்து பிரிவுங்கிற வேட்கையில புழுங்க ஆர‌ம்பிச்சுருச்சு..

எதிர்கால‌த்துக்காக நிக‌ழ்கால‌த்தை விட்டுக்கொடுத்துதானே ஆக‌ணும்ங்கிற கட்டாய முடிவுல இர‌ண்டுபேருமே பிரிவை ஏத்துகிட்டு நாட்க‌ளை க‌ட‌த்தினோம்.

ஆனா விதி யாரைத்தேன் விட்டுத்தொலைக்குது... இந்த பிரிவு எங்க‌ளை வெகுசீக்கிர‌மா சேர்த்துவைக்க‌ப்போற அறிகுறின்னு ந‌ம்புன எங்க ந‌ம்பிக்கைக்கு ச‌குண‌த்த‌டையா வ‌ந்த‌து, என் அத்தையோட ஒன்னுவிட்ட‌த்த‌ம்பி வீட்டு வ‌ருகை...

ப‌ட்ட‌ணத்தில ப‌ஸ் க‌ண்ட‌க்குட்ட‌ரா வேலைப் பார்த்த‌வ‌ரு, ஒன்னா சாதி ச‌ன‌த்தோட பொழைச்சு வாழ‌லாமுன்னு பொஞ்சாதி சொன்ன யோச‌னையின் பேருல எங்க சித‌ம்ப‌ர‌ப்ப‌ட்டிக்கு ப‌க்க‌த்துல இருக்குற உசில‌ம்ப‌ட்டியில வ‌ந்து டேராபோட்டுட்டாக..

அந்த சின்னம்மாவுக்கு கொஞ்ச‌ம் வாயி அதிக‌மாம். சாதிச‌ன‌த்தோட எப்ப‌வும் ஒண்டாதாம்.. ப‌ட்ட‌ண‌த்துல இருந்த‌துல ஏதோ தக‌ராறும், சிக்க‌லும் ஆகிப்போன‌தாலதான் இப்ப‌டி பட்டிக்காட்டுல டேரான்னு எங்க சொந்த‌க்கார‌வுக எல்லாம் சொன்னாக..
என் மாமா இர‌ண்டாவ‌து வ‌ருச‌ம் காலேஜ் ப‌டிக்கும்போதுதான் எங்க இர‌ண்டு வீட்டு உற‌வுல‌யும் ப‌ல அடிக‌ள் விழ ஆர‌ம்பிச்சுச்சு..ம்ம்.. அடி மேல அடி விழுந்தா அம்மியே ந‌க‌ரும்போது ம‌னுசாலுக எம்மாத்திர‌ம்..

என் மாமா வீட்டில இருந்த ப‌சுமாடு ஒன்னு மாச‌மா இருந்து செத்துப்போச்சு.. வீட்டில இருந்த நிற‌மாச ப‌சுமாடு செத்துப்போன‌து குடும்ப‌த்துக்கு ஆகாதுன்னும், அது குடும்ப‌த்து ஆம்ப‌ளையோட பிற‌ந்த வீட்டு கோளாறுன்னும்.. அதுவும் நான் ச‌மைஞ்ச நேர‌ம் ச‌ரியில்ல‌ன்னும் புற‌லியை கிள‌ப்பிவிட்டுட்டாக அந்த புதுசா முளைச்ச சின்ன‌ம்மா.. அவுக‌ளுக்கும் என் வ‌ய‌சில ஒரு பொண்ணு இருக்கு...

நான் வ‌ய‌சுக்கு வ‌ந்துருந்த‌ப்ப எங்க அத்தை வீட்டில ந‌டந்த சின்ன சின்ன க‌ஷ்ட‌த்தையெல்லாம் ஊதி பெருசாக்குனாங்க அந்த சின்ன‌ம்மா... வீட்டுக்குள்ள ந‌ல்ல ம‌ன‌சும், ந‌ல்ல பார்வையும் இல்லாத ம‌னுசாலுக நுழைஞ்சா இப்ப‌டித்தேன் ந‌ட‌க்கும்னு புரியாம..அந்த சின்னம்மா பேச்ச கேட்டுகிட்டு அதிலேருந்து எங்க அத்தை எங்க அம்மாவோட விட்டாகுறை, தொட்டாகுறைன்னு எதுக்கெடுத்தாலும் சின்ன சின்ன‌தா ச‌ண்டை போட்டாக..

இது எல்லாத்துக்கும் மேல சூடு ஏத்துறாப்புல ஒன்னு ந‌ட‌ந்த‌து பாருங்க‌.... க‌ட‌வுளே, க‌ட‌வுளே!!! எங்க அம்மாவுக்கு ம‌ஞ்ச‌க்காமாலை வ‌ந்த‌தால, தெம்மாவூரு சாமியாருகிட்ட ம‌ந்திருச்சு க‌யிறு க‌ட்டிகிட்டு, ப‌த்திய‌ச்சோறும் அவ‌ருகொடுக்குற ப‌ச்சிலையும் சாப்பிட்டா குண‌மா போகும்னு ஊருக்கார‌வ‌க சொன்ன‌த ந‌ம்பி எங்க அப்பா, அம்மாவ கூட்டிகிட்டு தெம்மாவூரு போயிட்டு வந்தாரு..

இது ந‌ட‌ந்து ஒரு இர‌ண்டு நாளில‌, மாடுக‌ளை ஓட்டியார வ‌ய‌லுக்கு போன எங்க அத்தை வ‌ழுக்கி விட்டு கீழே விழுந்து, காலில சுளுக்காகி ப‌டுத்துட்டாங்க.. "என்னைப் ப‌த்தி பேசுன‌து பொறுக்காம‌, ந‌ட‌ந்த ச‌ண்டைகளையெல்லாம் கார‌ணமா வ‌ச்சு, என் அம்மா நோவுல படுத்ததுக்கு எங்க அத்தைதேன் காரணம்னு வஞ்சம் வச்சு, எங்க அப்பாரும் அம்மாவும் சாமியாருகிட்ட போயி ம‌ந்திருச்சு எங்க அத்தை வீட்டு மேல சூனிய‌ம் வ‌ச்சு, ம‌ந்திருச்ச த‌க‌டை எங்க அத்தை வீட்டு வ‌ய‌லில புத‌ச்சுட்டாக... அதுதேன் அத்தையோட ப‌டுக்கைக்கு கார‌ண‌ம்"னு வ‌தந்தியை வித‌ச்சுட்டாக புதுசா வ‌ந்த ம‌க‌ராசி...
அதுக்கு சேத்து சுதி பாடுற‌துக்குன்னு வ‌ய‌லுக்குப் போன என் பெரிய மாமாவை பாம்பு க‌டிக்க போயிருச்சு.. ந‌ல்ல வேளை பாம்பு க‌டிக்க‌லை, அதுக்காங்குள்ளியும் அடிச்சு கொன்னுபுட்டாக.. க‌டிக்க வ‌ந்த‌து ஓலை பாம்பானாலும் அது வந்த‌துக்கு கார‌ண‌ம் வ‌ய‌லில புத‌ஞ்சிருக்குற த‌க‌டுன்னு கார‌ண‌ம்காட்டி ச‌ண்டை போட்டாக எங்க அத்தை..


"என்ன‌தேன் இன்னைக்கு, நேத்து வருத்தம்னாலும், சொந்த உறவுல சூனியம் வைக்கிற வ‌ஞ்ச‌க‌க்காரி நான் இல்லை"ன்னு எங்க அம்மா வாயில‌யும், மாருல‌யும் அடிச்சுகிட்டு க‌த்த.. ச‌ண்டை முத்தி ம‌ண்ணை வாரி இரைச்சுக்குற அள‌வுக்கு போயிடுச்சு... இது வ‌ரைக்கும் ந‌டந்த ச‌ண்டைக ஒன்னுல கூட இரண்டு வீட்டு ஆம்ப‌ளைக‌ளும் க‌ல‌ந்துக்க‌லை, அதையும் பெரிசு ப‌டுத்திக்க‌லை.. அவுக பாட்டுக்கு இருந்தாக.. ஆனா இந்த பெரிய ச‌ண்டை எல்லாத்தையும் ரொம்ப‌வே உலுக்கிடுச்சு.. சண்டை‌யில நேர‌டியா எங்க அத்தைக்குத் துணையா அந்த சின்ன‌ம்மா க‌லந்துகிட்டு வ‌ஞ்ச‌கமா பல வார்த்தைக‌ளை கூற, அதைகேட்டு "உன் பொண்ணை என் த‌ம்பி வீட்டுல வாழ வைக்க‌த்தான‌டி இப்ப‌டி ச‌குனியாட்ட‌ம் ஆடுற கூனின்னு" எங்க அம்மா பொட்டுன்னு உண்மையை உடைக்க, அதை கேட்டு அந்த சின்ன‌ம்மா சாமியாட, க‌டைசியில ச‌ண்டை வெட்டுக்காயா முடிஞ்சுருச்சு..

ஆமாங்க ... இர‌ண்டு குடும்ப‌முமே பெத்த பிள்ளைக‌ளை, அவுக‌ளுக்குள்ள இருக்குற‌ ஆசையை, உற‌வை, ப‌ழைய குடும்ப உற‌வை எதையுமே நினைச்சு பார்க்காம, ரெண்டு குடும்ப‌த்து பெரிய ஆம்ப‌ளைக‌ளையும் ச‌க்க‌ள‌த்தி இழுப்பா வீர‌மாகாளி கோயிலுக்கு இழுத்துட்டு போயி, ரெண்டு வீட்டு உற‌வுக்கும் செத்தா இல்லை, வாழந்தா இல்லைன்னு முறைப்பாடு போட்டுட்டு வ‌ந்துட்டாங்க.....

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)

--------------***-------------

வாசற்படி - 3

Saturday, November 24, 2007

வாசற்படி - 3

யாரு க‌ண்ணுப‌ட்டுச்சோ?, எங்க‌ குடும்ப உற‌வு இப்ப‌டி அத்துகிட்டு நிக்குது... "இந்த‌ வ‌ருஷ‌ம் ஏந்தான் பொறந்துச்சோ", ம்..ம்..பெண் மனசாச்சா.."எல்லாத்துக்கும் காரணம் நாந்தானோ"ன்னு என்னை நானே நொந்துகிட்டு கிடந்தேன்...

கல‌ங்கி நிக்கும் என் கோல‌த்தை பார்த்து, "வாரந்தவறாம வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்ல எலுமிச்சை விளக்கு போடுடி, உன் நல்ல மனசுக்கு ஆத்தா எல்லாத்தையும் சரியாக்கிடுவா"ன்னு என் தோழி பாப்பாத்திதேன் என்னை கூட்டிட்டு போனா.. ஆயிர‌ம் க‌வ‌லையையும், க‌ல‌க்க‌த்தையும் ம‌ன‌சுக்குள்ள‌ க‌ச‌க்கிபோட்டு வ‌ச்சுருந்தாலும், அம்ம‌ன் முக‌த்தை பார்த்த‌வுட‌னே எல்லாம் விர‌ய‌ப்ப‌ட்டு என் க‌ண்ணை குள‌மாக்கிடுச்சுங்க‌.. ம‌ன‌சுக்குள்ள எங்கோ ஒரு மூலையில ஏதோ ஒரு வ‌கையான‌ நிம்ம‌தி துளிர்விட‌ ஆர‌ம்பிச்சுது..

இப்படியே நாளுக நகர, ஒரு வெள்ளிக்கிழ‌மை என் பிற‌ந்த நாளு வந்த‌து, இந்த நாளிலேருந்தாவ‌து இனி என் வாழ்க்கையில‌ நல்ல‌து ந‌ட‌க்க‌ட்டும்னு கோயிலுக்குப் போறேன்..அங்க ப‌ச்சை புட‌வையில அம்ம‌ன் த‌ரிச‌ன‌ம் என் அத்தை உருவ‌த்தில‌.!..
என‌க்குள்ள அம்புட்டு ச‌ந்தோஷ‌ம்..

என்னைப் பார்த்து முக‌த்தை ஒரு ப‌க்க‌மா திருப்பிக்கிட்டாலும், நானே வ‌ழிவிக்க‌ போயி, "என‌க்கு இன்னைக்கு பிறந்த‌ நாளுங்க‌ அத்தை, என்னை ஆசிர்வாத‌ம் ப‌ண்ணுங்க"ன்னு சொன்னேன்..
எங்க ஊருக்கு வ‌ந்த‌ நாளிலேருந்து என் பிறந்தநாளு, திருவிழா, தீபாவ‌ளி, பொங்க‌லு எல்லா விசேஷ‌த்துக்கும் க‌ண்ணாடி வ‌ளைய‌ல் வாங்கி என் கைக‌ளில‌ மாட்டிவிட்டு "என்னாடி என் ச‌க்காள‌த்தி, எப்படி எனக்கு ம‌ரும‌க‌ளா வ‌ர‌ப்போற"ன்னு என் கொமுட்டுள (கன்னத்துக் குழி) குத்துவாங்க என் அத்தை.. "இப்ப‌டி எல்லா பாச‌த்தையும், பந்த‌த்தையும் ப‌ழைய‌ நினைப்புன்னு சொல்லுறாப்புல‌ அழுக்காக்கிட்டோமே"ன்னு எங்க‌ அத்தை வ‌ருத்தைப்ப‌ட்டு விக்கிச்சு நின்ன‌ அந்த‌ நொடி இன்னும் என் க‌ண்ணை விட்டு ம‌றைய‌ல‌..
இருந்தும் த‌ன்னைத் தானே ஏமாத்திகிட்டு, வறட்டு வம்புதேன் கௌரவம்னு "நல்லாயிரு"ன்னு ஒட்டி, ஒட்டாம‌ ஒத்த‌ வார்த்தைய‌ சொல்லி கையில வச்சிருந்த குங்குமத்தை என் நெத்தியில‌ வைச்சுட்டு போனாங்க‌..

என‌க்குள்ள ஒரு ம‌த்தாப்பூ ச‌ந்தோஷம் அத்தை எனக்கு பொட்டு வச்சுவிட்டதுல‌.
ஆனா அந்த‌ ம‌த்தாப்பூ முழுசா ஒரு நாளைக்குக்கூட‌ நிலைக்க‌லை.

அடுத்த‌ நாளே அத்தைக்கு ஏதோ உட‌ம்புக்கு சுக‌மில்லாம‌ போயிடுச்சு.. ஆகாத‌ ம‌ரும‌க அழுதாலும் த‌ப்பு, சிரிச்சாலும் த‌ப்புங்கிற‌ பொழ‌ப்பா போயிடுச்சு என் நிலைமை.

என்னன்னு சொல்லுறது.?..

வ‌ட‌க்கித்தெரு செவ‌த்த‌ கிழ‌வி செத்த‌ இழ‌வுக்குப் போன‌ இட‌த்தில‌ "முறைப்பாடு உள்ள இட‌த்தில‌ உள் வ‌ஞ்ச‌க‌மா உற‌வுபாடி, சாமிக்குத்த‌மாக்கி, நல்லாயிருந்த‌வ‌ள‌ ப‌டுக்க‌ப்போட்ட பாவிக‌ல்லாம் இருக்க, வாழ வ‌ழியெத்து நீயா போக‌ணும்னு" ஒப்பாரி ப‌டிச்சு என் அம்மாவை வ‌ம்புக்கு இழுத்துருக்காக‌ அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா..
எங்க‌ அம்மாவுக்கு உட‌னே ரோச‌ம் பொங்க‌, "இழ‌வுக்குப் போன இட‌த்துல‌ கூட‌ உன் இழ‌வு என்னை ப‌டுத்துதேடி.., அவ‌ள் ஆசிர்வாத‌ம் வ‌ந்துதேன் உன்னை வாழ‌ வைக்க‌ப்போகுதா"ன்னு அவுக‌ ஒப்பாரியை வெள‌க்கமாத்தாலே என் முதுகில ப‌டிச்சுட்டாங்க...

என‌க்குள்ள இருக்குற ந‌ம்பிக்கையையெல்லாம் ஆண்ட‌வ‌ன் இப்ப‌டி சித‌ற வ‌ச்சு வேடிக்கை பார்ப்பான்னு நான் க‌ன‌வு கூட காண‌லையேன்னு மூலையில‌ முட‌ங்கி உக்காந்துருந்தேன்... ஏன்னே தெரிய‌லை .. எங்க‌ ஊரு அய்யனாரு முகமும், செம்மியும் என‌க்குள்ள ம‌றைஞ்சு, ம‌றைஞ்சு வ‌ந்துபோச்சு.. கொல்லையில இருந்த வாழையிலேருந்து என் ம‌ன‌சு போல‌ ச‌ருகாகிட்டுருந்த ஒரு இலைய‌ பிச்சு அதுல வெள்ள‌ச் சோறையும், புளித்துவைய‌லையும் மடிச்சு எடுத்துகிட்டு அய்ய‌னார பார்க்க போனேன்..

சின்ன‌ வ‌ய‌சில‌ ஒவ்வொரு நாளும் ப‌ள்ளிக்கூட‌த்துக்குப் போறப்ப‌ என் ம‌ரிக்கொழுந்து மாம‌னோட வந்து இவ‌ருக்குத்தேன் வ‌ந்து கும்புடு போட்டுட்டு போவேன்.. கோயிலிலேருந்து ரெ‌ண்டாவதா இருக்குற ஆல‌ம‌ர‌த்துக்குக் கீழ இந்த‌ ம‌ண்ணை ம‌டியா நினைச்சு குத்த‌ வ‌ச்சு உக்காந்துருக்கும் இந்த செம்ம‌ண் குதிரைதான் எங்க‌ குதிரை. என் காதுகுத்து அன்னைக்கு இந்த‌ அய்யனாருக்கு நேந்துவிட்ட‌ குதிரை. ஒவ்வொரு வ‌ருஷ‌மும் பள்ளிக்கூடம் திறக்குற அன்னைக்கு வந்து இது முதுகில என் மாமனோட அந்த புது வருச வகுப்பை அய்யனாரு சாமிகிட்ட இருக்கும் கரிச்சாந்தெடுத்து எழுதி வச்சது, கடைசி ப‌ரிச்சை அன்னைக்கு பாஸுன்னு வந்து எழுதி வச்சது எல்லாம் கிழவிக கண்ணுக்குத் தெரியுற மாதிரி மங்கலா தெரியுது பாருங்க.. அய்யோ.!!.. நான் முதல்ல எழுதின என் மரிக்கொழுந்து மாமன் பேரு பாதி அழிஞ்ச மாதிரி இருக்கே.. கடவுளே இதுக்காகதான் என்ன கூப்பிட்டியா..
என் மாமனோட பேரை அழுத்தி எழுதிகிட்டிருந்தேன்..
ரொம்ப அழுத்திட்டேனோ..? குதிரைக்கு வலிச்சிருச்சு போல, என் கண்களிலிருந்து ஊத்து வடியுதே..

ரொம்ப நாளா நான் உங்களுக்கு என் மாமனை பத்தி சொல்லவே இல்லையே... ..ம்.. மாச‌ந்த‌வ‌றாம போஸ்ட்கார்டு வாங்கி " நாங்க‌ எல்லாம் ந‌ல்லாயிருக்கோம் மாமா, நீ உன் உட‌ம்பை பாத்துக்க‌, ந‌ல்லா ப‌டி "ன்னு எழுதி க‌டுதாசி போட்டுருவேன்.. எந்த‌ ச‌ண்டைய‌ ப‌த்தியும் நான் மாம‌னுக்கு சொன்ன‌தில்ல.. அதுவே பாவம்.., தன்னந்தனி ஆளா கஷ்டப்பட்டு படிக்குது.. இதுல இதெல்லாம் வேற அதுக்கு சொல்லி ஏன் அதை கலக்கி விடணும்.. எப்படியும் ஒன்னு சேர்ந்துருவோமுங்கிற நம்பிக்கைதேன் எனக்குள்ள இருக்கே.. சேர்ந்துதேன் ஆகணும், எனக்குதேன் கல்யாண பந்தம்னாலே, "மரிக்கொழுந்து பந்தம்" தானே..!!. என்ன நான் சொல்லுறது..

மாமா ஊரு பக்கம் வந்து கிட்டதட்ட ஏழு மாசமாகப்போகுது.. கடைசி வருசமில்ல, படிப்பு வேலை கொஞ்சம் அதிகமாம், ஏதோ புராஜெக்டெல்லாம் பண்ணனுமாம்.. ஆனாலும் மாமா மறக்காம எனக்குத் தனியா கடுதாசி போட்டுருவாங்க, மரிக்கொழுந்து வாசத்தோட.. எனக்கு மரிக்கொழுந்து தானே புடிக்கும்.. அதேன் என் மாமா கடுதாசியில மரிக்கொழுந்து பூவை தேச்சுத்தேன் அனுப்பும்..

பட்டணத்துக்கு மாமாவை பார்க்கப்போன பெரிய மாமாவும், அத்தையும் மாமாகிட்ட நடந்த சமாச்சாரத்தெல்லாம் சொல்லிருப்பாங்க போல.. அதேன் "பொய் சொல்ல‌ க‌த்துகிட்டியாடி என் பொம்மி; இன்னும் கொஞ்ச‌ நாளு பொருத்துக்கோ"ன்னு இந்த‌ மாச‌ம் போட்ட‌ க‌டுதாசியில‌ சொல்லியிருந்தாங்க மாமா.. அய்யோ!! என‌க்குள்ள ஏதோ ப‌ண்ணுதே..

என‌க்கு என் மாம‌ன் ஆத‌ர‌வு அந்த நேரத்தில கட்டாயத் தேவையா இருந்த‌து.. என்னையும் மீறி என் மனசு எதை, எதையெல்லாமோ நினைக்குது, கடந்து துடிக்குது.. என் செம்மியை (அதேன் எங்க‌ செம்ம‌ண் குதிரை) க‌ட்டி புடிச்சு அது முதுகில‌ என் க‌ன்ன‌ம் சாச்சு க‌ண்ணீர் வ‌டிச்சுட்டுருந்தேன்.. ஒரு தொடுத‌லில‌ நான் பூத்தேனே அதே உண‌ர்வை நான் உண‌ருகிறேனே இப்ப‌ன்னு திரும்பி பார்த்தா என் மாமா நிக்குது..
என‌க்கு நான் பார்க்குற‌து க‌ன‌வா, உண்மையான்னு, எதையும் நினைக்க‌த் தோண‌லை, எதுவும் பேச‌வும் முடிய‌லை..

பொங்க‌ப் பானை பொசுக்குன்னு பொங்குற‌ மாதிரி நானும் என் அழுகையும் பொங்க‌ ஆர‌ம்பிச்சுட்டோம்.. என் தோள‌ தொட்ட‌ கையில‌ அப்ப‌டியே த‌லை சாச்சுட்டேன்.. கண்ணுலேருந்து ம‌லை, ம‌லையா த‌ண்ணி, வாயி ஏனோ சிரிக்க‌த் துடிக்குது.. அன்னைக்குத்தேன் என் மாம‌னோட‌ க‌ண்ணுலேருந்து முத‌ முத‌ல்ல‌ த‌ண்ணிய‌ பார்த்தேன்..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------****---------------

வாசற்படி‍-4

Tuesday, November 20, 2007

வாசற்படி‍-4



"என்ன ஆச்சுந்த‌., ஏன் இங்க வந்து உக்காந்து அழுதுகிட்டிருக்க"ன்னு கைமேல சாய்ஞ்சவள தன் தோளுல சாச்சு, என் தலையை வருடிக்கொடுத்துகிட்டே கேட்டுச்சு என் மாமா.. இந்த ஆதரவு இல்லாமத்தானே எல்லாம் இருந்தும், நாதியத்தவளா கிடந்தேன் இம்புட்டு நாளும்...

என் தேம்பலையும், ஆசுவாசத்தையும் அடக்கி நிமிர்ந்து என் மாமனைப் பார்த்தேன்.. நான் கேட்க நினைத்ததை என் வாயும், கண்ணும் சொல்லத் தடுமாறினாலும், அர்த்தம் புரிஞ்சுகிட்ட என் மாமா, "உன் நினைப்பு ரொம்ப‌ அதிக‌மாயிடுச்சு, என்னால எந்த‌ வேலையும் ச‌ரியா செய்ய‌ முடிய‌லை.. அதேன் காலேஜிக்கு லீவு போட்டுட்டு, உன்னை பாத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை எனக்குத் திருப்பிக்கொடுன்னு கேட்டு வாங்கிகிட்டு, அப்படியே ந‌ம்ப குடும்ப‌த்துல‌யும் என்ன‌தான் ந‌ட‌க்குதுன்னு பாத்துட்டுபோலாமுன்னு வ‌ந்தேன்"னு என் நெத்தியில‌ முட்டிச் சொன்னாக‌..

ப‌ஸ்ஸுல வ‌ரும்போது ந‌ம்ப‌ பாக்கிய‌ம் ப‌ய‌லைப் பார்த்தேன், அவ‌ன்தேன் ந‌ம்ப‌ குடும்ப‌த்துல ந‌ட‌க்குற‌ கூத்தையும், உன் பாட்டையும் முழுக்க விவரமா சொன்னான்.. "உன்னால பொம்மிய பார்க்க‌ கூட‌ முடியுமா என்ன‌ன்னு தெரிய‌லடா"ன்னும் சொன்னான்.. என் பொம்மிய பார்க்க‌ யாருகிட்ட‌ உத்த‌ர‌வு வாங்க‌ணும்னு என‌க்குள்ள‌ ஆத்திர‌ம் பொங்கினாலும், ஏன்னே தெரிய‌ல இந்த அய்யனார‌ப் பார்த்து ஒரு ஆத‌ர‌வு ஓட்டு வாங்கிகிட்டு, எதாவ‌து பிர‌ச்ச‌னையினா உன் குதிரையை குடுத்து உதவு, நாங்க‌ தூர‌தேச‌ம் போயி வாழ‌ன்னு சொல்ல‌லாமுன்னு வ‌ந்தா.. அவ‌ரு என் பொம்மிய‌வே என் கிட்ட‌ குடுத்துட்டாரு"ன்னு ந‌க்க‌லா என் க‌ண்ணத் தொட‌ச்சிவிட்டுகிட்டே சொன்னாங்க‌ என் மரிக்கொழுந்து.

"ரொம்ப ப‌ய‌ந்துட்டியா.., 'நீதேன் என‌க்கு நாந்தேன் உன‌க்கு' இதை யாரால‌யும் மாத்தி எழுத‌ முடியாது.. நீ என்னைக்கோ உன் ம‌ரிகொழுந்தோட‌ பொண்டாட்டியாயிட்ட, இப்ப‌டி தொட்டாச்சினுங்கி பொண்டாட்டியா யாரோ ஏதோ சொன்னதுக்கெல்லாம் அழ‌லாமா"ன்னு கேட்டுச்சே.!.என் மச்சான்.!., என‌க்கு இந்த‌ உல‌க‌மே ம‌ற‌ந்து போச்சு..

"என்ன அப்ப‌டி பார்க்குற‌, இப்ப‌ சொல்லு.. நீ யாரு பொண்டாட்டி?"ன்னு என்னை என் மாமா உலுக்க‌, நான் என் மாம‌ன் க‌ண்ணுலேருந்து எனக்காக வ‌டிஞ்சிருந்த அந்த‌ உசிருத்த‌ண்ணிய தொட‌ச்சிவிட்டேன்..
ஏதோ ஆடு, மாடுக ச‌த்த‌ம் கேட்டு குள‌த்துப்ப‌க்க‌ம் திரும்பி பார்த்தா, கொல்லைக்காட்டுலேருந்து ஆடு,மாடுக‌ளை ஓட்டிகிட்டு அத்தை வ‌ந்துகிட்டு இருந்தாங்க‌.. அதுக்காங்குள்ளியும் என் அத்தானை நான் பிரியப்போறேனான்னு, ஒன்னும் விளங்காம திரு, திருன்னு முழிச்சிகிட்டுருந்தேன்.. ஏதோ சுதாரிச்சதில மாமனோட‌ கைப்பிடிய மட்டும் விலக்க முடிஞ்சுது.. அத்தை எங்களை பார்த்துட்டாங்க..

யாரதுன்னு உத்து பார்த்த அத்தை, அய்யனாரு மேட்டுல நிக்குறது நானும் மாமாவுங்கிறதை கண்டுபிடிச்சிட்டாங்க. "முருகேசு..!.. எப்படா வந்த.. ஏன் இங்க நிக்குற? "ன்னு ஆச்சர்யபட்டு கேட்க, "இப்பதாம்மா வந்தே..ன்.. பொம்..மி...ன்னு" மாமா திக்கித் திணர, அத்தை என்னை கோபமா பாத்துட்டு "வா வீட்டுக்கு"ன்னு மாமாவை கைய புடிச்சு இழுத்துட்டு போயிட்டாங்க.. என்னால பின்னாடியே ஓடவும் முடியாம, மாமாவும் என்ன திரும்பி திரும்பி பார்க்க, நான் முழிச்சிகிட்டே தயங்கி தயங்கிப் பின்னாடியே வந்தவ‌ எப்படியோ வீடு போயி சேர்ந்தேன்..

என்ன நடக்கபோகுதோ, எதெல்லாம் வெடிக்கப்போகுதோன்னு பட படத்து வீட்டுத் தாழ்வார சன்னலு வழியா வாரியையும், எங்க மாமா வீடு இருக்கும் கோடியையும் பாத்துகிட்டு உக்காந்துருந்தேன்..

"என்னை ப‌டுக்க‌வ‌ச்ச‌து ப‌த்தாதுன்னு இப்ப என் பிள்ளையையும் ப‌றிக்க‌ க‌ட‌ந்து அலையுது கொள்ளிவாயி பிசாசு"ன்னு ச‌க‌ட்ட‌மேனிக்கு க‌த்திகிட்டேதேன் (இல்ல‌ என்னை திட்டிக்கிட்டேதேன்) வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காக‌ எங்க‌ அத்தை.

"முறைப்பாடு போட்டு வெட்டி விட்டாச்சு, இனி சொந்த‌முமில்ல ப‌ந்த‌முமில்ல‌, க‌ட‌ந்து துடிக்காம‌ போயி ப‌டிக்கிற‌ வேலையை பாரு"ன்னு இழுத்துட்டு போன‌ பிள்ளைக்கு காபி த‌ண்ணிகூட‌ குடுக்காம‌ கராரா பேசியிருக்காக அத்தை..

ந‌ல்ல‌வேளை, ப‌திலுக்கு மாமா எதுவும் எதிர்த்து பேசாம "ப‌சிக்குது, சோத்த‌ போடும்மா"ன்னு கால‌ க‌ழுவிகிட்டே சொல்லிருக்கு.. இருந்த‌ ஆத்திர‌த்தையெல்லாம் சாப்பிடுறதுல தீர்த்துக்கிட்டு கொஞ்ச‌ம் பொறுமையா இருந்துருக்காங்க மாமா..

அத்தை கோப‌ம் த‌னுஞ்சி மெதுவா "இங்க‌ பாருடா, உன் ப‌டிப்புக்கெல்லாம் ட‌வுனுலேருந்து பொண்ணெடுத்தாதேன் கௌர‌வ‌மா இருக்கும், அந்த‌ த‌ர்த்திரிய‌ம் ந‌ம‌க்கு வேணாமுன்னு" சொல்லியிருக்காக‌..

"யார‌ம்மா த‌ர்த்திரிய‌ம்னு சொல்ற, அவ‌ கையால‌தானே விதைநெல்ல‌ சாமிக்கு ப‌டைப்ப.., இவ்வ‌ள‌வு நாளு ம‌க‌ராசியா, இந்த‌ வீட்டுக் க‌ன்னி தெய்வ‌மா தெரிஞ்ச‌வ இப்ப‌ ம‌ட்டும் உன‌க்கு எப்ப‌டி த‌ர்த்திரிய‌மா தெரியுறா.."ன்னு மாமா கேட்க‌, "தாய் மாம‌ன் வீட்டு ப‌சு மாட‌, அதுவும் நிற‌மாச‌ ப‌சுமாட‌ உல‌ வ‌ச்சு கொன்ன கொல‌காரிடா அவ‌.., உன‌க்கு என்ன‌ தெரியும் சாஸ்திர‌த்த‌ ப‌த்தி.. சில சிறுக்கிங்க ச‌மையிற நேர‌ம், முறைமாம‌ன் வீட‌ மூலையில‌யும் உக்கார‌வைக்கும், மிஞ்சி, மீறிப்போனா முழுசாவும் அழுச்சிடும்.. எந்த‌ நேர‌த்தில‌ ச‌மைஞ்சாலோ, என் குடும்ப‌த்தை உலுக்கி எடுத்துட்டா மூல‌ச்சிறுக்கி.. இப்ப‌தேன் அந்த‌ உற‌வ‌ வெட்டிவிட்டு நிம்ம‌தியா இருக்கோம், நீ எதையும் கிள‌றாத"ன்னு அத்தை ப‌தில் கொடுக்க‌, "நான் பொற‌ந்த‌நேர‌ம் உன‌க்கோ, அப்பாவுக்கோ ஆகாதுன்னு சொல்லியிருந்தா என்னை அப்ப‌வே கொன்னுருப்பியாம்மா"ன்னு மாமா கேட்க‌, அத்தை விக்கிச்சு ப‌தில் சொல்ல‌ முடியாம‌ நின்னுருக்காக‌..

"ம‌ண்ண‌ச்சந‌ல்லூருலேருந்து இருந்த‌ நில‌த்தையெல்லாம் வித்துட்டு ஒட்டி ஒட்டாம இருந்த‌ உற‌வோட‌ ஒத்து வாழ‌ இந்த சொந்த‌ ஊருக்கு வ‌ந்தோமே.. அப்ப‌கூட அந்த‌ ம‌ண்ண‌ச்சந‌ல்லூர் கிளி ஜோசிய‌க்கார‌னும், ஆவூரு உடுக்கை சாமியாரும் சொன்னாக‌ளேம்மா 'எனக்கு ச‌னிதிசை ந‌ட‌க்குது அதேன் இப்ப‌டி குடும்ப‌த்தை ஆட்டிப் ப‌டைக்குதுன்னு, அப்ப‌ ஏம்மா என்னை முறைப்பாடு போட்டு வெட்டி விட‌லை? அன்னைக்கே வெட்டிவிட்டுருந்தீன்னா இன்னைக்கு இந்த‌ உற‌வுமில்லாம‌, நானுமில்லாம‌ நீ நிம்ம‌தியா வாழ்ந்திருக்க‌லாமேம்மா..?.."ன்னு மாமா அணுஆதார‌மா கேட்க, அத்தையால எந்த‌ ப‌திலும் சொல்ல‌ முடிய‌லை..

"அவ‌ அப்ப‌ன் ஆத்தாளுகிட்ட‌ சொல்லி ஏதோ மந்திரம் பண்ணி அந்தச் சிறுக்கி உன்னை ம‌ந்திருச்சி விட்டுட்டா"ன்னு அத்தை க‌ண்ணை கொஞ்ச‌ நேர‌த்தில‌ க‌ச‌க்கிருக்காக‌..

அத்தை அப்ப‌டி சொல்லிருந்தாலும், மாமா கேட்ட‌ கேள்வில பொத‌ஞ்சிருந்த‌ உண்மையும், அதோட‌ தெளிவும் கொஞ்ச‌மாவ‌து அத்தைக்கு விள‌ங்கிருக்கும்ங்கிற‌து என்னோட‌ ந‌ம்பிக்கையாயிருந்துச்சு.. அதே ச‌ம‌ய‌த்தில‌ எனக்குள்ள ஒரு ப‌யமும் வேண்டுதலுமிருந்துச்சு "எங்க அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா எதையாவ‌து சொல்லி அத்தை புத்திய‌ திசை திருப்பிடுமோ"ன்னு..

அடுத்த‌ நாளு காலையில மாமா எங்க‌ வீட்டுக்கு வந்திருந்தாங்க‌.. நாந்தேன் முத‌ல்ல‌ பார்த்துட்டு பாயெடுத்து போட்டுட்டு அம்மாவ‌ கூப்பிட்டேன்..

அம்மாவுக்கு தான் த‌ம்பி புள்ள‌ வ‌ந்து நிக்குதேங்கிற‌ பாச‌மிருந்தாலும் "தான் த‌ம்பியே இல்ல‌ன்னு ஆயிடுச்சு.. த‌விர‌ இத‌னால‌ இன்னும் ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள் வ‌ருமோ"ன்னு ப‌ய‌ம்.. "த‌ப்பா எடுத்துக்காத‌ முருகேசு, ஏற்க‌னவே இங்க‌ ப‌ல‌ பிர‌ச்ச‌னைக‌ள், இன்னும் இவ‌ளுக்கு ஊர‌றிய ராசியில்லாத‌வ‌ன்னு பொட்டுக‌ட்டாததுதேன் பாக்கி.. படிச்ச புள்ள, த‌ய‌வுசெஞ்சு நீயே புரிஞ்சுகிட்டு போயிடு.. உங்க‌ அம்மா வ‌ந்து எதாவ‌து ர‌க‌ளை செஞ்சா, உன்னை வ‌ச்சுகிட்டு எதிர்த்து நின்னு பேசுறதுக்கு என‌க்குத் தெம்புமில்ல, மாமாவுக்கு தெரிஞ்சா பெரியா வ‌ம்பாவும் போயிடும்"னு புற‌டியில அடிக்கிற‌ மாதிரி ப‌டார்னு பேசிட்டாங்க‌..
எங்க‌ அம்மா இப்ப‌டி பேசும்னு ச‌த்திய‌மா நான் நினைக்க‌வே இல்ல‌... சின்ன‌ வ‌ய‌சிலேருந்தே மாமாமேல பெரிய‌ ம‌னுசாலுக‌ளுக்கெல்லாம் நிறைய‌ பாச‌மும் உண்டு, ந‌ல்ல ம‌திப்பும் உண்டு. என்னால‌தானே மாமாவுக்கு என் அம்மா வாயிலேருந்து இப்ப‌டி ஒரு அவ‌மான‌ப் பேச்சுன்னு என‌க்கு ஆத்திர‌மா வ‌ந்துது.

ஆனா மாமா அதையும் பொருத்துகிட்டு," அத்தை, எத்த‌னை கோயிலுக்கு போனாலுஞ்சரி, நீங்க என் அத்தைங்கிற‌தையும், நான் உங்க‌ த‌ம்பி புள்ள‌ங்கிற‌தையும் மாத்த‌முடியாது, அதே மாதிரி பொம்மி என‌க்குத்தேன், இந்த‌ விதையை வித‌ச்ச‌து நீங்கல்லாம்தேன்.. உங்க‌ எல்லாத்தையும் விட‌ எனக்காக வேண்டிக்கிற‌தும் அவதேன், என‌க்காக‌ன்னு இருக்குற‌வ‌ளும் அவதேன்.. நீங்க பெரிய‌வ‌ங்க‌ எவ்வ‌ள‌வு வேணும்னாலும் கௌர‌வ‌ம் பாத்துக்கோங்க‌, எவ்வ‌ள‌வு வேணும்னாலும் ச‌ண்ட‌ போட்டுக்கோங்க அதுல நாங்க த‌லையிட‌ல, அதே மாதிரி நீங்க‌ளும், உங்க சண்டை எங்க‌ வாழ்க்கையில‌ மூக்க‌ நுழைக்காம‌ பாத்துக்கோங்க‌.. உங்க‌ விளையாட்டுல‌ எங்க‌ வாழ்க்கையை ப‌ழிகெடாவா ஆக்கிடாதீங்க.. இதைத்தேன் எங்க அம்மாகிட்ட சொல்லிருக்கேன்.. அதையேதேன் உங்ககிட்டயும் சொல்லிக்கிறேன், நான் வ‌ர்றேனுங்க அத்தை"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கிள‌ம்பிட்டாங்க‌..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

--------------------****------------------

வாசற்படி‍-5

Sunday, November 18, 2007

வாசற்படி‍-5

மாமா நிதான‌மா, நெத்திய‌டியா பேசின‌துல அம்மாவுக்கு வ‌லியிருந்தாலும், மாமாவோட‌ ப‌க்குவ‌மான‌ பேச்சு அம்மாவுக்குள்ள‌ கொஞ்ச‌ம் பூரிப்பையும் உண்டாக்கினுச்சுன்னுதேன் சொல்லனும்.. இல்லைனா "என்ன‌டி ம‌லைச்சு நிக்குற.?.போடி, போயி வேலைய‌ப்பாருடி பொழ‌ப்ப‌த்த‌வ‌ளே"ன்னு என்னை சொல்லுற‌மாதிரி அவுகளுக்கே சொல்லியிருப்பாங்க‌ளா..

.ம்..இப்ப சொல்லுங்க என் மாமனுக்கு நான் மரிக்கொழுந்துன்னு பேரு வச்சது சரிதானே..

வீட்டுப் பெரிய ஆம்பளைகளும், வேடிக்கைப் பார்த்த அனுபவமுள்ள ஊரு பெரிய ஆளுகளும் கேட்காத கேள்வியையும், பேசாத பேச்சையும் உளிக்கு உறைக்குற மாதிரி அடிச்சுப் பேசினது என் மரிக்கொழுந்து தானே..

என்ன.., மரிக்கொழுந்து வாசம் உங்க வரைக்கும் வீசுதுதானே..

ம்..சரி விஷயத்துக்கு வாரேன்..

மாமா வ‌ந்திருந்த‌ ரெண்டு நாளு எப்ப‌டி போச்சுன்னே தெரிய‌லை..

மாமாவைப் பார்க்க அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா த‌ன் பொண்ணைக் கூட்டிகிட்டு வ‌ந்திருந்தாங்க.. ஆனா மாமா அதை கொஞ்ச‌ம் கூட‌ க‌ண்டுக்காம‌ என் பிர‌ண்டுங்க‌ள பார்க்க‌னும் நான் வ‌ர்றேனுங்க‌ன்னு நாசுக்கா வெளியில கிள‌ம்பிடுச்சாம்..

"ரொம்ப‌ ம‌ரியாதையான‌ புள்ள, என்கிட்ட‌ போயி எதுக்கு இம்புட்டு ம‌ரியாதை, நானும் அத்தை தானே"ன்னு வேறு வித‌மா பெருமைய‌டிச்சுகிட்டாக‌லாம் அந்த‌ சின்ன‌ம்மா..

எனக்கா.. 'அட, அய்ய‌னாரே..'ன்னு இருந்த‌து.. என்ன‌ க‌ல‌க‌ம் மூட்டி விட‌ப்போறாங்க‌ளோ,என்ன‌வெல்லாம் சொல்லி எங்க‌ அத்தைய‌ குழ‌ப்ப‌ போறாங்க‌ளோன்னு ஒரே க‌வலைதேன் எனக்குள்ள..

"இன்னும் ஒரு ஒன்றை மாச‌த்துல‌ ப‌ரிட்சை முடிஞ்சிரும், அப்ப‌ற‌ம் அங்கிட்டு எப்ப‌டியும் ஒரு மாச‌த்துல‌ ட‌வுனுல எதாவ‌து ஒரு கம்பேனியில‌ வேலையை வாங்கிட்டு, இங்க வந்து இந்த‌ ஊருக்கே சாப்பாடு போட்டு தூங்க‌வ‌ச்சிட்டு உன்னை டவுனுக்கு க‌ட‌த்திட்டு போய‌ர்றேன்.. அப்ப‌ற‌ம் அதுக்கும்அங்கிட்டு ஒரு வ‌ருஷ‌த்துல‌ உன் தொட்டாச்சினுங்கி அழுகைக்குத் துணையா பிள்ளைய ஒன்ன‌ பெத்து எடுத்துகிட்டு நேரா இங்க‌ வ‌ந்து கொஞ்ச நாளு ந‌ம்ப‌ பிள்ளைய ந‌ம‌க்கு ஆத‌ர‌வா க‌த்த‌வோ, க‌றைய‌வோ சொன்னா.. க‌ண்டிப்பா எங்க‌ அம்மாச் ச‌த்த‌ம் அமைதியாயிடும்.. பிறகென்ன இந்த பொம்மி கற்பகத்துக்கு (என் அத்தை பேரு கற்பகம்) பொக்கிஷமாயிடுவா.. என் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம்‍.."னு என் காது டோலாக்க தன்விரலால தட்டிவிட்டு நக்கலும், சிக்கலுமா சொன்னாங்க என் மாமா..

"ஏன் மாமா அப்படி சொல்லுற, நான் இருக்க உன் பாடு ஏன் திண்டாட்டம்"னு கேட்டேன்..

"கற்பகம் உன்னைக் கொஞ்சும்போதெல்லாம் என்னை ஓரக்கண்ணால சைட்டுதானே அடிச்ச, இப்ப கற்பகத்து ஆதரவு இல்லங்கவும்தானே உன் மரிக்கொழுந்தை நினைச்சு ஏங்குற? மறுபடியும் கற்பகம் ஆதர‌வுன்னா என் பாடு பாவம் தானே"ன்னு என்னமா என்ன நையாண்டிப் பண்ணுனாகத் தெரியமா..

ம்..இதெல்லாம் மாமா ஊருக்கு போற‌துக்கு முன்னாடி அம்ம‌ன் கோயில் ப‌டித்துறையில உக்காந்து என் கூட‌ பேசிகிட்டிருந்த‌து.. மாமா ஊருக்குப் போயி ப‌த்து நாளாகுது.. அத்தையும், அம்மாவும் நேருக்கு நேரா எதுவும் பேசிக்கிற‌து கிடையாது.. மத்தபடி நான் ப‌ய‌ந்த‌ மாதிரி ரொம்ப‌ பெரிய‌ ச‌ண்டை எதுவும் ந‌ட‌க்க‌ல..இந்த‌வாட்டி ட‌வுனு சின்ன‌ம்மாவோட ம‌ந்திரி வேலை எதுவும் ச‌ரியா மாஞ்சாப்போடலை..

ட‌வுனு சின்ன‌ம்மாவோட‌ பொண்ண‌ப்ப‌த்தி நான் உங்க‌கிட்ட‌ சொல்லலையே..அழ‌குல‌யும், குண‌த்துல‌யும் என் மாம‌னுக்கு பொருத்தமான‌வ‌ளான்னு என்கிட்ட‌ கேட்டுறாதீங்க‌.. ஏன்னா இந்நேர‌ம் உங்க‌ளுக்கே என்ன‌ப்ப‌த்தியும், என் மாமனைப் பத்தியும் தெரிஞ்சுருக்க‌னும் .. இப்ப‌டிப்ப‌ட்ட‌ கேள்வி கேள்வியா ஆகுற‌துக்கு முன்னாடியே அது 'தீயில‌ போட்ட‌ ப‌ஞ்சா ஆயிரும்'னு... சரி, அந்த‌ பொண்ணைப் ப‌த்தி சொல்லுறேனே.. அவ‌ பேரு மேன‌கா.. ந‌ல்ல‌ உச‌ர‌மா, அழ‌கான‌ பொண்ணுதேன்.. ஆனா என‌க்குத்தேன் அவ‌ள‌ பாக்கும்போதெல்லாம் அவுக அம்மா முக‌மும், பேச்சும் நினைவுக்கு வ‌ர்ற‌தால‌ உள்ளூர‌ என‌க்கு கொஞ்ச‌ம் பயம்..கொஞ்ச‌ம் புடிக்காது.. சில‌ ச‌ம‌ய‌ம் தேவையேயில்லாம குளத்தாங்கரையிலயும், அடிபம்பு குழாயில தண்ணி பிடிக்கும்போதும் என்னோட‌ வ‌ம்பு பிடிப்பா, என்னை ராசியில்லாதவன்னு கிண்டல் பண்ணுவா.. சில‌ ச‌ம‌ய‌ம் என‌க்காக விட்டு கொடுப்பா.. எங்க‌ அம்மா அப்ப‌டி பேசின‌தெல்லாம் ம‌ன‌சில‌ வ‌ச்சுக்காத‌ப்பான்னு சொல்லுவா.. நல்லவதேன்னு வச்சுக்கோங்களேன்.. நம்ப ஏன் அநியாயமா ஒரு பொண்ணைப் பத்தி பேசி பாவத்தைச் சம்பாதிக்கனும்...

ச‌ரி இப்ப‌ என் க‌தைக்கு வ‌ருவோமே... அந்தப் ப‌த்து, ப‌ன்னெண்டு நாளு, உண்மையிலே நான் எல்லா ப‌ய‌த்தையும் ம‌ற‌ந்து ப‌ழைய‌ ப‌டி ரொம்ப‌ ந‌ம்பிக்கையோட‌ என் மாம‌னுக்காக‌ காத்துகிட்டுருந்தேன்.. அந்த வெள்ளிக்கிழமை மாமா ப‌ரிட்சையில‌ பாசாகணும், சீக்கிர‌மா வேலை கிடைக்க‌ணும்னு எங்க‌ ஊரு அம்ம‌னுக்கும், அய்ய‌னாருக்கும் மாவிள‌க்கு போட்டேன்.

ஆனா அம்ம‌ன் கோயில்ல‌ உடைச்ச தேங்காதேன் ச‌ரியில்லாம‌ போயிடுச்சு.. சாமிக்கு உடைக்குற‌ தேங்காய் ச‌ரியில்ல‌ன்னா ஏதோ த‌காத‌து ந‌ட‌க்க‌ப்போகுதுன்னு பூசாரி அய்யா சொன்னாரு. இத்த‌னைக்கும் அது எங்க‌ வ‌ய‌க்காட்டு தென்னை ம‌ர‌த்து தேங்காய்தேன்..அவ‌ரு அந்த‌ வார்த்தையை சொன்ன‌வுட‌னே ஊருக்குள்ள‌ இருக்குற‌ கடையிலேருந்து ஒரு தேங்காய‌ வாங்கி வ‌ந்து சாமிக்கு உடைச்சிட்டேன்..

"அம்மா, என்ன தப்பு நடந்துருந்தாலும் தண்டனையை எனக்குக் கொடு, என் மாமனை நீதேன் பத்திரமா பாத்து காத்து நிக்கணும், தயவுசெஞ்சு அருள் புரிம்மா"ன்னு பய, பத்திரமா மனமுறுகி வேண்டிக்கிட்டேன்..ஆத்தா புண்ணிய‌த்துல அந்த‌ காயி ந‌ல்ல‌ காயா இருந்த‌து, ந‌ல்ல‌ப‌டியா உடைஞ்ச‌து..

இருந்தும் என்ன‌வோ தெரிய‌லை உடைஞ்ச‌ அந்த‌ அழுகுன‌ தேங்காயும், பூசாரி அய்யா சொன்ன வார்த்தையும் அடிக்கடி என‌க்குள்ள‌ வ‌ந்து வ‌யித்துல‌ புளிய‌க்க‌ரைச்சுதுங்க‌...

விடிஞ்ச‌தும் இற‌ங்க‌ப்போகுது ஒரு பெரிய‌ அடிங்கிற‌துக்கு அறிகுறியா, இல்ல‌ வேற‌ எதுவுமான்னு என‌க்கு ச‌ரியா விள‌ங்க‌லை..

காலையில‌ ஒரு ப‌த்தும‌ணியிருக்கும் ட‌வுனுலேருந்து ம‌ணிய‌க்காரு வீட்டுக்கு போனு.. அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல‌ சொல்லி.. ட‌வுனுலேருந்து அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல‌ சொல்லி போனுன‌வுட‌னே நான் ம‌ட்டும‌ல்ல‌ ஊரே அல்லோல‌ ப‌ட்டுருச்சு..

ஏற்க‌ன‌வே என் ம‌ன‌சுல‌ குடி கொண்டுருந்த‌ ப‌ய‌த்துல இந்த‌ சேதிங்கிற வார்த்தையே என்னை அரை நினைவுக்கு கொண்டுபோயிடுச்சு.. இதுல பாப்பாத்தி உன் மாமா, உன் மாமான்னு திக்கி இழுத்த‌துல‌ ரொம்ப‌ ப‌ய‌ந்து முழு நினைவும் போயி ம‌ய‌ங்கிட்டேன்..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

---------******--------------

வாசற்படி - 6

Friday, November 16, 2007

வாசற்படி - 6

க‌ண்ணு முழிச்சு பார்த்தப்பா 'என் வ‌யித்துல வ‌ந்து பொற‌ந்த‌து இப்ப‌டியா இருக்க‌னும்'னு த‌லையில‌ அடிச்சுகிட்டு அழுதாங்க அம்மா..

அய்ய‌ய்யோ.!!. என் மாம‌னுக்கு என்ன ஆச்சு, யாராவ‌து சொல்லித்தொலைங்க‌ளேன், என் மாம‌னை நான் பார்க்க‌னும்னு என்னை சுத்தி உக்காந்துருந்த என் சினேகிதிக‌ளை புடிச்சு உலுப்ப, "உன் மாம‌னுக்கு த‌லையில"ன்னு பாப்பாத்தி சொல்லாங்குளியும்..மங்கா, பாப்பாத்தி கைய‌ புடிச்சு அமுக்கி அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌ கொஞ்ச‌ம் ப‌க்குவ‌மா சொல்லுடின்னா..

எனக்கு இவ‌ளுக‌‌ போடுற‌ பீடிகையில‌ நெஞ்சு ரொம்ப பட படன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.. எங்க.., பட படப்பு பொறுக்காம‌ வெடுச்சிரும் போல‌ இருந்துச்சு..

க‌டைசியில‌ அஞ்ச‌லைதேன் சொன்னா "ஒன்னுமில்ல‌டி பொம்மி, உங்க‌ மாம‌ன் காலேஜில‌ ஏதோ பொருக்கி ப‌ச‌ங்க‌ளுக்குள்ள ச‌ண்டையாம், அந்த பசங்கள்ள உன் மாமன் பிரண்டும் இருந்தானாம்.. அவனைக் காப்பாத்த போனதுல முருகேசு தலையில கொஞ்சம் அடியாம்.. ஆஸ்பத்திரியில சேத்துருக்காகலாம்"..

மாமாவுக்கு பெருசா எந்த‌ ஆப‌த்துமில்லாட்டியும், த‌லையுல மட்டும்தேன் அடிங்கிற‌து கொஞ்ச‌ம் ப‌ட‌ ப‌ட‌ப்பை குறைச்சாலும்.. என‌க்கு ஏதொ ரொம்ப‌ ப‌ய‌மா இருந்துச்சு..என‌க்கு மாமாவை பார்க்கனும் போல‌ இருந்துச்சு..எப்ப‌டி என‌க்குள்ள அம்புட்டு தைரிய‌ம் வ‌ந்த‌துன்னே தெரியலை..

முத்த‌த்துல, வாச‌ல் முன்னாடி உக்காந்திருந்த என் அப்பாருகிட்ட‌ போயி "அப்பா என்ன‌ ட‌வுனுக்கு கூட்டிட்டு போங்க‌ப்பா, மாமாகிட்ட‌ கூட்டிட்டு போங்க‌ப்பா, நான் மாமாவை பார்க்கனும்"னு ம‌ண்டி போட்டு அழுதுகிட்டிருந்தேன்.. மூலையில உக்காந்து அழுதுகிட்டுருந்த‌ அம்மா, நாலுகாலு பாய்ச்ச‌லா விரைஞ்சு என் ஜ‌டையை பிடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள‌ வ‌ந்து போட்டு, வெள‌க்க‌மாத்தாலே என்ன விலாசு விலாசுன்னு விலாசிட்டாங்க‌..

என‌க்கு என் அம்மா அடிச்ச‌ அடிய‌ விட‌ சொன்ன‌ வார்த்தைகதேன் வ‌லிக்க‌ ம‌ட்டும் செய்ய‌லை.. ரொம்ப‌வும் ப‌ய‌மூத்திடுச்சு..

"ஏன்டி இந்த‌ குடும்ப‌த்துல‌ பொற‌ந்த‌.., அதுவும் என் வ‌யித்துல‌ வ‌ந்து பொற‌ந்த‌.. பெத்தவ நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் என் வாயிலேருந்தே சொல்ல வைக்கிறியேடி பாவி..ஊருல எல்லாத்தையும் உன்னைப் பத்தி பேச வச்சிட்டியேடி பாழாப்போறவளே.. வெளியில தலைகாட்ட முடியிலையேடி...நீ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ நேர‌த்துல‌ குறைன்னா நீ வாழாமா போக‌ வேண்டியதுதானே, ஏன் இப்ப‌டி இந்த‌ குடும்ப‌த்தையும், எங்க‌ ம‌ரியாதைய‌யும், சொந்த‌த்தையும் சீரழிக்கிற‌?"..

அம்மாவோட வெளக்கமாறு அர்ச்சனையிலேருந்து என்னை என் அப்பாரும், சினேகிதிகளுந்தேன் விடிவிச்சுருக்காக.. ஆனா அது எதுவும் என‌க்கு விள‌ங்க‌லை...

உண்மையிலே மாம‌வுக்குத் த‌லையில சின்ன‌ அடிதானா.?. அம்மா என்னை இந்த அள‌வுக்கு பேசுறாங்க‌ன்னா, மாமாவுக்கு ஏதோ ஆயிருச்சோ.?.அய்யோ.. என‌க்கு பைத்திய‌ம் புடிச்சிரும் போல‌ இருந்துச்சு..நான் மாமாவைப் பார்க்க‌னும், நான் மாமாவைப் பார்க்க‌னும்னு புல‌ம்பிகிட்டே இருந்தேன்.. "அழாத‌டி பொம்மி, ப‌ய‌ப்புடாத‌டி.. முருகேசுக்கு ஒன்னுமில்ல, சீக்கிர‌மா ஊருக்கு உன்ன‌ப் பார்க்க‌ வ‌ந்துருவான்னு" பாப்பாத்தி சொன்னா..

ரெண்டு நாளா நான் எதுவும் சாப்பிட‌லை, மாமா.. மாமாவப் பார்க்கனும்னு அன‌த்திகிட்டேருந்தேன்.. அய்ய‌னாருகிட்ட‌யும், அம்ம‌ன்கிட்ட‌யும், ம‌னசால‌ கெஞ்சி கூத்தாடிகிட்டிருந்தேன்.. செம்மி முதுகுல என் மாமன் பேரையும் அது பாஸாகுறதுக்காக வேண்டிகிட்டு கரிச்சாந்தாலயும், கரிக்கொட்டையாலயும் அழுத்தி எழுதினதுக்கு மன்னிப்பு கேட்டுகிட்டிருந்தேன்.. என் மாமனை சரியாக்க சொல்லி மன்றாடிகிட்டுருந்தேன்..அடுப்பாங்க‌ரை மூலையை விட்டு அங்கிட்டுகிங்கிட்டு ந‌க‌ர‌லை.. என‌க்கு என் மாம‌னைப் ப‌த்தின‌ சிந்த‌னையைத் த‌விர‌ வேற‌ எதுவும் இல்ல..

என் சினேகிதிங்க‌தேன் மாறி மாறி ஒவ்வொருத்தியா வ‌ந்து என்னை 'அழாத‌டி நீ ப‌ய‌ப்புடுற‌ மாதிரி ஒன்னுமில்ல‌'ன்னு ஆருத‌ல் சொல்லிகிட்டிருந்தாங்க‌..

க‌டைசில என் கோல‌த்தை பார்க்க‌ ச‌கிக்காம பாப்பாத்தி எங்க‌ அம்மா கிட்ட‌ ச‌ண்டைக்கு போயிட்டா.. " இங்க‌ பாரு நீயெல்லாம் ஒரு அம்மாவா.. அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌.. வெறும‌ன ட‌வுனுலேருந்து சேதிங்கிற‌தை கேட்டே ம‌ய‌ங்கி விழுந்தா.. பாதி நாளு பேச்சு மூச்சில்லாம‌ கிட‌ந்தா.. யாரோ ஏதோ சொன்னாங்கங்கிற‌துக்காக உன் ஆங்கார‌த்தை அவ‌கிட்ட‌தேன் காட்ட‌ணுமா.. நீ சொன்ன‌த வ‌ச்சி முருகேசுக்கு என்ன‌வோ ஏதோன்னு இந்த‌ பைத்திய‌க்காரி ப‌ய‌ந்து கிட‌க்குறா..நீயே சொல்லு உன் வாயால‌, முருகேசு நல்லா இருக்கான், அவ‌ ப‌ய‌ப்படுற‌ மாதிரி அவ‌னுக்கு ஒன்னும் கிடையாதுன்னு.. " சொன்னா..

எங்க‌ அம்மா என்னைக் க‌ட்டி அணைச்சு அழுதாங்க‌.. " நீ நினைக்கிறாப்புல முருகேசுக்கு ஒன்னுமில்லடி, "சண்டையில முருகேசு த‌லையில லேசா காய‌ப்ப‌ட்டுருச்சு, ஆஸ்ப‌த்திரியில சேர்த்துருக்கோம், கொஞ்ச‌ம் வ‌ந்து பாத்துக்கோங்க"ன்னு போனு ப‌ண்ணிருக்காங்க‌.. உங்க‌ அத்தை ரொம்ப‌ பெருசா ஒப்பாரி வ‌ச்சிட்டு அப்ப‌வே உன் பெரிய‌ மாமாவோட ட‌வுனுக்கு கிள‌ம்பி போயிட்டா..

அந்த‌ உசில‌ம்ப‌ட்டியாதேன் எதிர்த்த வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு ரொம்ப கேவல‌மா உன்னைப் பத்தியும், நம்ப குடும்பத்தை பத்தியும் பேசிட்டா.. முருகேசுக்கு ஒன்னுன்னவுடனே என்னாலயும் எதிர்த்து பேச முடியலை.. 'நம்ப குடும்பத்தையே சூனியக்கார குடும்பம், நய வஞ்சகக்கூட்டம்னு பல வாரியா ரொம்ப பழைய குடும்ப சண்டையெல்லாம் எடுத்து வச்சு பேச ஆரம்பிச்சிட்டா.. நானும் எம்புட்டுதேன் பொறுத்துப்போக, அதேன் , "பனமரத்துக்கீழ நின்னவனுக்கு தேள் கொட்டினா, தென்னமரத்துக்கீழ நின்னவனுக்கு நெறி கட்டினாப்புலடி கதைக்கிற.. என் தம்பி குடும்பத்து மேல எனக்கில்லாத அக்கரை உனக்கென்னடி"ன்னு நான் கேட்க அவளும் பதிலுக்குப் பேச கொஞ்சம் பெரிய சண்டையாயிடுச்சு.. அந்த நேரம்னு வயலிலேருந்து வந்த உங்க அப்பா, 'வாரியில‌ நின்னு என்ன சண்டை உள்ள போ'ன்னு என்னதேன் அதட்டினாரு.. ஆனா அவ கொஞ்சம் கூட ஆம்பளைங்கிற‌ மட்டு, மரியாதையில்லாம உங்க அப்பாவைப் பார்த்து "ம்க்கும்.. விதியத்தவனுக்கு வெட்டி வீறாப்பு", "என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி ஒரு த‌ர்த்திரிய‌ம் இருந்திருந்தா இப்ப‌டி ஊருக்கும், உற‌வுக்கும் சுமையாயில்லாம‌, எங்காவ‌து க‌ண்கானாத‌ ஊருல‌ உள்ள‌ கோயிலுக்கு நேந்துவிட்டுட்டு வ‌ந்திருப்பேனே ஒழிய‌ இப்ப‌டி மேய‌விட்டுட்டு உக்காந்திருக்க‌ மாட்டேன்.. 'நான் ஒருத்தி நாளும் உதுத்த‌துக‌கிட்ட போயி கோயில‌ ப‌த்தியும் சாமிய‌ப்ப‌த்தியும் பேசுறேனே'.. "ன்னு அநியாய‌த்துக்கு கேவ‌ல‌மா பேசிட்டா..

"கட்டினவனுக்கு தலகுனிவு நான் பெத்துவச்சிருக்குறதுனாலதானே"ன்னு உன் மேல ஆத்திரப்பட்டுட்டேன்டி இந்த அவலச் சிறுக்கி.. "முருகேசு நல்லா தான்டி இருக்கான், நீ எங்களுக்கு வேணும்டி"ன்னு என்னை கட்டிப் புடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க என் அம்மா.. இருந்தும் என‌க்கு ந‌ம்பிக்கையில்ல‌.. என‌க்கு என்மேலவே ரொம்ப‌ ப‌ய‌ம் வ‌ர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு..மாம‌னை பார்க்க‌ப் போன‌ மாம‌ன் பிர‌ண்டுக‌ள்ல‌ ப‌ல‌ பேரும், ஊருல‌ அப்பாவ ம‌திக்கும் ப‌ல‌ பெரிய‌ ஆம்பிளைக‌ளும் வ‌ந்து 'முருகேசு ந‌ல்லா இருக்காம்மா'ன்னு சொன்னாங்க‌.. அப்ப‌வும் என‌க்கு ந‌ம்பிக்கை வ‌ர‌லை..

ட‌வுனுலேருந்து அத்தையும் மாமாவும் ம‌ட்டுந்தேன் திரும்பி வ‌ந்தாங்க..மாமா பிர‌ண்டு பாக்கிய‌ம் சொன்னான் 'மாமாவுக்கு ப‌ரிட்சை இருக்குற‌தால, மாமா ப‌ரிட்சையை முடிச்சிட்டு ஊருக்கு வ‌ரும்'னு..

அத்தை சொன்னாங்க "க‌ண்ட‌வுக‌ க‌ண்ணுப‌ட வேண்டாமுன்னுதேன் ட‌வுனுலே விட்டுட்டு வ‌ந்துருக்கோம்'னு..

இருந்தும் என் ஆசுவாச‌த்தை என்னால அட‌க்க‌ முடிய‌லை..ந‌ல்ல‌ வேளை அடுத்த‌ நாளு கொல்லைக்கு பாப்பாத்தியோட போகையில பெரிய‌ மாமாவைப் பார்த்தேன்.. பாப்பாத்திய கூப்பிட்டு மாமாவே சொன்னாக, 'அவ‌ன் ந‌ல்லா இருக்காம்மா, பரிச்சை முடிஞ்ச‌வுட‌னே வ‌ந்துருவான்..காய‌மெல்லாம் ஓர‌ள‌வு ஆர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு'ன்னு.. அப்பாடா... அதக் கேட்ட‌வுடனே, என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ பெருமூச்சு.. அந்த‌ இட‌த்துலே அய்ய‌னாரு சாமிகிட்ட‌ வேண்டிக்கிட்டேன் "சாமி, என் மாம‌னை ப‌த்திர‌மா பாத்துக்க‌, ந‌ல்ல‌ப‌டியா அது ப‌ரிட்சை எழுதி ஊரு வந்து சேர‌ணும்.. நான் உனக்காக‌ கையில‌ க‌ற்பூர‌ம் ஏத்திக்கிறேன்னு"..

மாமா ஊருக்கு வ‌ர‌ப்போற‌ நாளுக்காக‌ வ‌ழிமேல‌ விழிவ‌ச்சு, அசோக‌ வ‌ன‌த்து சீதையா காத்திருந்தாலும், ம‌ன‌சுக்குள்ள‌ "அம்மா அன்னைக்குச் சொன்ன‌ வார்த்தைக‌ளும், அந்த‌ சின்ன‌ம்மா அம்மாவையும், அப்பாவையும் பேசின‌ பேச்சும்" வ‌ந்து வ‌ந்து ஏதோ ச‌குன‌ம் சொல்லிகிட்டுருந்துதுங்க‌..

..ஆச்சு.. அத்தை ஊரு பெரிய‌வ‌க‌ள தனியா கூப்பிட்டு எங்க குடும்ப‌த்தை க‌ண்டிக்க‌ச் சொல்லியும், உற‌வை வெட்டிவிட‌ச் சொல்லியும்" முறையிட்டுட்டாங்க..


(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 7

Wednesday, November 14, 2007

வாசற்படி - 7

ம‌ணிய‌க்காரு வீட்டு முத்தத்திண்ணையிலதேன் (அது கொஞ்சம் பெரியத் திண்ணை) பேச்சு வார்த்தை.. ரெண்டு குடும்ப‌த்து பெரிய‌ ஆளுங்க, அப்ப‌ற‌ம் ஊரு பெரிய‌ ஆளுங்க எல்லாம் கூடியாச்சு, அத்தையோட முறையீட‌ கேட்க‌..

"ஏதோ சொந்த‌ ஊருல‌ வ‌ந்து வாழ‌ வ‌ந்தோம், நல்லா வாழ்ந்தோம், ஆனா இன்னைக்கு அந்த‌ சொந்த‌மே எங்க‌ள குட‌ல‌றுக்குது.. புடிக்கலைன்னுதேனே முறைப்பாடு போட்டுகிட்டோம், அப்ப‌ற‌முமேன் எங்களோட‌ வ‌ந்து ஒட்டுறாங்க‌.. எங்க‌ளுக்கு அந்த வீட்டு உறவும் வேணாம், பொண்ணும் வேணாம்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ந‌ல்ல‌ப‌டியா பேசி, பின்னாடி பிர‌ச்ச‌னையெதுவும் வாராம உறுதி வார்த்தை கொடுத்து முடிச்சு விட்டீங்க‌ன்னா இந்த‌ ஊருல‌ இருக்கோம், இல்ல‌ன்னா நாங்க‌ இந்த‌ ஊரை விட்டேப் போறோம்"னு க‌ட்ட‌ன்ரைட்டா பேசிட்டாங்க‌ எங்க‌ அத்தை..

'எல்லாம் கேப்பாரு பேச்சு கேட்டு வ‌ந்த‌ புத்தி'ன்னு என் சினேகிதிக‌ளும் தெரிஞ்ச‌வ‌க‌ளும் சொன்னாக‌..

"என்ன‌தேன் கேப்பாரு பேச்சுன்னாலும், கேட்ட‌ என் அத்தைக்கு எங்க‌ போச்சு புத்தி.. என்னால‌ எப்ப‌டி என் மாம‌னை பிரிஞ்சு இருக்க‌ முடியும்?, இல்ல‌ மாமாவால‌தேன் என்னை பிரிஞ்சு எப்ப‌டி இருக்க‌ முடியும்.?. அதுக்கு எல்லாத்துக்கும் கார‌ணமா இருக்குற என் ராசியை, என்னையை விஷ‌ம் வ‌ச்சு கொன்னு போட்டுருங்க‌ன்னு சொல்லியிரு ந்தாலும்" நான் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டுருப்பேன்.. அத்தைக்கு ஏன் எங்க ம‌ன‌சு புரிய‌லை... அத்தைக்குப் புரிய‌லையா?, இல்லை எங்க‌ள‌ ப‌டைச்ச‌ அந்த ஆண்ட‌வ‌னுக்குப் புரிய‌லையா.?..

"க‌ற்ப‌க‌ம் சொல்லுற‌துலையும் நியாய‌மிருக்குதுல்ல‌ப்பா.. சாஸ்திர‌ம், ச‌ட‌ங்கு, சாமிச்ச‌ட்ட‌ம் எல்லாம் உண்மைதானேப்பா.. அது சொல்லுறாப்புல, அது குடும்ப‌த்துக்கும் தொட‌ர்ந்து அடி மேல‌ அடி விழுந்துகிட்டுதானே இருக்கு.. அதுவுமில்லாம‌ சுத்துப்ப‌ட்டியில‌ இருக்குற.. கிராம‌ம் க‌ண்ட‌ வ‌ரையிலும் தெரியும், வீர‌மாகாளிய‌ம்ம‌ன் சாமி அருளும், அது முறைப்பாடுச் ச‌ட்ட‌மும்..இது எல்லாம் தெரிஞ்சும் உற‌வு கொண்டாடிகிட்ட‌து நியாய‌மில்ல‌.. ந‌ம்ப‌ளால ந‌ம்ப‌ சுத்தியிருக்குற‌வ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து நட‌க்காட்டியும் கெடுத‌ல் ந‌ட‌க்காம‌னாவ‌து பாத்துக்க‌னும்.. அத‌னால க‌ற்ப‌க‌த்தோட‌ முறையீட‌ ந‌ம்ப‌தேன் ஏத்துகிட்டு எல்லாத்துக்கும் ஏத்த‌மாதிரி ந‌ல்ல‌து ப‌ண்ண‌னும்..அதே ச‌ம‌ய‌த்தில‌ கூட‌ப்பிற‌ந்த‌ உட‌ன் பிற‌ப்புக‌ வாயிலேருந்து வார்த்தை எதுவும் வாராம, ந‌ம்ப‌ எந்த‌ முடிவும் எடுக்க‌ முடியாது.. நீ என்ன‌ சொல்லுற த‌ங்க‌வேலு"ன்னு (என் பெரிய‌ மாமா)ம‌ணிய‌க்கார‌ரு என் பெரிய‌ மாமாவ‌ப் பாத்து கேட்க..

"நாங்க‌ளும் சில சாமி ஆடுற‌வ‌க‌கிட்ட‌ சாமி கேட்டுட்டோம் 'பொண்ணு எடுக்க வேணா'முன்னுதேன் சாமி குறி சொல்லிருக்கு.. அதேமாதிரி வீர‌மாகாளி கோயில்ல‌யும் முறைப்பாடு போடுற‌துக்கு முன்னாடி சாமிகிட்ட‌ உத்த‌ர‌வு வாங்கினோம்.. ஆனா அதை மீறி நடந்தது சாமிக் குத்தமா ஆயிருந்தாலும், மத்த குறியெல்லாம் வச்சு பார்க்கும்போது , பொண்ணு வேணாமுன்னுதேன் தோணுது.. அதுதேன் ரெண்டு குடும்ப‌த்துக்கும் ந‌ல்ல‌துன்னு தோணுது.. என்னால உறவைப் ப‌த்தி எதுவும் இப்ப சொல்லுற‌துக்கில்ல'ன்னு சொல்லி பெரிய‌ மாமா, என் த‌லையில ம‌ண்ணை வாரி போடுவாருன்னு நான் எதிர்பார்க்க‌லை..

என‌க்கு, பெரிய மாமா சொன்ன‌தை குத்த‌ம் சொல்லுற‌தா இல்ல என்ன‌ இப்ப‌டி அணு அணுவா, அங்க‌ அங்க‌மா நோக‌டிக்கிற‌ ஆண்ட‌வ‌னை குத்த‌ம் சொல்லுறதான்னே தெரிய‌லை..

அம்மாவால‌யும், அப்பாவாலயும் அவ‌மான‌த்துல எதுவும் பேச‌ முடிய‌லையாம்.. தான் நிலைமை ஒரு தீண்ட‌த்த‌காத‌ நிலைமையா ஆயிடுச்சே.. ப‌ண‌ங்காசு நிறைய‌ இல்லாட்டியும்.., ம‌திப்பும், ம‌ரியாதையாயுமா வாழ்ந்த‌ ஊருல‌ பிராது வாங்கி த‌லைகுனிஞ்சு நிக்க வேண்டிய‌தா இருக்குதேன்னு அப்பாக்குள்ள‌ ஆத‌ங்க‌ம் வெடிக்க‌ ஆர‌ம்பிச்சிருச்சு..

"க‌ற்ப‌க‌ம் த‌ங்க‌ச்சி சொன்ன‌ பிராதை நான் ஏத்துக்குறேன், ஊரு பெரிய‌வ‌க‌ பாத்து என்ன‌ முடிவெடுக்குறீங்க‌ளோ அதுக்கு எங்க‌ குடும்ப‌ம் க‌ட்டுப்ப‌டும்"னு எங்க அப்பாரும் கோனாங்கித் தனமா வார்த்தை கொடுத்துட்டாரு..

"மாரியப்பன் பிராதை ஏத்துகிட்டதாலயும், மதிக்கிறதாலயும், பிரச்சனையை சுமூகமா தீர்க்கலாமுன்னு நினைக்கிறோம்..இப்போதைக்கு இந்த‌ ரெண்டு குடும்ப‌த்துக்கும் இடையில எந்த ஒரு உற‌வும் வ‌ச்சுக்க‌ வேணாம், அதே மாதிரி பொம்மிய‌ தாய் மாம‌ன் வீடு இல்லாம‌ வேற‌ இட‌த்தில க‌ட்டிகொடுக்க‌ணும்னு சொல்லிக்கிறோம்னு" பேச்சு வார்த்தைய 'விளங்காத பய ஊருல வெளக்கெண்ணெய் பேச்சா'பெரிய ம‌னுச‌னுங்க‌ பேசி முடிச்சிட்டாங்க..

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினாலு வ‌ருஷ‌மா "புருஷ‌ன், பொண்டாட்டி"ங்கிற ஒரே புத்தியில சுத்தி வந்த உற‌வுதானே என‌க்கும் என் மாம‌னுக்கும் உள்ள‌ உற‌வு.. வ‌ன‌வாச‌மாம் எங்க‌ள் காத‌ல் வாழ்க்கையை முடிச்சு, க‌ல்யாண‌ங்கிற ப‌ட்டாபிஷேக‌த்தை ந‌ட‌த்தி வைப்பாங்க‌ன்னு பார்த்தா, எங்க‌ளை பாடையில ஏத்த‌யில்ல' பாக்கு வெத்த‌ல‌ போட்டு பேசியிருக்காக‌..

வ‌ய‌சாக‌ ஆக‌ பார்வைதானே ம‌ங்கிப்போகும், ம‌தியுமா ம‌ங்கிப்போகும்.!.

தான் பெத்த‌ புள்ளைக்கு உசிரோட‌ கொள்ளி வ‌ச்சிட்டு ஆத‌ங்கமா ந‌ட‌ந்துவாராறு என் அப்பா.. க‌ட்டின‌வ‌ன் வார்த்தைக்கு ம‌டியில‌ சும‌ந்த‌தை க‌ட்டையில ஏத்தி விட்ட என் க‌ட்டுக‌ழுத்தி (சும‌ங்க‌லி) காமாட்சி (என் அம்மா) க‌ண்ண‌ க‌ச‌க்கிகிட்டே வாராக பின்னால‌..

வ‌ந்த‌ அப்பா என் முக‌த்தை ஏறெடுத்தும் பார்க்க‌லை.. 'காமாட்சி, சாமிகிட்ட இருக்க‌ அந்த‌ ம‌ஞ்ச‌ப்ப‌ய எடு'ன்னாரு.. எடுத்துக்குடுத்தாக‌ என் அம்மா.. 'வ‌ர‌ப் பொழுதானாலும் ஆகும்'னு சொல்லிட்டு போயிட்டாரு.. 'எல்லாம் முடிஞ்சிருச்சு, க‌ண்ட‌தையும் ம‌ன‌சில‌ போட்டு உலட்டிக்காம சொன்னப் பேச்சை கேட்டு, செய்ய‌ச் சொல்ற‌தை செய்யி'ன்னு எதோ வீட்டு வேலைக்காரிகிட்ட‌ சொல்லுற‌ மாதிரி சொல்லிட்டு போயாச்சு என் அம்மா..

ந‌ட‌ந்த‌ விவ‌ர‌த்தையெல்லாம் ஒப்பிச்சுட்டு என் அம்மாவும், அப்பாரும் க‌ட்டுன‌க் கூத்தையும் பாத்துட்டு ந‌டைய‌க் க‌ட்டியாச்சு பாப்பாத்தி..

அடுத்த‌ நாளு காலையில‌தேன் ம‌ஞ்ச‌ப்பையி விவ‌ர‌ம் முழுசா தெரிய‌ வ‌ஞ்சுது.. பையில‌ இருந்த‌து என் ஜாத‌கமாம்.. உள்ளூருல இருக்குற‌வ‌க‌கிட்டயும், சுத்துபட்டு சொந்தங்ககிட்டயும் ஆளுவிட்டு விசாரிச்சாச்சாம்.. ஒருத்த‌னும் என்ன‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌திக்க‌லையாம்.. சில‌ பேத்துக்கு என் ராசிமேல‌ ப‌ய‌ம், சில பேத்துக்கு நான் என் மாமாமேல வ‌ச்சிருக்கும் நேச‌த்தில‌ ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு அதுல ச‌ந்தேக‌ம், சில பேத்துக்கு என் மாமா மேல ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு ஜோடிக‌ளை பிரிப்பதுல‌ ந‌ம்ப‌ க‌த்தியா இருக்க‌வேணாமுங்கிற‌ ந‌ல்ல‌ அக்க‌றை..சொந்த‌க்கார‌வுக, தெரிஞ்ச‌வுக, தெரியாதவக‌கிட்ட எல்லாம் சொல்லி வெளியூருல‌ கிழ‌க்கு இல்ல‌னா தெக்குப் ப‌க்க‌ம் மாப்பிள்ளைப் பாக்க‌ச் சொல்லி சொல்லியாச்சாம்..

'கையிலயே ஊத்துக்குழி வெண்ணெய‌ வ‌ச்சுகிட்டு இப்ப‌டி கிறுக்குத்த‌ன‌மா ஊரு ஊரா தேடுற' என் அப்பாரை என்ன‌ன்னு நான் சொல்லுற‌து..

இன்னும் மாமா ப‌ரிட்சை முடிஞ்சு வ‌ர‌ ப‌தினேழு நாளிருக்கு..எப்ப‌டியாவ‌து நான் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு க‌ட‌த்திட்டேன்னா, அப்ப‌ற‌ம் எப்ப‌டியும் என் மாமா இந்த‌ சிக்க‌லிலேருந்து என்னை மீட்டுரும்.. மாட்டிக்க‌மாட்டேன்னு என‌க்குள்ள‌ எதோ ஒரு தைரிய‌ம் இருந்துச்சு..

பாக்கிய‌ம் ப‌ய அப்ப‌யும் சொன்னான்.. நாந்தேன் "வேண்டாம்பா.. மாமா பாவ‌ம், ஏற்க‌ன‌வே அதுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல.. நீ வேற‌ போயி அதுகிட்ட‌ இதெ‌ல்லாம் சொன்னீன்னா, அப்ப‌ற‌ம் ஒன்னு அதால‌ ச‌ரியா ப‌ரிட்சை எழுத‌ முடியாது இல்ல‌ அது ப‌ரிட்சையே எழுதாமா ஊருக்கு வ‌ந்துரும்.. அதோட‌ மூனு வ‌ருஷ‌ம் ப‌டிச்ச‌தெல்லாம் வீணாப் போயிடும்"னு சொன்னேன்..

ராசிங்கிற‌ பேருல ஊசிப்போன‌ இந்த‌ உளுந்த‌ வ‌டை உள்ளூரிலே விலை போகாத‌ போது, வெளியூரிலையா விலை போகப்போகுதுன்னு ஒரு மத மதப்புல இருந்துட்டேன்..

ஆனா என் கிர‌கம்.., அற‌ந்தாங்கிக்கு அங்கிட்டு இருக்கும் காதேரிப்ப‌ட்டியிலேருந்து ஒரு சனியன புடிச்சாந்துட்டாரு என்னை பெத்த‌ ம‌க‌ராச‌ன்.. எவ‌னோ சொன்னானாம், எவ‌னையோ போயி பாத்தாராம், இந்த‌ மாப்பிள்ளையை புடிச்சாராம்.. மாப்பிள்ளை லாரி டிரைவ‌ரா வேலை பாக்குறாராம், எப்ப‌டியும் ஒரு லோடுக்கு 50 - 100ரூபாய் சம்பாதிப்பாராம்.. கூட‌ப்பிற‌ந்த‌து ஒரு அக்காவும் ஒரு த‌ம்பியுமாம்.. எல்லாத்துக்குமே அங்க‌னைக்குள்ள்வே க‌ல்யாண‌மாயிடுச்சாம் .. இவ‌ருக்கும் என்னைப் போல‌வே ராசி ச‌ரியில்லாம போயிடுச்சாம்.. அதுதேன் எங்க‌ அப்பாவுக்கு ரொம்ப‌ புடிச்சுருந்துதாம்.. மாப்பிள்ளை வீடு பெண் பார்க்க‌ வ‌ந்தாச்சு.. அருவ‌ருப்பா போயி நின்னேன்... டீ, காபி எதுவும் நான் குடுக்க‌லை.. டிரைவ‌ர் மாப்பிள்ளைகிட்ட என்னைப் ப‌த்தி எல்லாமும் சொல்லிட்டாராம் என் அப்பாரு.. இப்ப‌டிப் ப‌ட்ட‌ பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குற‌துல, அவ‌ருக்குத்தேன் ஏக‌ப்ப‌ட்ட சந்தோஷ‌மும், புண்ணிய‌மும்னு சொன்னுச்சாம் அந்த காக்கா..

"என‌க்கு ஒரு கெட்ட‌து ந‌ட‌க்கனும்னா ம‌ட்டும் க‌ண்ண‌மூடி க‌ண்ணத் திற‌க்குற‌துக்குள்ள ந‌ட‌க்குது.. ஒரு ந‌ல்லது ந‌ட‌க்க‌ எம்புட்டு நாளு, எம்புட்டு வ‌ருஷ‌ம், எம்புட்டு யோச‌னை யோசிக்குது என் வாழ்க்கை".. என்ன‌டா இது விந்தைனு, எல்லாம் என‌க்கு ஏதோ சித்து விளையாட்டுமாதிரியே தெரிஞ்சுது.

'என் மாமாவோட‌ க‌டைசி ப‌ரிட்சைக்கும் முத ப‌ரிட்சை அன்னைக்குத்தேன் என் க‌ல்யாணத் தேதி'...

மாமாவுக்குத் தெரியாம விஷ‌ய‌த்தை ம‌றைச்சு மாமாவ‌ ஒழுங்கா பரிட்சை எழுத‌ வைக்க‌ அத்தை ட‌வுனுக்கு புற‌ப்ப‌ட்டுகிட்டு இருந்தாக‌..

ஊருக்குள்ள‌ உள்ள‌ எல்லா சின்ன‌துக்கும் விவ‌ர‌முள்ள, அனுப‌வ‌முள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்டேருந்து அறிவுரை.. "யாரும் பொம்மி க‌ல்யாண‌த்துல‌ எந்த‌ வித‌ குழ‌ப்ப‌த்தையும் உண்டு ப‌ண்ணாதீங்க‌.. அவ அப்ப‌ன் மான‌ஸ்த‌ன்.. ரோச‌த்தோட‌ கொடுத்த‌ வாக்கை காப்பாத்த‌ ந‌டையா ந‌ட‌ந்து மாப்பிள்ளைய புடிச்சாந்துருக்கான்.. க‌ல்யாண‌ம் நின்னுச்சுன்னா அவ‌ன்பாவ‌ம் உங்களை சும்மாவிடாது.. அந்த‌ புள்ளைக்கு அங்க‌தேன் வாழ‌ணும்னு ஆண்ட‌வ‌ன் அது த‌லையில‌ எழுதி வ‌ச்சிருக்கான்.. அதனால‌தேன் ஜாத‌க‌மெல்லாம் ஒத்துபோயிருக்கு.. மூக்க‌ நுழைச்சு மூச்சுத் திணற வச்சுராதீங்க ஒரு குடும்ப‌த்தை, ப‌ய‌ புள்ளைகளா.."ன்னு..

நான் நேரா அய்ய‌னாரு கோயிலில‌ போயி கையில‌ சூட‌மேத்தி என் க‌ட‌மையை அவ‌னுக்கு செஞ்சு முடிச்சேன்..

செம்மிய‌ நிமிர்ந்து பார்க்க‌வும் என் ம‌ன‌சில‌ தெம்புஇல்ல‌..

அய்ய‌னாருகிட்டேருந்து க‌ரிச்சாந்தையும், ரோசு க‌ல‌ர் குங்கும‌த்தையும் எடுத்துகிட்டு நேரா மாமா வீட்டுக்குப் போனேன்..என்னை அத்தை விச‌ன‌மா பாத்தாக‌லா இல்ல‌ வித‌ண்ட‌வாத‌ம் வ‌ந்துருக்கேன்னு பாத்தாக‌லான்னு தெரிய‌ல‌..

'ப‌ய‌ப்ப‌டாதீங்க‌ அத்தை, இனிமே நானும் என் ராசியும் முழுங்குற‌துக்கு எதுவுமில்ல..என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வாராது.. எல்லாந்தேன் முடியப்போகுதே..மாமா ந‌ல்லாயிருக்கனும் அதுதேன் என‌க்கு வேணும், இது அய்ய‌னாரு கோயிலில மாமாவுக்காக‌ நான் செஞ்ச வேண்டுத‌ல் சாந்தும், குங்கும‌மும்.. இது சாமியிதுதேன், மாம‌னுக்கு பூசி விட‌ப்போற‌து நீங்க‌தேன்.. அத‌னால எந்த‌ சாமிக்குத்த‌மும் ந‌ட‌க்காது.. அப்ப‌டி எதாவ‌து ந‌ட‌க்கனும்னா அது இந்த‌ வாட்டியாவது என‌க்கே நடந்து தொலைக்க‌ட்டும்.. மாமாவ ந‌ல்ல‌ ப‌டியா பரிட்சை எழுத‌ சொல்லுங்க'ன்னு சொல்லி அத்தை கையில கொடுத்துட்டு, கிள‌ம்பி வீட்டுக்கு வ‌ந்தேன்.. வாசலில அம்மா என்னைப் பார்த்தாக‌.. 'இந்த‌ வாட்டி எந்த‌ ச‌ண்டையும் வாராது.. சாமிக்குத்த‌மும் வாராது'ன்னு சொல்லிட்டு உள்ள‌றைக்கு வ‌ந்தேன்..

என் மாம‌னோட‌ நினைவுக‌ளை ஓட‌விட்டேன்..

"உள்ளூருல‌ இருக்குற‌வுகல‌ நேருல‌ போயி ம‌ஞ்ச‌ள், குங்கும‌ம் வ‌ச்சு க‌ல்யாண‌த்துக்கு அழைக்க அம்மா குங்கும‌ச்சிமிழோட‌ போயாச்சு".. அய்ய‌னாரு கோயிலிலேருந்து மாமா வீட்டுக்கு வ‌ரும்போது பிச்சாந்த அர‌ளி விதை ம‌டியில க‌ன‌த்துச்சு.. மாமாவோட‌ நினைப்போட‌ ஒரு கோழையா.. அர‌ளி விதையை அம்மியில‌ அரைச்சேன்.. பூமிய விட்டு பிரியிற‌துக்கு முன்னாடி எல்லா சொந்த‌ ப‌ந்த‌த்தையும் பார்த்தாச்சு, உள்குத்த‌லா சொல்லியாச்சு..

ஆனா என்னோட‌ இந்த‌ பிற‌ப்புக்கும், வாழ்ந்த‌ வாழ்க்கைக்கும், ம‌ண்ணை விட்டு பிரிய‌ப்போற‌ இந்த உசிருக்கு அர்த்த‌ம் சொல்லும் என் ம‌ரிக்கொழுந்துகிட்ட, என் புருஷ‌ன்கிட்ட‌ சொல்ல‌லையே..ம்ஹும்.. சொல்லாம‌ப் போனாதேன் தேடி வ‌ர‌மாட்டாக‌.. என் வீர‌சிங்கு இந்த திராணிய‌த்த‌வ‌ள‌ நினைச்ச‌தை நினைச்சு என்னை வெறுத்தாச் ச‌ரி.. ம‌ரிக்கொழுந்துன்னு ம‌ன‌சில‌ நினைச்சு முத உருண்டைய‌ முழுங்கிட்டேன்.. க‌த‌வு த‌ட்டுற‌ ச‌த்த‌ம் கேட்டுச்சு.. அன்னைக்கு ஆத‌ர‌வுக்கு ஏங்கின‌போது வந்த‌ மாதிரி இன்னைக்கு எனக்கு இந்த‌ உசிருக்கு மோட்ச‌ம் குடுக்க‌ வ‌ந்திருச்சா என் மச்சான்னு என‌க்குள்ள ஒரு ஆவ‌ல்..

ஆசையா போனேன்.. ஆனா அம்மா ச‌த்த‌ந்தேன் கேட்டுது.. நெஞ்செல்லாம் அடைக்கிற‌ மாதிரி இருந்த‌து.. மரிக்கொழுந்து வாசத்தை நினைப்பெல்லாம் மோந்துகிட்டுருந்ததால முழுங்கும் போது தெரிய‌லை க‌ச‌ப்பு.. இப்ப‌தேன் தெரியிது க‌ச‌ப்பும் எரிச்ச‌லும்..

'எங்க‌ கிராம‌த்துல எந்த‌ வீட்டுக்க‌த‌வும் சாத்தியிருக்காது.. ராத்திரியிலதேன் சில‌ வீட்டுக்க‌த‌வுக‌ சாத்தியிருக்கும்.. வீட்டு பெரிய ஆம்ப‌ளைக‌ க‌ட்டிலுபோட்டு திண்ணையில‌ இல்லைனா வாரியில‌தேன் ப‌டுத்துருப்பாக .. அத‌னால‌ எப்ப‌வும் எங்க‌ வீட்டுக்க‌தவு சாத்தியிருக்காது..' ஆனா இன்னைக்கு சாத்தியிருக்க‌வும் எங்க‌ அம்மா சுதாரிச்சுகிட்டாங்க.. க‌த‌வை ப‌ல‌மா த‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிட்டாக‌.. வாயெல்லாம் துடைச்சுகிட்டு க‌த‌வை போயி திறந்தேன்.. நான் எதோ தப்பு ப‌ண்ணியிருக்கேன்னு என் அம்மா க‌ண்டுபிடிச்சிருச்சு.. அடி ஒன்னும் இடிதேன்.. ஆனா என‌க்குத்தேன் அதெல்லாம் உண‌ர உண‌ர்ச்சியில்லையே.. க‌ண்ணெல்லாம் சொருக‌ ஆர‌ம்பிச்சிருச்சு.. என் மேல‌ வந்த‌ வாடைய‌ வ‌ச்சே, அர‌ளி வித‌ன்னு அடையாள‌ம் க‌ண்டுகிட்டாக‌ என் அம்மா.. உப்பில‌ த‌ண்ணிய‌ க‌ல‌க்கி.. இல்ல இல்ல..(அம்மா.. நெஞ்செல்லாம் எரியுதே)..த‌ண்ணியில உப்ப‌ க‌ல‌க்கி என்னை வ‌லுக்க‌ட்டாய‌மா குடிக்க‌ வ‌ச்சாங்க‌.. நானும் என்னால‌ முடிஞ்ச‌ வ‌ரை நெஞ்செரிச்சலுலயும் குடுத்தத் த‌ண்ணிய‌த் துப்பினேன்..

பாப்பாத்திய‌ கூப்பிட்டாக‌ அம்மா.. ஓடி வ‌ந்தா அவ‌ளும்..

என் கிட‌ப்ப‌ பார்த்து வைத்தியாயி (எங்க ஊரு ம‌ருத்துவ‌ ஆயாவ‌ அப்ப‌டித்தேன் கூப்பிடுவோம்) கூப்பிட‌ப் போயிட்டா..ஒழுங்கா த‌ண்ணிய‌ குடிக்கிறியா இல்லை இருக்கிற விதையை நான் திங்க‌வான்னு என்னை மிர‌ட்டினாங்க‌ என் அம்மா.. க‌ண்ணு ரொம்ப‌ சொருகிடுச்சு.. எப்ப‌டி அந்த‌ த‌ண்ணியக் குடிச்சேன், வைத்தியாயி வ‌ந்து என்ன‌ வைத்திய‌ம் பாத்துச்சுன்னு எல்லாம் என‌க்கு நினைவில்ல‌..

நினைவு வ‌ந்த‌ப்ப‌ வாந்தியும் கூடவே சேர்ந்து வந்துது.. முழு நினைவு வ‌ந்து பொழ‌ச்ச‌வுடனேதேன் இருந்த‌து ஒப்பாரிக் க‌ச்சேரி..

'அடி பாதியில‌ போற‌வ‌ளே, பாடையில‌ போற‌வ‌ளே... நீ போயிட்டா எங்களுக்கு ஏது நாதி..அடி நாதியெத்து போற‌வ‌ளே, ந‌ட்ட‌ ந‌டுவுல‌ போற‌வுளே.. நீ போயி நாங்க எங்களையையே சுடுகாட்டுல‌ வ‌ச்சுக்குற‌துக்கு, பொறுத்து இருடி உன் அப்ப‌னும் வ‌ர‌ட்டும்.. எல்லோரும் போயி குழியில‌ இற‌ங்கிடுவோம்"னு எங்க‌ அம்மா முந்தானையில‌ சிந்த‌ ஆர‌ம்பிச்சுட்டாக..

"எங்க‌ளுக்கு என்ன‌ வேண்டுத‌லா, உன் மாமனுக்கு உன்னை க‌ட்டி வைக்காம‌ இருக்க.. உன் அத்தைதானேடி உன்னை வேண்டாங்கிறா... உன் ராசிதானேடி அவ‌ குடும்பத்தோட‌ ஒத்து வாழ விடமாட்டேங்குது, நீ போனா முருகேசு ம‌ட்டும் இருப்பானா.. அவ‌னுந்தானேடி செத்துபோவான்.. ஏன்டி இப்ப‌டி எல்லாத்தையும் குழியில‌ த‌ள்ள‌ அலையிற‌.. எவ‌னுக்கோ ஒருத்த‌னுக்கு க‌ழுத்த‌ நீட்டி வாழ்ந்துதேன் தொலைஞ்சா என்ன"ன்னு ருத்திர‌ தாண்ட‌வ‌ மந்திர‌ம்பாட‌ ஆர‌ம்பிச்சிருச்சு எங்க‌ அம்மா..

நான் எடுத்த‌ க‌டைசி முய‌ற்சியும் தோத்துப்போச்சு..

(ப‌டிக‌ள் இருக்கு உள்ளே நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 8

Monday, November 12, 2007

வாசற்படி - 8

க‌ல்யாண‌ தேதியும் வந்திருச்சு.. அம்ம‌ன் கோயிலில‌ க‌ல்யாண‌ம்.. ஊரு ம‌ந்தையில ப‌ந்த‌ போட்டு சாப்பாடு.. தாய் மாம‌ன் வீட்டுக்கு அழைப்பில்ல‌.. க‌ட்டிக்கவேண்டிய‌ முறைமாம‌னுக்கும் சொல்லிவிட‌லை.. தாய் மாமனோட வீடே பூட்டியிருக்கு ஊருக்குள்ள‌.. பொண்ணுக்கு க‌ல்யாண‌ம்.. பொண்ணோட‌ நினைவெல்லாம் ம‌ரிக்கொழுந்து .. சுறுக்குக் கயித்தக் கட்டிட்டான் டிரைவரு..

பொண்ணிருந்தா..மரிக்கொழுந்து நினைப்புல.. 'உரியவளுக்கு ஒன்னுன்னா உத்தவனுக்கு அசிரிக்குமா, இல்ல ஆகாதது ஏதும் நடந்துருமா.?. அய்யோ என் மாமா..பாவமே.. அய்யனாரு கிட்டயும் உதவிகேக்க முடியாது.. அந்த ஆள நினைச்சாலே ஆத்திரந்தேன் வருது.. இப்படி எங்களை பிரிச்சு வச்சு அனாதையாக்கிட்டாரே..'..

மாப்பிள்ளை வீட்டு அழைப்போட முதராத்திரி மாப்பிள்ளை வீட்டுல..மாப்பிள்ளையை ஏறெடுத்தும் பார்க்காதவ, சித்தமில்லாம இருந்தவ, தலையில மரிக்கொழுந்தும் செவ்வந்தியும் சேர்ந்த கதம்பத்தை வச்சவுடனேதேன் தான் இருக்குற உலகத்துக்கே வந்தேன்..

தூக்குத்த‌ண்ட‌னை கைதியா நுழைஞ்சேன் முத‌ராத்திரி அறைக்குள்ள‌.. "எத்த‌னை த‌ட‌வை அவ‌னோட‌ ப‌டுத்துருக்க"ன்னு கேட்டான் டிரைவ‌ரு.. "போடா போக்க‌த்த‌வ‌னே.., உன‌க்கென்ன‌டா தெரியும் எங்க‌ உற‌வைப் ப‌த்தி"ன்னு.. எல்லாம் மாயையா போன‌வ‌ளுக்கு அவ‌னை ஒரு ஜ‌ட‌மாகூட‌ ம‌திக்க‌ என‌க்கு இஷ்ட‌முமில்ல‌, நான் ப‌திலும் சொல்லல‌..

என் த‌லையில‌ இருந்த‌ க‌த‌ம்ப‌த்தை பிக்க‌ கைய‌ வ‌ச்சான், எதோ சாக்க‌டைத் த‌ண்ணி ப‌ட்டாப்புல அருவ‌ருத்துத்த‌ள்ளிப் போனேன்.. ஆனா அந்த‌ குர‌ங்கு என் க‌த‌ம்ப‌த்தை பிச்சிருச்சு.. பிச்சுபோட்ட‌ க‌த‌ம்ப‌த்தை அந்தக் காட்டேரி பிடியிலேருந்து போராடி ம‌ரிக்கொழுந்தை தொட்டு எடுத்தேன்..

ச்சீ..ச்சீ..ன்னு அவன உதறி என்னையும், என் ம‌ரிக்கொழுந்தையும் காப்பாத்திக்க‌ துடிச்சேன்.. விடிஞ்சா அவ‌ன் என் பொழ‌ப்ப‌ 'ச்சீ'ன்னு ஆக்க‌த் துனிஞ்சிட்டான்.. போராடின‌தில‌ நானும் க‌ச‌ங்கியாச்சு, என் வலியெல்லாம் சுமந்து ம‌ரிக்கொழுந்தும் க‌ச‌ங்கியாச்சு..

த‌ய‌வுசெஞ்சு அந்த‌ க‌ழுதைப்ப‌‌ய‌ ச‌மாச்சார‌த்தை இதுக்கு மேல‌ நீங்க‌ளும் கேக்க‌ வேணாம், நானும் சொல்ல‌ வேணாம்.. உங்க மெலிசு இத‌ய‌த்தால‌ எல்லாம் அதை தாங்கிக்க‌ முடியாது.. ம்ஹும்.. இந்த காவாலிப்பய உலகத்துல ஒரு ஆம்பளைய விட, ஒரு பொண்ணுக்குத்தேன் வீரமும், விவேகமும் ரொம்ப அவசியம்.. எக்காரணத்தைக் கொண்டும் இத யாரும் மறந்தும்ராதீங்க, கைவிட்டும்ராதீங்க..
பொழுது விடிஞ்சிருச்சு.. ஆனா என‌க்குத்தேன் என்னைக்கு விடியும்னு தெரிய‌லை..
பொண்ணு வீட்டு விருந்துக்கு கூப்பிட‌ வ‌ந்திருக்காரு என் அப்பாரு..

'அடி, ஆத்தி.. இன்னைக்கு ராத்திரி எப்ப‌டியும் த‌ப்பிச்சிடலா'முன்னு த‌ப்பு க‌ண‌க்கு போட்டுட்டேன்.. கூப்பிட்ட‌வுட‌னே போனா ம‌ரியாதையில்ல‌, நாளைக்கு வாறோம்னு சொல்லிட்டான் இந்த‌ ப‌ர‌தேசிப்ப‌ய‌..

அய்யோ.., எப்ப‌டி த‌ப்பிப்பேன்னு.. ரொம்ப பயந்துகிடந்தேன்.. இதனால தானா எல்லாரும் ராத்திரின்னாலே பேயின்னு சொல்லி பயப்புடுறாக.?. என‌க்கு ராத்திரி வ‌ர, வ‌ர அந்தக் க‌ட்டையில‌ போற‌வ‌ன‌ அருவாம‌னையால‌ கொன்னு போட்டுட‌லாமான்னு ஆவேச‌மா இருந்துச்சு..

அந்த‌ குடிகார‌ப்ப‌ய‌ ராத்திரிபூரா வ‌ர‌லை .. அம்மா.. த‌ப்பிச்சிட்டேன்னு கண்ண சொருகிக்கிட்டேன்..

ஆனா விடிஞ்சிருச்சே.. என் ஊருக்குள்ள‌ எப்ப‌டி கால‌டி எடுத்துவைப்பேன்..என் உரிமைய‌னுக்கு இந்த உட‌ம்பு, ம‌ன‌சு ரெண்டையும் கொடுக்காம, வெளி சுகமேதும் கொடுக்காத இந்த வெத்து ம‌ன‌சை ம‌ட்டும் கொடுத்து, அசிங்க‌ப்ப‌ட்ட உட‌ம்போட‌ எப்ப‌டி என் மாம‌னைப் பார்ப்பேன்.?.

அட, ஆண்ட‌வா.. என் இத‌ய‌த்தை என்ன‌ இரும்புல‌யா செஞ்சு வைச்ச‌.. இம்புட்டு ரன‌ வேத‌னைக்கும் சாகாம‌ இன்னும் க‌டந்து துடிச்சிட்டுருக்கே.. ந‌ல்லாயிருக்குற‌வ‌க‌ளுக்கெல்லாம் வ‌ருதே இந்த‌ மார‌டைப்பு.. இந்த‌ நாதிய‌த்த‌வ‌ளுக்கு வ‌ர‌க்கூடாதா.. கண்ணுல இறுகிப்போனத் தண்ணி மாதிரி என் இதயத்துல பாயிர ரத்தமும் இறுகிப்போகக்கூடாதா.??. என்ன‌ பாவ‌ம் ப‌ண்ணினேன்னு என்ன‌ இப்ப‌டி வாட்டுற‌..

வ‌ந்திருச்சு ஊரு, இல்ல இல்ல நான் ச‌மாதியா ச‌ம‌ஞ்சுப்போக‌ப் போற‌ இட‌ம்..

புதுப்பொண்ணை பார்க்க வந்தாச்சு ஊருச‌ன‌ம்..என் க‌ண்ணு முன்னாடி செம்மிதேன் வ‌ந்துபோனுச்சு, ..ம்க்கும்.. இன்னும் என்ன‌ இருக்குன்னு இப்ப‌டி என் மாமா ஊருக்குள்ள வந்திட்ட‌தை எனக்குச் சொல்ல‌ வ‌ந்திருக்கு இந்த‌ச் செம்மி..

ந‌ம்ப‌ ஆளுதான் ச‌மைஞ்சு ப‌ல‌ வருஷ‌ம் ஆச்சே.. இது என்ன‌ புதுசா மாம‌னாரு வீட்டு முன்னாடி காய்ஞ்சுகிட்டு இருக்குற‌ வாழைப் பந்த‌ல்னு எங்க வீட்டைப் பாத்து மாமா கால‌ வைக்க‌, அத்தை கைப்பிடிச்சு இழுத்த‌தையும் உத‌றிட்டு வ‌ந்தாச்சு வீட்டு முன்னாடி..திண்ணையில‌ உக்காந்துருந்த‌ பெரிய ஆளுக‌ளும், வாரியில‌ சேரு போட்டு உக்காந்திருந்த‌ சொந்த‌ங்க‌ளும் எந்திருச்சு நின்னாச்சு..
"என்ன‌ மாமா.. வீட்டுல என்ன விஷேசம்"னு என் ம‌ரிக்கொழுந்து கேட்க‌, பெத்த‌வ‌க‌ளேருந்து எல்லா சொந்த‌ பந்த‌மும் ப‌தில் சொல்ல‌த் திண‌ற‌, "அட.. வா முருகேசு, ஏம்மா.. தங்கச்சி.?. உட‌ம்பு சுக‌மில்லாத‌ புள்ளைக்கு ந‌ல்ல‌து பொல்ல‌து ஆக்கிபோடாம‌.. வெயிலில‌ ஏன் அலைய‌ வைக்கிற‌.. வீட்டிக்கு கூட்டிட்டு போ.."ன்னு என் மாமன் கேள்விய‌ மாத்தினாரு ம‌ணிய‌க்கார‌ரு..

"நான் ந‌ல்லாதானுங்க‌ இருக்கேன், ந‌ல்ல‌த‌ என் வீட்டுல‌தேன் சாப்பிடணுமா, எங்க அத்தை வீட்டுல‌ சாப்பிட‌க்கூடாதா.. நீங்க‌ சொல்லுங்க‌ மாமா "வீட்டுல‌ என்ன‌ விஷேச‌ம்..எல்லாம் எப்ப‌டி இருக்கீங்க"ன்னு ப‌தில் கேள்வி கேட்க‌.. "வாடா வீட்டுக்குன்னு" அத்தை இழுக்க‌.. "இரும்மா.. இது ம‌ட்டும் வீடு இல்லாம‌ என்ன‌ காடா.. நீங்க‌ சொல்லுங்க‌ மாமா"ன்னு என் அப்பாரு முக‌த்தைப் பார்த்து கேட்க‌..ப‌தில் சொல்லத் தெரியாம‌ தேள் கொட்டின‌ திருட‌னாட்ட‌ம் முழிக்க‌, "அவ‌ரு பொண்ணுக்கு க‌ல்யாண‌ம‌ப்பா"ன்னு ம‌ணிய‌க்காரு ப‌தில் சொல்ல‌.. "க‌ட்டிக்கப்போர‌ என் கிட்ட‌ கேக்காம‌லே தேதிய‌ முடிவு ப‌ண்ணிட்டீங்க‌ளா மாமா"ன்னு கேட்க‌.. ப‌தில் சொல்ல ந‌ல்லொழுக்க‌மா வாழ்ந்த‌வுக எல்லாம் நாக்கு வ‌ற‌ண்டு நிக்க‌, "உங்க‌ளுக்கு ஒரு பொண்ணுதானே, அதைதேன் க‌ட்டிகிட்டு மாப்பிள்ளையா நான் நிக்கிறேனே, இன்னும் ஏதும் பொண்ணிருக்கா அந்த‌ ஆளுக்கு க‌ட்டிக் கொடுக்க"ன்னு ந‌க்க‌லா ப‌தில் சொன்னான் அந்த நா.. (ப‌டிச்ச‌வக..உங்க‌ முன்னாடி இப்ப‌டியெல்லாம் ஒரு ஆம்ப‌ளைய‌ வையுற‌து த‌ப்புத்தேன்.. ஆனா அசிங்க‌ப்ப‌ட்டுப் போன‌வ‌ளுக்குத்தேன் தெரியும் வ‌லி.. வையிற‌ வார்த்தைக‌ கேட்க‌ப் பிடிக்க‌லைனா காத‌ மூடிக்கோங்க‌..) நார‌ப்ப‌ய..

"யாரு பொண்ணை யாரு கட்டிக்கிற‌து.. யாருக்கு, யாரு மாப்பிள்ளை.."னு நல்லா உறைக்க‌ கேட்டுச்சு என் ம‌ரிக்கொழுந்து..

"என்னய்யா மாமா, விருந்துக்கு கூப்பிட்டு என்ன‌ அசிங்க‌ப்ப‌டுத்திறியா.. சொல்லியா அவ‌ன்கிட்ட .. முந்தா நாளுதேன் உன் பொண்ணு க‌ழுத்துல‌ நான் தாலி க‌ட்டினேன்னு" என் மாம‌ன் முன்னாடி விறைச்சு பேசிட்டான் அந்த‌ வீணாப்போன‌வ‌ன்..

ஏதோ சூது ந‌ட‌ந்துருக்குன்னு பெருசுக‌ முழிக்கிற‌ முழியில‌யும், புதுசா முளைச்ச‌ க‌ளை முண்டுவதுலையுமே புரிஞ்சுக்கிச்சு என் ம‌ச்சான்..

ம‌னசைத் த‌ள‌ற‌ விட‌லை என் ம‌ரிகொழுந்து ம‌க‌ராச‌ன்..

தாலி க‌ட்டின‌வ‌னுக்கெல்லாம் பொண்டாட்டியா வாழ‌ என் பொம்மி ஒன்னும் போக்க‌த்த‌வ‌ இல்ல‌ ..
[இந்த, இந்த‌ ஒரு சொல்லு போதுமே .. என் உசிர, நான் வாழுற வாழ்க்கையின் அர்த்த‌தை உரிய‌வ‌னால‌ ம‌ட்டுந்தானே புரிஞ்சுக்க முடிஞ்சுருக்கு.., என்னை பெத்தவளுக்கும் இது புரிய‌லை, என்னைச் சும‌ந்து வ‌ள‌த்த‌வ‌ருக்கும் புரியாம‌ப் போயிடுச்சே..]

எவ‌னாவ‌து அடுத்த‌வ‌ன் பொண்டாட்டிக்கு தாலிக‌ட்டி தான் பொண்டாட்டின்னு சொல்லுவானா.?..உன‌க்கிட்ட‌ என‌க்கென்ன பேச்சு.. என் பொம்மிய‌ அடுத்த‌வ‌னுக்கு க‌ட்டிக் கொடுக்க‌ நீங்க‌ யாரு மாமா..?.."ன்னு என் அப்பார‌ப் பார்த்து ஓங்கி அறையிர‌ மாதிரி, எல்லாத்துக்கும் உறைக்கிற‌ மாதிரி கேட்டுச்சு என் மாமா..

" ஏன்யா பொண்ணைப் ப‌த்தினியா வ‌ள‌த்தேன்னு சொன்ன.., அவ‌னோட‌ ப‌டுத்து எந்திரிச்ச‌வ‌ளைத்தேன் என‌க்கு க‌ட்டிவ‌ச்சியா"ன்னு ஊருச‌ன‌ம் அத்த‌னை முன்னாடியும் என் அப்பாரைப் பாத்து கேட்டுச்சு அந்த‌ ஊதாரி..நல்லா வேணும் என் அப்பாருக்கு.. பெத்த‌ பொண்ணு வாழ்க்கைய கூட நினைக்காம வெறும்ப‌ய‌ கௌர‌வ‌த்துக்குன்னு அவரு தேடியாந்த‌ தேவாங்குத்தேனே அது..

என்னை ஒருத்த‌ன் அசிங்க‌ப்ப‌டுத்திட்டான்ன‌வுட‌னே ஆத்திர‌ப்ப‌ட்டு அவ‌னை அடிக்க‌ப்போயிருச்சு.. 'என் ம‌ரிகொழுந்து அப்பு'.. ச‌ண்ட‌ முத்திருச்சு.. "சாப்பிடக் கூப்பிட்டு என் சங்கருக்க பார்க்குறீகளாடா..?.. உன் பொண்ணு எப்படியாயிருந்தாலும் என்னோடதானே வாழுந்தாகணுன்.. நல்லா வாழ வச்சர்றேன் வாங்கடா" ன்னு வெத்து வேட்டு வெடிச்சிட்டு போயிடுச்சு..

ம‌‌றுப‌டியும் பெரிய‌வுக எல்லாம் ம‌ணியாரு வீட்டுத் திண்ணையில‌ கூடியாச்சு..

"க‌ல்யாண‌மெல்லாம் முடிஞ்சிருச்சு, நீ இப்ப‌டி க‌ல‌க‌ம் ப‌ண்ணுற‌துல‌ நியாய‌மில்ல‌.. அந்த‌ பொம்மி வாழ்க்கையை அழிச்சிடாத‌ன்னு" புத்திகெட்ட பெருசு ஒன்னு என் மாம‌னுக்கு புத்தி சொன்னுச்சாம்..

"பொம்மி, உன‌க்கும் உன் குடும்ப‌த்துக்கும் பொருத்த‌மில்லேன்னுதேன் அவ‌ளை கௌவுருதையா அச‌லூருல‌ க‌ட்டிக்கொடுத்து உன் குடும்ப‌ம் இந்தூருல‌ வாழ‌ வ‌ழி ப‌ண்ணியிருக்காரு மாரிய‌ப்ப‌ருன்னு" செல்லா காசுபொறாததை நியாய‌முன்னு என் மாம‌னுக்கு விள‌க்குனாராம் வ‌ட‌க்கித்தெரு வாட்டாச்சியாரு..

எதுக்கும் ம‌சிய‌ல‌ என் மாமா.. "சின்ன வ‌ய‌சில‌ ஆசையை விதைக்கிற‌துக்கு முன்னாடியே இந்த‌ சாஸ்திர‌த்தையும், சாத‌க‌த்தையும் பார்க்க‌ வேண்டியதுதானே.?.. சொந்த‌ம் க‌ண்ட‌ வ‌ரையிலும் தெரியும் இந்த முருகேசுக்குத்தேன் அந்த‌ பொம்மின்னு.. அதுவுமில்லாம அவ‌ ம‌ன‌சில யாரு இருக்கான்னுத் தெரிஞ்சுக்காம, அவளுக்கு க‌ட்டாய‌க் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிவ‌ச்சு, அவ‌ வாழ்க்கையை சீர‌ழிக்க‌த்தேன் ஊருல‌ பெரிய‌ ம‌னுச‌னுங்க‌ன்னு ஆளாயி நிக்கிறீங்க‌ளா" ன்னு எல்லாம் வெக்கித் த‌லைகுனிய‌ கேட்டுச்சு..

"நாலு எழுத்து ப‌டிச்சிட்டோமுன்னு, வாயில வந்ததை பேசக்கூடாதுப்பா.. பெரிய‌வுக‌ எது செஞ்சாலும் உங்க‌ ந‌ல்ல‌துக்குத்தேன் செய்வோம்.."னு ஏதேதோ மாமாவுக்கு விள‌க்கினாங்க‌..

இர‌ண்டு நாளா ஊரே ம‌ணிய‌க்காரு வீட்டுல‌தேன் கூடியிருக்கு..

பாவ‌ம் ம‌ணிய‌க்காரு பொண்டாட்டியும், அவ‌ரு வீட்டு மாடும்.. காபி த‌ண்ணி போட்டுக்குடுத்தும், காபி ட‌ம்ள‌ருக‌ளை க‌ழுவியுமே அந்த‌ அம்மா இடுப்பு ஒடிஞ்சிருக்கும்..

என் பிடிவாத‌ப் புள்ளை கொஞ்ச‌மும் அச‌ர‌ல‌.. " ந‌ட‌ந்த‌து க‌ல்யாண‌மே இல்ல‌, அது செல்லுப‌டியாகாது"ன்னு முடிவா சொல்லிடுச்சு..

க‌டைசியில‌ என்னைக் கூட்டிவ‌ர‌ச்சொல்லி ஆளு வ‌ந்துருச்சு..வீட்டு வாச‌ப்ப‌டி இற‌ங்குறேன்.. வீதியில என்னைப் பெத்த தாயி, என் அத்தை, ட‌வுனு சின்ன‌ம்மா மூணுபேரும்..மூ.தே...முப்பெரும் தேவிக‌ளா வீதியில‌ நின்னுகிட்டு இருந்தாங்க‌.. "எந்த‌ சாதி ச‌ன‌த்துல‌யும் இல்லாத, அத்துகிட்டு வ‌ந்து வாழுற‌ வாழ்க்கைக்கு உன் மாம‌னோட சேர்ந்து நீயும் த‌லையாட்டிறாத‌.. ந‌ம்ப‌ குடும்ப‌ மான‌த்தையும், ந‌ம்ப‌ சாதியோட கௌவுருதையையும், ஊரோட‌ ப‌ம்பாட்டையும் (ப‌ண்பாட்டையும்) கெடுத்துறாத‌ன்னு" அர்த்த‌மில்லா அறிவுரை சொல்லி அனுப்பினாங்க‌..

என்னைய‌., நான் இருக்குற க‌திய‌ப் பாத்த‌வுட‌னே என் மாம‌ன் க‌ண்ணும், நெஞ்சும் துடிக்க‌ ஆர‌ம்பிச்சிருச்சு..

ஊருக்கார‌வுக‌, உற‌வுக்கார‌வுக‌ யாரும் இருக்காகன்னே நான் பார்க்க‌லை.. நேரா என் மாம‌னைப் பார்த்தேன், என‌க்கேத் தெரியாம உறைஞ்சுப்போன‌ என் க‌ண்ணீரு உருகி ஊத்த‌ ஆர‌ம்பிச்சிருச்சு.."எத்த‌னை ஜென்ம‌ம் எடுத்தாலும் என் நினைப்பில‌, ம‌ன‌சில‌, பிற‌ப்பில எல்லாத்துல‌யும் நீ ம‌ட்டுந்தேன் மாமா இருக்க‌ முடியும்.. ஆனா நான் இப்ப‌ அசிங்க‌மான‌வ., அந்த‌ நாதாரித் தீண்டின‌ எச்சி ப‌ண்ட‌ம் உன‌க்கு வேண்டாம்.."னு சொன்னேன்..

நம்ப ஜோடி இப்ப‌டி ந‌ம்ப‌ளை மாதிரி சுதாரிப்பு இல்லாம இருக்குதேன்னு என் மாமா வெறுத்துப்போக‌லை..

என் கைய‌ புடிச்சு உச‌த்தி எல்லாரு முன்னாடியும் சொன்னாக‌ "இப்பவாவ‌து புரிஞ்சுதா இவ‌ என் பொண்டாட்டி, எனக்குச் சேர வேண்டியவ"ன்னு.. அட‌ங்கேப்பா, எங்கேருந்துதேன் இந்த‌ ம‌னுச‌ப்ப‌ய‌னுக்கு என் மேல‌ இம்புட்டு அன்பும், அக்க‌றையும் வ‌ந்துச்சோ...இத‌விட‌வா எங்க‌ளுக்குள்ள‌ இருக்குற‌ ப‌ந்த‌ம் தெய்வ‌த்தோட க‌ருணையில‌ பிற‌ந்த‌துன்னு சொல்லி இந்த‌ பெரிய‌வ‌ங்க‌ளுக்கெல்லாம் புரிய‌ வைக்க‌னும்..

"நீ என் பொம்மிடி, நீ அசிங்க‌ம்னா, நானும் அசிங்க‌ந்தேன்.. அசிங்க‌த்துக்கு அசிங்க‌ம் ச‌ரியாப்போயிடும்னு" ப‌ச்ச‌ப்புள்ள‌க் க‌ண‌க்கா என்னைப் பார்த்து சொல்லிட்டு, " இது என் சொந்த‌ ஊரு, நீங்க‌ள்லாம் ஊரு பெரிய‌வுக‌ங்கிற‌துனால‌தேன் பொறுமையா பேசிறேன்.. உங்க‌ளோட‌ ந‌ல்ல‌ முடிவுக்காக‌ ஒரு நாளு காத்திருக்கேன்.. நீங்க‌ளே எங்க‌ளை சேர்த்து வைச்சா இந்த‌ ஊரில‌ வாழுறோம்.. இல்லைனா நாங்க‌ ட‌வுனுப‌க்க‌ம் போயிட‌றோம்.. ஊருஞ்ச‌ரி, உற‌வுஞ்ச‌ரி, குடும்ப‌முஞ்ச‌ரி முறைப்ப‌டி எப்ப‌டி முறைப்பாடு போட்டு எங்க‌ளை அத்து விட‌னுமோ அப்ப‌டி அத்துவிட்டுக்கோங்க"ன்னு அழ‌கா, ஆக்க‌மா சொன்னாக‌ என் ம‌துரைவீர‌ ம‌ரிக்கொழுந்து..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)
-----------***----------

வாசற்படி - 9

Saturday, November 10, 2007

வாசற்படி - 9

என் மாம‌னோட‌ பேச்சுக்கும், செய‌லுக்கும் வெறும் வார்த்தையால‌ அணை போடுற‌து சாத்திய‌மில்ல‌ன்னு, என‌க்குத் தாலிக‌ட்டிய‌ த‌க‌ர‌ட‌ப்பாவை கூட்டி வ‌ர‌ச்சொல்லி ராத்திரியே தூதுவிட்டாக, ஊரு பெரிய‌வுக‌..

இவ்வ‌ளவு நாளு விழுந்ததெல்லாம் இடியே இல்ல‌, இனிமே இருக்கு பாருங்க‌ இந்த‌ ஊருக்கும், உல‌க‌த்துக்கும் ஒரு மாபெரிய இடி.. ம‌ர‌ண‌ இடியா..

ராத்திரி போன ஆளு எப்படித்தேன் அந்த‌ இடிய‌த் தாங்கிக்கிட்டு ஊருக்குள்ள வந்து சேர்ந்தாரோ.!!. அவரு நாக்கு அந்த‌ சேதிய‌ சொல்லுற‌துக்கு கூச‌ம‌ட்டுமில்ல‌, ப‌ய‌ப்புட‌வும் செஞ்சுச்சு..

நீங்க‌ ஒன்னும் ப‌யப்புடாதீங்க‌.. உங்க‌ளை மாதிரி நாலையும் அல‌சிப்பார்த்து ஆராய்ஞ்சு முடுவு எடுக்குற‌வ‌ங்க எதுக்கும் கலங்கக் கூடாது..ஆண்ட‌வ‌ன் என்னைக்கும் ரொம்ப உங்களோட இருப்பான்..

இது சாமியையும், சாஸ்திர‌த்தையும் ச‌ரியா புரிஞ்சுக்காம, அர‌ண்ட‌வ‌ன் க‌ண்ணுக்கு இருண்ட‌தெல்லாம் பேயா தெரியிதுன்னு விள‌ங்கிக்காம‌, தாங்க‌ளெல்லாம் முக்காலும் உண‌ர்ந்த‌ ஞானிங்க‌ங்கிற ம‌த‌ப்புல த‌ப்பா சாமியையும், சாஸ்திர‌த்தையும் புரிஞ்சுகிட்டு மூட‌முட்டாள் த‌ன‌மா முடிவெடுக்குற‌வ‌ங்களுக்காக உண்மையை விள‌க்க‌ ஆண்ட‌வ‌ன் வ‌ச்ச‌ பெரிய‌ வெடிதேன், இந்த‌ இடி..

இடியும், வெடியும் இடிச்சு, வெடிச்சு எங்களை அதிர வச்சது.. உங்கள‌ அதிர வைக்கப் போறது வேட்டுச்ச‌த்த‌மா, இல்ல‌ இடிச்ச‌த்தமான்னு நீங்க‌ளே பாருங்க‌..

..ம் .. தூது போன‌ ஆளு கொண்டு வ‌ந்த‌ சேதி என்ன‌த் தெரியுமா??

என்னை அசிங்க‌ப்ப‌டுத்துன‌ அந்த‌ அவு..(ம‌ன்னிச்சிடுங்க‌.. இது என் ம‌ன‌க்குமுற‌ல் வார்த்தை.. உங்க‌ளுக்கு கேட்க‌ காது கூசுனுச்சுன்னா.. இந்த‌ வார்த்தைக்கு ம‌ட்டும் கொஞ்ச‌ம் காத‌ மூடிக்கோங்க‌..).. அந்த‌ அவுசாரிப்ப‌ய‌லுக்கு 'எய்ட்ஸ்'ஆம்..

வ‌‌ரைமுறையில்லாம ரோடு போன‌ இட‌த்திலெல்லாம் ப‌ல பொம்ப‌ளைக‌ளோட‌ ப‌டுத்த ஒரு ஈன‌ப்ப‌ய‌லுக்கு இந்த‌ வியாதிதானே வ‌ரும்...ஊருக்குள்ள‌ த‌லைகாட்ட‌ முடியாம ஓடிப்போயிடுச்சாம் அந்த‌ நாயி..

என்ன‌ அப்ப‌டியே நின்னுட்டீங்க‌.. இன்னும் மேல‌ இருக்கு .. ஆசுவாச‌ப்ப‌டாம கேளுங்க‌...

அவ‌னுக்கு வ‌ந்த‌து சரி, உன் வாழ்க்கையை ஏன்டி இப்ப‌டி ப‌ட்டுப்போக‌ணும்னு என‌க்காக‌ த‌ய‌வுசெஞ்சு விச‌ன‌ப்ப‌டாதீங்க‌..

எவ‌னோட‌யும் வாழ‌ முடியும்னு வாழ வ‌ழிவ‌கை செய்ய‌லாமா.??. வாழ்க்கையில‌ நிதானமா, பொறுத்து ஆராய்ஞ்சு பொருத்த‌மாதானே முடிவெடுக்கணும்.??. இந்த‌ கால‌த்து சின்ன‌ஞ்சிறுசுக ம‌ன‌சும், ம‌தியும் விசால‌மான‌து, ஆழ‌மான‌து.. அதை தான் தோன்றித்த‌ன‌மா எரிக்க‌ நினைக்க‌லாமா.?. இதெல்லாம் இந்த‌ வ‌ய‌சில‌ கூட‌ எங்க‌ ஊரு பெரிய‌வுக‌ புரிஞ்சுக்க‌லைனா வேற‌ எந்த‌ வ‌ய‌சில‌ புரிஞ்சுக்குவாக‌..

அதுச‌ரி அந்த‌ ம‌திம‌ங்கிப்போன ம‌னுச‌ங்க‌ளுக்காக நீ ஏன்டி ம‌க்கிப் போகணும்னு எனக்காக பதறுரீங்களா...

இந்த‌ ம‌க்கிப் போக‌ப் போற‌ ம‌ரிக்கொழுந்து ம‌ச‌க்கைக்காரி (ம்..அதுக்குத்தேன் எனக்கு கொடுப்பினை இல்லையே..), ம‌ச்ச‌க்காரிக்காக‌த்தானே விடிய‌ விடிய‌ வெறும் காப்பித்த‌ண்ணிய‌ குடிச்சுபுட்டு வெட்டி வியாக்யான‌மெல்லாம் பேசுனாங்க‌..

இன்னைக்கு இந்த ஊருல நானும்,எங்க‌ குடும்ப‌ங்க‌ளும், சொந்த‌ ப‌ந்த‌மும் இருக்குதுன்னா அது அவுக‌ ஆத‌ர‌வுல‌யும், அடிச்சிகிட்டு போனாலும் அக்க‌றையா வ‌ந்து சேருற‌ அன்பினால‌யும்தானே..

அடி பாத‌க‌ச்சி.., அப்ப‌ ம‌ரிக்கொழுந்து நிலைமை என்ன‌ன்னு கேக்க‌ வ‌ர்றீக‌ளா..

ம்.. நீங்க‌தேன் பாத்தீங்க‌ளே, என் மரிக்கொழுந்தைப்ப‌த்தி.. பாலப் போல மனசு, நல்ல தெளிஞ்ச‌ சிந்த‌னை, ப‌ல‌ சிக்க‌லையும் சிக்கில்லாம தீர்த்து முடிவெடுக்குற சிங்க‌ம்.. உறுதியான‌ அன்பு, உன்ன‌த‌மான நேச‌ம்.. இப்ப‌டிப்ப‌ட்ட என் மாம‌னுக்கு ஏத்த‌வ‌ளா நானு.?. கோழைச்சிறுக்கி.. என்னால‌ என் மாம‌னுக்கு என்ன‌த்த‌ கொடுக்க‌ முடியும்.. மாமா எனக்காக போராடின‌தில, க‌டுக‌ள‌வாவ‌து நான் போராடினேனா.?. என‌க்கு புருஷ‌ன் என் மாம‌ன்தான்னு தெரிஞ்சும் இன்னொருத்த‌வ‌னுக்கு க‌ழுத்த‌ நீட்டின‌து ம‌ன்னிக்குற‌ மாதிரியான‌ த‌ப்பா.?. ச‌ரி க‌ழுத்த‌தேன் நீட்டினேன்.. உரிய‌வ‌ன் தொட‌ வேண்டிய உட‌ம்புமேல அடுத்தவன் கைப‌ட்ட‌ப்ப‌வே அவ‌னை வெட்டி பொழி போடாமா, அந்த க‌ச‌டுகிட்ட போயி தோத்தேனே என‌க்கு எவ்வ‌ள‌வு பெரிய‌ த‌ண்ட‌னை கொடுக்கணும்..அதேன் ஆண்ட‌வ‌ன் கொடுத்திட்டான்.. எப்ப‌டியாவ‌து என் மாம‌னை ந‌ல்ல‌ப‌டியா நான் வாழ‌வைக்க‌னும் ..

ஆனா .. என‌க்கு என்னைத் தொட்டுபாக்க‌வே ப‌ய‌மாயிருந்துச்சு.. இனிமே என்னைப் பெத்த‌வ‌கூட‌ என்னைத் தொட‌ மாட்டாங்க‌ளோ.!!. செத்தா என்னை யாரு தூக்கிப்போடுவா.??. க‌ழுகாவ‌து என் உட‌ம்பைத் தீண்டித் தின்னுமா.??.

எச்சில் முழுங்க‌க்கூட‌ என‌க்குள்ள‌ திராணியில்ல‌மா பித்துக்குழியா இருந்தேன்.. சேதி தெரிஞ்ச‌வுட‌னே, மாமா ஓடி வ‌ந்திருச்சு.. உங்க‌கிட்ட‌ சொன்ன‌ எல்லாத்தையும் சொல்லி, என்னைத் தொடாத‌ மாமா போயிடுன்னு க‌தறுனேன்.. மாமாவோட பிடிவாதந்தேன் உங்க‌ளுக்கும் தெரியுமே.. "என் பொண்டாட்டி, என் பொம்மி வாழ்க்கை சீர‌ழியிற‌து கூட‌ தெரிஞ்சுக்காம இருந்த‌ என‌க்கு த‌ண்ட‌னைய‌க் குடுக்க‌த்தேன் ஆண்டவன் என் உசிரான‌ உன‌க்கு குடுத்து என்னை க‌ஷ்ட‌ப் ப‌டுத்தி பார்க்குறான்.. புருஷ‌ல‌ட்ச‌ண‌ம் இல்லாம இருந்த என்னை த‌ண்டிக்க உன்னைக் காய‌ப்ப‌டுத்திட்டான் ஆண்ட‌வ‌ன்.. இதுக்குமேல‌யும் நான் இப்ப‌டியே இருந்தா ந‌ம்ப‌ வாழ்க்கையே சீர‌ழிஞ்சிடும்.. கிள‌ம்பு ட‌வுனுக்கு போக‌லாம்.. கெட்டதுலயும் ஒரு நல்லது இனி எந்த பயலும் பண்பாடு, கிண்பாடுன்னு சொல்லி நம்பளை தடுக்க மாட்டானுக"ன்னு சொல்லி என்ன கிளம்பச்சொல்லி பாடாபடுத்திட்டாங்க..

..ட‌வுனுக்கு புற‌ப்ப‌ட்டோம்.. எங்க‌ளை யாரும் எதிர்க்க‌லை.. எந்த சோகமுனாலும் ஒப்பாரி வச்சு, மூக்கச் சிந்தி தீர்த்துக்குற ஊரு, ஊமையா கிடந்துச்சு.. எல்லாருக்கும் யாரை, என்ன குத்தம் சொல்லிக்கிறதுன்னே தெரியலை..

அத்தை வந்தாக‌.. "என்னை ம‌ன்னிச்சிடுடி என் ம‌ரும‌க‌ளே.. இந்த‌ க‌ரு நாக்குக்காரி உன்னை தூத்தின‌துதேன் உன்னை இப்ப‌டியாக்கிருச்சு போல"ன்னு என‌க்காக‌ க‌ண்ணீரு வ‌டிச்சாக‌.. அத்தையா இதுன்னு என‌க்கு ஆச்ச‌ர்ய‌மா இருந்த‌து.. "எல்லாம் மாமாவோட‌ பிடிவாத‌ பேச்சு செஞ்ச‌ வேலையோ என்ன‌வோ.!."

ட‌வுனுக்கு புறப்படுறதுக்கு முன்னாடி எல்லாம் ஒன்னா குடும்ப‌த்தோட‌ அத்தையோட‌ விருப்ப‌ப்ப‌டி வீர‌மாகாளி அம்ம‌ன் கோயிலுக்கு போயி எல்லாத்தையும் ந‌ல்ல‌ப‌டியா வாழ‌ வைக்கணும்னு எல்லாரும் வேண்டிக்கிட்டாக..

என் கழுத்தில இருந்த சுறுக்குகயிற கழட்டி கோயில் குளத்தில போட்டாச்சு.. அம்மன்கிட்ட வச்சு என் மாமன் வம்சா வழி சிவன் தாலிய என் கழுத்தில கட்டினுச்சு என் மரிகொழுந்து.. கங்கையில முக்கி எழுந்தா போகுமாமே.., அது மாதிரி என் தீட்டும் என்னை விட்டு போறமாதிரி எனக்குள்ள ஒரு உணர்வு... எல்லாத்துகிட்டயும் ஆசிர்வாதம் வாங்கியாச்சு..

ட‌வுனுக்கு போற‌ ப‌ஸ்ஸில வ‌ந்து உக்காந்தாச்சு நானும், என் மாம‌னும்.. விடிஞ்சா பஸ்ஸு டவுனுக்கு போயிடும்..

எப்ப‌டியாவ‌து மாமா தூங்கின‌துக்க‌ப்புற‌ம் ப‌ஸ்ஸை விட்டு இற‌ங்கி எங்கெயாவ‌து க‌ண்காணாத‌ இட‌த்துக்குப் போயிடணும்னு முடிவு ப‌ண்ணினேன்.. என‌க்கு ம‌னுசாலுங்க‌ முக‌த்தைப் பார்க்க‌வே பிடிக்க‌ல‌.. அதுவுமில்லாம‌ என் மரிக்கொழுந்து ந‌ல்ல‌ப‌டியா வாழனும்.. நான் மாமாவோட‌ இருந்தா ட‌வுனுக்கார‌வுக‌ எல்லாம் மாமாவ‌ ஒதுக்கி வ‌ச்சிடுவாங்க‌ளே.!!. ஆனா என் அக்கறையான அழகுராசா என்னைப் ப‌த்தி ச‌ரியா புரிஞ்சுவ‌ச்சிருக்கு.. விவ‌ர‌மா என்னை ச‌ன்ன‌லோர சீட்டில உக்கார‌வ‌ச்சிட்டு மாமாவை மீறி நான் போகாத‌ப‌டி என‌க்குப் ப‌க்க‌த்து சீட்டுல மாமா உக்காந்திட்டாக‌.. ந‌டுராத்திரியிருக்கும்.. ச‌த்த‌மில்லாம‌ அழுதுகிட்டிருந்தேன்.. பிள்ளை வாய்விட்டு அழுதாதேன் பெத்தவளுக்கே புரியும், ஆனா என் மரிக்கொழுந்துக்கு எப்படிதேன் தெரிஞ்சுதோ.. என்னை இழுத்து ம‌டியில‌ ப‌டுக்கவ‌ச்சு தூங்க‌வ‌ச்சிருச்சுட்டாக..

டவுனுக்கு வந்தாச்சு..மாமாவோட‌ பிர‌ண்டோட‌ மாடிவீட்டு ஒன்டிரூமுல‌ குடியேறிட்டோம்.. மாமா என்னைத் தொடும்போத‌ல்லாம்.. மாமாவுக்கும் எங்க என் நோயி ஒட்டிக்குமோன்னு நினைச்சு த‌விச்சேன்..

வேலைதேட‌ப் போற‌துக்கு முன்னாடி "த‌ய‌வுசெஞ்சு உன் கோக்குமாத்து கேன‌ப்புத்திய கைவிட்டுரு.. நீ இல்லாம‌ என்னால‌ வாழ‌ முடியாதுன்னு" என்னை எச்ச‌ரிக்கை ப‌ண்ணிட்டுத்தேன் போவாக‌.. அப்படியே செல்லமா பின்னாடி ஒரு அடியும் போட்டுட்டுத்தேன் போவாக.. (பின்னாடின்னா என்னான்னு நீங்களே புரிஞ்சுக்கனும் .. அதெல்லாம் விளக்கக்கிட்டு இருக்க முடியாது..) மாமாவுக்கு ஒரு ந‌ல்ல‌ க‌ம்பெனியில‌ வேலை கிடைச்சு, அப்ப‌ற‌ம் அங்கிட்டு ஒரு மூனு மாச‌த்திலே மாமாவோட வேலைய‌ப் பார்த்து ச‌ம்ப‌ள‌ம் உய‌ர்வெல்லாம் செஞ்சாங்க‌..

சில‌ ஞாயித்துக்கிழ‌மை என்னை விழிப்புண‌ர்வு ம‌ற்றும் ஆத‌ர‌வு முகாமுக்கெல்லாம் கூட்டிட்டு போயி என் ப‌ய‌த்தை போக்கி என்னை தெளிவுப‌டுத்தினாக, மாமா.. என்னால அதுக்கு (இல்ல இல்ல புருஷனைப் போயி அது, இதுன்னு சொல்லுறேனே, புத்திகெட்டவ..) அவுகளுக்கு எந்த அளவும் பாதிப்பில்ல.. நான் எப்படி எப்படிலாம் நட ந்துக்கனும்னு எல்லாம் விலாவாரியா பெரிய பெரிய டாக்டரம்மா மூலியமா விளக்க வச்சாக.. அதுக்கு கூட இங்கீலீசுல நல்ல பேராச்சே..ம்.. ஆ..ம்.. கவுன்சிலிங்கு...

ம்..ட‌வுனுக்கு வ‌ந்த‌ புதுசுல என் மாம‌ன் ம‌ன‌சை எப்ப‌டியாவ‌து மாத்தி அதுக்கு வேற‌ வாழ்க்கை அமைச்சிகுடுக்க‌ துடிச்சேன்.. அப்ப‌தேன் தெரிஞ்ச‌து என் மாம‌ன் சித்த‌மெல்லாம் நாந்தேன்.., அது சீவ‌ப்பிற‌ப்பே என‌க்குத்தேன்னு..

இதெல்லாம் உங்க‌ளுக்கு வார்த்தையில‌ சொன்னா புரியாது..ஏன்னா .. உங்க‌ளுக்கு எங்க‌ வாழ்க்கை விள‌க்க‌த்தை புரிஞ்சிக்கிற‌ அள‌வுக்கு ப‌க்குவ‌மிருக்கோ என்ன‌வோ.. அதேன் அப்ப‌டி சொன்னேன்..

ம்ம்..ச‌ரி நாங்க‌ முத, முத‌ த‌னியா இருந்த‌ அந்த‌ ராத்திரி என்ன‌ ந‌ட‌ந்துதுன்னு.. இந்த இத்துனியோண்டு, ந‌கக் க‌னுக்க‌ள‌வு சொல்லுறேன்.. கேளுங்க‌ளேன்..

மாம‌னை விட்டு நான் ரொம்ப‌ விலகி, ஒடிங்கி உக்காந்துருந்தேன்.. மாமாவும் ரொம்ப‌ நேர‌ம் பொறுத்து பாத்தாங்க‌, நான் அச‌ருர‌தா இல்ல‌.. என்னை வெடுக்குன்னு புடிச்சி இழுத்து, தன் ம‌டியில‌ சாச்சி,என் நெத்தியில‌ முட்டிச் சொன்னாக‌, "இங்க‌ பாருடி ரொம்ப ப‌ண்ணின, அப்ப‌ற‌ம் எது ந‌ட‌ந்தாலுஞ்ச‌ரின்னு எல்லைய‌ மீறிடுவேன், பாருடிச் செல்லம்.. நீ ஒன்ன‌ ம‌ட்டும் உருப்ப‌டியா புரிஞ்சுக்க‌ணும்னு என் க‌ன்ன‌த்துல‌ த‌ட்டி, த‌ட்டிச் சொன்னாக "உன‌க்கும் என‌க்கும் க‌ல்யாண‌மாயிடுச்சே த‌விர, ந‌ம்ப‌ ரெண்டு பேரும் க‌ண‌வ‌ன், ம‌னைவி இல்ல‌.." நான் விதுக்கு விதுக்குன்னு முழிச்சேன்.. " நீயும், நானும் காதல் ஜோடிங்க..", எப்ப‌டி ஒரு காத‌லி த‌ன் காத‌ல‌னை க‌ல்யாண‌த்துக்கு முன்னாடி எல்லைமீறாம பாத்துக்குறாளோ.. அது மாதிரி நீயும் என்னை பாத்துக்கோ.. அவ்வ‌ள‌வுதான் .. அவ‌ன‌வ‌ன் க‌ல்யாண‌த்துக்க‌ப்புற‌ம் காத‌லி கிடைக்க‌ மாட்டேங்கிறா, காதல் இருக்க‌ மாட்டேங்குதேன்னு புல‌ம்புறானுங்க‌.. நீ ஏன்டி இப்ப‌டி என்னை வ‌தைக்கிற‌"ன்னு என் க‌ன்ன‌த்த‌க் கிள்ளிச் சொன்னாக‌..

நீங்க‌ ப‌ய‌ப்புடுற‌ மாதிரியோ, ச‌ங்க‌ட‌ப்ப‌டுற‌ மாதிரியோ எல்லாம் என் வாழ்க்கையில்ல‌..

ரொம்ப‌வே ந‌ல்லாயிருக்கேன்.. உங்க‌ வாழ்க்கையில‌ இருக்குற‌ எல்லா சுவையும் என்.. இல்ல, இல்ல‌ எங்க‌ வாழ்க்கையில‌ இருக்கு. ஊட‌ல், கிண்ட‌ல், நையாண்டி, ச‌ண்டை, ச‌மாதான‌ம், ப‌ர‌ஸ்ப‌ர‌ம், கார‌சார‌ விவாத‌ம், ப‌ட‌ம், பாட்டு, கொண்டாட்ட‌ம், சில்மிஷம், விளையாட்டு, வேடிக்கையான‌ பேச்சு, காதல், பெத்த‌வ‌ங்க‌ ஆத‌ர‌வு, அன்பு எல்லாம் இருக்கு.. ஒன்ன‌த்த‌விர.. அது என்ன‌ன்னு உங்க‌ளுக்கேத் தெரியும்.. அதைப் ப‌த்தி ந‌ம்ப‌ ரொம்ப பேச‌ வேண்டாம்.. ஏன்னா நீங்க‌ள்லாம் ரொம்ப‌ ப‌டிச்ச‌வ‌ங்க‌.. ஒரு ஆணால‌யும், பொண்ணால‌யும் அது இல்லாம‌ இருக்க‌ முடியுமா!?.. அப்ப‌டி, இப்ப‌டின்னு க‌ண்ட‌ப‌டிக்கு யோசிப்பீங்க ..யோசிச்சு அதுல ந‌ல்ல‌தை ம‌ட்டும் க‌ண‌க்குல‌ எடுத்தீங்க‌ன்னா பரவாயில்லை.. நீங்க‌பாட்டுக்கு க‌ண்ட‌தையும் க‌ண‌க்குல‌ எடுத்துக்க‌க்கூடாது இல்லையா.. அதேன் நான் ரொம்ப‌ உங்க‌கிட்ட‌ அது ப‌த்தி பேச‌லை..

ம்..சொல்ல‌ ம‌ற‌ந்துட்டேனே.. நான் இப்ப‌ கொஞ்ச‌ம் இங்கிலீஸெல்லாம் பேசுவேன்.. பாட்டு கிளாஸுக்கு கூட‌ப் போறேன்.. "குறையொன்றுமில்லைக் க‌ண்ணா"..பாட்டும், "காண‌க் காண‌ காத‌ல் பெறுகுதடி"ங்கிற முருக‌ன் பாட்டும நான் பாடினா .. (கொஞ்ச‌ம் கிட்ட‌ வாங்க‌.. தூங்குற‌வ‌க முழிச்சிகிட்டாலும் முழிச்சிக்குவாக‌...) என் ம‌ரிக்கொழுந்து ம‌ச்சானுக்கு ரொம்ப‌ பிடிக்கும்..

ம‌ரிக்கொழுந்துன்னு இப்ப‌ல்லாம் அடிக்க‌டி கூப்பிடுற‌தில்ல.. குழ‌ந்தை வ‌ந்த‌துக்கு அப்ப‌ற‌மும் அப்ப‌டியே கூப்பிடமுடியுமா.?. அதும‌ட்டுமில்ல.. " நான் அவ‌ரை அப்ப‌டி செல்ல‌மா கூப்பிடுற‌தை பார‌தி (எங்க‌ குழ‌ந்தை பேரு) க‌ண்டுகிட்டு அவ‌ரு ப்ரெண்டுக‌ முன்னாடி அவ‌ரை "ம‌ரிக்கொழுந்து"ன்னு கூப்பிட்டுட்டா.. அதான் நான் கூப்பிடுற‌தை கொஞ்ச‌ம் குறைச்சிகிட்டேன்..

பார‌தி.., ஆத‌ர‌வு மைய‌த்திலேருந்து நாங்க த‌த்து எடுத்துகிட்ட‌ குழ‌ந்தை.. என்னை மாதிரியே அரியாம‌ பாதிக்க‌ப் ப‌ட்ட‌வ‌.. வ‌ர டிச‌ம்ப‌ர் 25 வ‌ந்துச்சுன்னா அவ‌ளுக்கு 5 வ‌ய‌சு ஆர‌ம்பிக்குது.. அவ‌ அப்பாருமேல என்ன‌ ஒய்யார‌மா கால‌ போட்டுகிட்டு தூங்குறா பாத்தீக‌ளா..

ஆழ் ம‌ன‌சில‌ என்ன‌ப்ப‌த்தி சின்னதா உங்க‌ளுக்கு வ‌ருத்த‌மிருந்தாலும், உங்களைச் சுத்தி வீசிகிட்டிருக்குற ம‌ரிக்கொழுந்து வாச‌ம் உங்க‌ளுக்கு பிடிச்சிருக்கும்னு நினைக்கிறேன்..

ஒரு சின்ன‌ வேண்டுகோள்.. எங்கெயாவ‌து ம‌ரிக்கொழுந்து பூவைப் பாத்தீங்க‌ன்னா, என் ம‌ச்சானைப் ப‌த்தி ம‌ட்டும் நினைக்காதீங்க, இந்த‌ பொம்மிய‌ப் ப‌த்தியும், எங்க‌ குடும்ப‌த்த‌ ப‌த்தியும் சேர்த்து நினைச்சுக்கோங்க‌..

எப்ப‌வும் சிரிச்சுகிட்டே, ஆன‌ந்த‌மா இருங்க‌..

என்ன அப்ப‌டி பார்க்குறீங்க‌.. நீங்க எப்ப‌வோ எங்க‌ வீட்டுக்குள்ள வ‌ந்தாச்சு.. இன்னும் வாச‌ப்ப‌டி கேட்டா.., நான் எங்க‌ப் போக‌..?.. இனி வீட்டை இடிச்சு க‌ட்டினாதேன் உண்டு...

:)

ந‌ல்ல‌து, ச‌ந்தோஷ‌மா போயிட்டு வாங்க…

************************************

ஆசிரிய‌ர் குறிப்பு:

Wednesday, November 7, 2007

ஆசிரிய‌ர் குறிப்பு:

தோராயமாக ஒரு ஒன்ற‌ரை வருட‌த்திற்கு முன், எங்க‌ ஊரு ப‌க்க‌ம் ஒரு குடும்ப‌ம் எய்ட்ஸ் வந்ததால தற்கொலை பண்ணிகிட்டதா கேள்விப‌ட்டேன்.. அதன்பிறகு பெங்களுரில் உள்ள Freedom Foundation என்ற‌ எய்ட்ஸ் மையத்துக்கு நண்பர்களுடன் போயிருந்தேன்..
அங்கே இருந்த‌வர்களில் பெரும்பாலானோர் கிராம‌த்துக்காரர்கள்‌.. அதில் நிறைய‌ பேரு த‌மிழ்நாடைச் சேர்ந்த‌வர்கள்.. கிட்டத்தட்ட 20 குழ‌ந்தைகள்‌ இருந்தார்கள்‌.. ஒவ்வொரு குழந்தையும் அவ்வ‌ள‌வு அழ‌கா இருந்தார்கள்.. ரொம்ப‌ புத்திசாலியாகவும், சுறுசுறுப்பாகவும், க‌டவுள் ப‌க்தி மிக்கவர்களாகவும், மிகுந்த பாசமுடனும் இருந்தார்கள்.. அன்றைய‌ தின‌ம் இன்னும் என் கண்களை விட்டு ம‌றையவில்லை..
ப‌ல‌ ச‌ம‌யங்களில் என்னை உறைய‌ வைப்ப‌து அந்த‌க் குழ‌ந்தைகளின் முகங்களே..

அதில் ஜான்சி, ச‌ர‌ஸ்வ‌தின்னு இர‌ண்டு குழ‌ந்தைங்க என் கைய‌ பிடிச்சிகிட்டு விட‌வே இல்லை.. ம‌ற‌க்காம கிறிஸ்ம‌ஸ்க்கு வ‌ந்துருங்க‌ அக்கான்னு எதிர்பார்ப்போட‌ சொன்னாங்க‌‌.. என்னால போக‌முடியாமல் ஆகிவிட்டது..மனதில் குடிகொண்ட‌ பாரத்தை யாருடனாவது பகிர்ந்து கொள்ளவேண்டும் என்றும், என்னால் முடிந்த வரை உதவ வேண்டும் என்றும் நினைத்தேன்..

சிறியதா, குட்டியா எய்ட்ஸ் விழிப்புண‌ர்வை உண‌ர்ர்த்துற மாதிரி ஒரு சிறுகதை எழுத‌ணும்னு நினைத்தேன்.. அதன்பொருட்டே என்னால் முடிந்தவரை சின்ன‌தா ரொம்ப, ரொம்ப குட்டிக் க‌தையாக‌ க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வழ, வழ என்றெல்லாம் இழுக்காமல் எழுதியுள்ளேன்..

முதல் அத்தியாயம் எழுதியவுடன், இந்தக் கதையை விழிப்புணர்வுக் கதையாகக் கொடுக்க எனக்கு மனசில்லை..
கிட்டத்தட்ட ஒரு ஒன்றரை மாதமாக‌ கதையைத் தொடரவிடாமல் எனக்குள் பல கேள்விகள்.. அனைத்தையும் மீறிக் கதையை தொடங்கிய எண்ணத்தோடு ஒத்துப்போகும் அளவிற்கு எழுதி முடித்துவிட்டேன்..

கதை தங்களுக்கு பிடித்திருந்தாலும் பரவாயில்லை, பிடிக்காவிட்டாலும் பரவாயில்லை.. கஷ்டப்பட்டு எழுதிய என் பொறுப்புணர்ச்சிக்கு மதிப்பு கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.. தயைக் கூர்ந்து அந்த ஆள்க்கொல்லியின் அராஜகத்திற்கு முடிவுகட்டும் வகையில் ஆவண செய்ய தங்களால் முடியும் என்றவரை முயலுங்கள்..

இதுவே நான் எழுதிய முதல் கதை.. ஆதலால் எழுத்துப்பிழை, பொருட்ப்பிழை, நடைப்பிழை, சந்தப்பிழைகள் என்று தங்கள் கண்டுகொள்ளும் எந்தப் பிழையாயினும் மன்னிக்காமல், அலட்சியப்படுத்தாமல் எனக்குச் சுட்டிக்காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்..

க‌டைசி வ‌ரை ப‌டித்த‌த‌ற்கும், த‌ங்க‌ளின் ஆத‌ர‌விற்கும் ந‌ன்றி..

அன்புட‌ன்,
சோ.ம‌ஹாலெட்சுமி

Tuesday, September 18, 2007

என் மூளைக்குள்ளும் சில ப‌ட்டாம்பூச்சிக‌ள்..

1. வானத்து நட்சத்திரங்களின் மொத்த எண்ணிக்கையை கண்டுபிடிக்க ஒரு மிக எளிதான வழி:

எங்க கிராமத்து பாட்டிங்க, அப்பறம் நிறைய பேரு சொல்லி இருக்காங்க இறந்த மனுஷங்க தான் வானத்துல நட்சத்திரமா ஆயிடறாங்கன்னு..
அப்படி இருக்க ..
ஒவ்வொரு நாட்டிலும் ஆதாம் பிறந்த நாளிலிருந்து இன்றைய நாள் வரை இறந்தவர்களின் எண்ணிக்கையை வாங்கி, உலகில் உள்ள அனைத்து நாடுகளின் இறந்தவர்களின் எண்ணிக்கையை கூட்டினால் மொத்த நட்சத்திரங்களின் எண்ணிக்கை தெரிந்துவிடுமல்லவா...

ஆனால் இந்த கணக்கில் சூரியனை ஒரு நட்சத்திரமாக நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள முடியாது.
அதில் பல சிக்கல்கள் உள்ளது...

இதில் Exact-a சொல்ற க‌ண‌க்கில் சூரிய‌ன் சிக்க‌ல் செஞ்சாலும் ஒரு குத்து ம‌திப்பா அதாவ‌து தோராய‌மா க‌ண‌க்க சொல்லிட‌லாம் பாருங்க‌..

.... Any blood from eyes or ears...
:) hee hee summa ..
ஏன்னே தெரியலை இப்ப எல்லாம் என் மூளை இப்படிதான் ரொம்ப புத்திசாலியா இருக்கு...

குறிப்பு:இந்த புத்திசாலித்தன யுத்தி உதித்தது, நிலாரசிகனின் " நட்சத்திர தேடல்"ங்கிற கதையை படித்துக்கொண்டிருந்தபோது.

Friday, September 7, 2007

ஆசையாக சில ஓசைகளும், பாஷைகளும்..

வான‌ம்
---------

இப்பூ உலகத்தின் தொப்பி - அவள்
என் கனவுலோகத்தின் படப்பிடிப்பு மைதானம் - அவள்

எனை விட்டு விலகியே இருக்கும்
திமிர் பிடித்த பேரழகி - அவள்

காகிதத்தில் நீல நிறம் கொண்டு
அவளை தீட்டும் ஒவ்வொரு நிமிடமும்
துடிக்கிறது என் மனம்…
ஏங்குகின்றன என் கண்கள்…
வாடுகிறது என் உதடுகள்…

வாழ் நாளில் ஒரு முறையாவது
விமான‌த்தில் ப‌ற‌ந்து
அவளுக்கு
பறக்கும் முத்தத்தை பரிசாக அளித்து
ரகசியமாய் சொல்லிவிட வேண்டும்
அவள் மேல் நான் கொண்டுள்ள
எல்லையற்ற காதலை..
I Love U my dear SKY!!!!!!


குறிப்பு:
சின்ன வயசில அம்மா அழகா வாசலில் கோலம் போடும்போது எனக்கும் கோலம் போடணும்னு ஆசை வந்ததுண்டு.. ஆயினும் போடத் தெரியாது, அப்படியே போட்டாலும் அது அழகா இருக்காது, எல்லாரும் என்னைப் பார்த்து கேலி பண்ணுவாங்களேன்னு தயங்கி, மனசில ஆசையை சுமந்துகிட்டு அம்மா போடுற கோலத்தை ஏக்கத்தோடு பார்த்து ரசித்து கொண்டிருந்த நேரத்தில், என் ஆசையை புரிந்துகொண்டு, "வாடா..வந்து கோலம் போடுடா பாப்பா.. நீ போடுற கோலத்தை அம்மா பார்த்து ரசிக்கிறேன்னு" என் உயிர், என் அம்மா அன்று சொன்ன மாதிரி இன்று என் தோழன் "ரசிக்க நானிருக்கிறேன், எழுது" என்று என்னை உந்துவித்ததால் வரைந்த கோலமே இந்த வானமெனும் கவிதை.
இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன்னு தானே கேட்கவர்றீங்க..

புரியுது..
இப்படி ஒரு நல்ல தோழனை இந்த கடவுள் எனக்கு கொடுத்திருக்கிறாரேன்னு எனக்குள்ள ஒரு பெருமிதம்..
அதான் உங்ககிட்ட எல்லாம் சொல்லி கொஞ்ச‌ம் பெருமை அடித்துக்கொள்ள‌லாமே என்று தான் இந்த குறிப்பு. :)
என்னுடைய‌ இந்த‌ க‌ட‌வுளின் ப‌ரிசை நினைத்து பொறாமைப்ப‌டுவோர் பொறாமைப்ப‌ட‌லாம், ஏக்க‌ப்ப‌டுவோர் ஏக்க‌ப்ப‌ட‌லாம்... ஆனால் த‌ய‌வு செய்து யாரும் கண்ணுவ‌ச்சுடாதீங்க‌..

ஏன்னா..க‌ல்ல‌டி ப‌ட்டாலும் க‌ண்ண‌டி ப‌ட‌க்கூடாதுன்னு பெரிய‌வ‌ங்க‌ சொல்லிருக்காங்க‌.. அதான்...

உயிரும் உணர்வும் ஒன்றென கலந்த அமர கீதங்கள்

பாடல் – 1
படம்: அவள் அப்படித்தான்
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்:

உறவுகள் தொடர்கதை, உணர்வுகள் சிறுகதை
ஒரு கதை என்றும் முடியலாம், முடிவிலும் ஒன்று தொடங்கலாம்..
இனியெல்லாம் சுகமே..

உன் நெஞ்சிலே பாரம்..
உனக்காகவே நானும் சுமைதாங்கியாய் தாங்குவேன்..

உன் கண்களின் ஓரம் எதற்காகவோ ஈரம்
கண்ணீரை நான் மாற்றுவேன்..

வேதனை தீரலாம், வெறும்பனி விலகலாம்
வெண்மேகமே .. புது அழகிலே நாமும் இணையலாம்..

வாழ்வென்ப‌தோ கீத‌ம் வ‌ள‌ர்கின்ற‌தோ நாத‌ம்

நாளொன்றிலும் ஆனந்தம்..
நீ கண்டதோ துன்பம், இனி வாழ்வெல்லாம் இன்பம்
சுகராகமே ஆரம்பம்
நதியிலே புது புனல் கடலிலே கலந்தது

நம் சொந்தமோ இன்று இணைந்தது இன்பம் பிறந்தது..

--------------------------------------------------------------------
பாடல் – 2
படம்:
இசை:
பாடலாசிரியர்:
பாடகர்கள்: SPB

ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..

தேசிய‌ விருதுகள் வாங்கலாம், உன் தேக‌த்தை க‌ட்டிவை..
ஆசிய‌ விருதுக‌ள் வாங்க‌லாம், சில ஆணைக‌ள் இட்டுவை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..


மூச்சு நின்றாலும் முய‌ற்சி நில்லாது..
காற்று ஓய்ந்தாலும் கால்க‌ள் ஓயாது..
ஓடிப்பாராம‌ல் தூர‌ம் க‌ழியாது..
வேர்வை இல்லாம‌ல் வெற்றி கிடையாது..
தேக‌ம் வ‌ளையாம‌ல் யாக‌ம் முடியாது..
காணும் ஒவ்வொரு விதையிலும் ஓர் ம‌ர‌ம் உள்ளே உறங்குது இல்லையா..
மூடிய‌ பூமியை முட்டியே புல்க‌ளும் முளைக்குது இல்லையா..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..


க‌ட்டி வைத்தாலும் க‌ங்கை நில்லாது..
வெட்டி வைத்தாலும் வாழை சாகாது..
தோல்வி இல்லாம‌ல் வெற்றி விள‌ங்காது..
தொட‌ர்ந்து முன்னேறு தோல்வி கிடையாது..
பாதை தீர்ந்தாலும் ப‌ய‌ண‌ம் தீராது..
அன்று போருக்குள் புதைந்திட்ட‌ ஜ‌ப்பானில் பூக்க‌ள் பூத்த‌து எப்ப‌டி?
கால்க‌ளில் ர‌ண‌ம் கொண்ட பெண்மானே உலகை தாண்ட‌னும் அப்ப‌டி..

ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
ஹே! உன்னை வெற்றிக் கொள்வது தான் சாதனை..
நீ உயர்வு கொள்ள வருவதுதான் சோதனை..
தேசிய‌ விருதுகள் வாங்கலாம், உன் தேக‌த்தை க‌ட்டிவை..
ஆசிய‌ விருதுக‌ள் வாங்க‌லாம், சில ஆணைக‌ள் இட்டுவை..

-------------------------------------------------------------------------------------

பாடல் - 3

படம்:
இசை:
பாடலாசிரியர்: கண்ணதாசன்
பாடகர்கள்:

உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி(உள்ளம் என்பது)

தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
தெய்வம் என்றால் அது தெய்வம் - வெறும்
சிலையென்றால் அது சிலைதான்
உண்டென்றால் அது உண்டு
உண்டென்றால் அது உண்டு
இல்லையென்றால் அது இல்லை
இல்லையென்றால் அது இல்லை(உள்ளம் என்பது)

தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
தண்ணீ தணல் போல் எரியும் - சென்
தணலும் நீராய்க் குளிரும்
நண்பரும் பகை போல் தெரியும்
நண்பரும் பகை போல் தெரியும் - அது
நாட்பட நாட்படப் புரியும்
நாட்பட நாட்படப் புரியும்

-------------------------------------------------------------------
பாடல் - 4

படம்:
இசை:
பாடலாசிரியர்:
கண்ணதாசன் பாடகர்கள்:

ஆசையே அலைபோலே
நாமெலாம் அதன்மேலே
ஓடம்போலே ஆடிடுவோமே
வாழ்நாளிலே! (ஆசை)

பருவம் என்னும் காற்றிலே
பறக்கும் காதல் தேரிலே
ஆணும் பெண்ணும் மகிழ்வார்
சுகம் பெறுவார் அதிசயம் காண்பார்!
நாளை உலகின் பாதையை இன்றே யார் காணுவார்? (ஆசை)

வாழ்க்கை எல்லாம் தீர்ந்ததே
வடிவம் மட்டும் வாழ்வதேன்
இளமை மீண்டும் வருமா
மணம் பெறுமா முதுமையே சுகமா!
காலம் போகும் பாதையை இங்கே யார் காணுவார்? (ஆசை)

சூறைக்காற்று மோதினால்
தோணி ஓட்டம் மேவுமோ
வாழ்வில் துன்பம் வரவு
சுகம் செலவு இருப்பது கனவு!
காலம் வகுத்த கணக்கை இங்கே யார் காணுவார்? (ஆசை)