வாசற்படி-5
மாமா நிதானமா, நெத்தியடியா பேசினதுல அம்மாவுக்கு வலியிருந்தாலும், மாமாவோட பக்குவமான பேச்சு அம்மாவுக்குள்ள கொஞ்சம் பூரிப்பையும் உண்டாக்கினுச்சுன்னுதேன் சொல்லனும்.. இல்லைனா "என்னடி மலைச்சு நிக்குற.?.போடி, போயி வேலையப்பாருடி பொழப்பத்தவளே"ன்னு என்னை சொல்லுறமாதிரி அவுகளுக்கே சொல்லியிருப்பாங்களா..
.ம்..இப்ப சொல்லுங்க என் மாமனுக்கு நான் மரிக்கொழுந்துன்னு பேரு வச்சது சரிதானே..
வீட்டுப் பெரிய ஆம்பளைகளும், வேடிக்கைப் பார்த்த அனுபவமுள்ள ஊரு பெரிய ஆளுகளும் கேட்காத கேள்வியையும், பேசாத பேச்சையும் உளிக்கு உறைக்குற மாதிரி அடிச்சுப் பேசினது என் மரிக்கொழுந்து தானே..
என்ன.., மரிக்கொழுந்து வாசம் உங்க வரைக்கும் வீசுதுதானே..
ம்..சரி விஷயத்துக்கு வாரேன்..
மாமா வந்திருந்த ரெண்டு நாளு எப்படி போச்சுன்னே தெரியலை..
மாமாவைப் பார்க்க அந்த டவுனு சின்னம்மா தன் பொண்ணைக் கூட்டிகிட்டு வந்திருந்தாங்க.. ஆனா மாமா அதை கொஞ்சம் கூட கண்டுக்காம என் பிரண்டுங்கள பார்க்கனும் நான் வர்றேனுங்கன்னு நாசுக்கா வெளியில கிளம்பிடுச்சாம்..
"ரொம்ப மரியாதையான புள்ள, என்கிட்ட போயி எதுக்கு இம்புட்டு மரியாதை, நானும் அத்தை தானே"ன்னு வேறு விதமா பெருமையடிச்சுகிட்டாகலாம் அந்த சின்னம்மா..
எனக்கா.. 'அட, அய்யனாரே..'ன்னு இருந்தது.. என்ன கலகம் மூட்டி விடப்போறாங்களோ,என்னவெல்லாம் சொல்லி எங்க அத்தைய குழப்ப போறாங்களோன்னு ஒரே கவலைதேன் எனக்குள்ள..
"இன்னும் ஒரு ஒன்றை மாசத்துல பரிட்சை முடிஞ்சிரும், அப்பறம் அங்கிட்டு எப்படியும் ஒரு மாசத்துல டவுனுல எதாவது ஒரு கம்பேனியில வேலையை வாங்கிட்டு, இங்க வந்து இந்த ஊருக்கே சாப்பாடு போட்டு தூங்கவச்சிட்டு உன்னை டவுனுக்கு கடத்திட்டு போயர்றேன்.. அப்பறம் அதுக்கும்அங்கிட்டு ஒரு வருஷத்துல உன் தொட்டாச்சினுங்கி அழுகைக்குத் துணையா பிள்ளைய ஒன்ன பெத்து எடுத்துகிட்டு நேரா இங்க வந்து கொஞ்ச நாளு நம்ப பிள்ளைய நமக்கு ஆதரவா கத்தவோ, கறையவோ சொன்னா.. கண்டிப்பா எங்க அம்மாச் சத்தம் அமைதியாயிடும்.. பிறகென்ன இந்த பொம்மி கற்பகத்துக்கு (என் அத்தை பேரு கற்பகம்) பொக்கிஷமாயிடுவா.. என் பாடுதான் கொஞ்சம் திண்டாட்டம்.."னு என் காது டோலாக்க தன்விரலால தட்டிவிட்டு நக்கலும், சிக்கலுமா சொன்னாங்க என் மாமா..
"ஏன் மாமா அப்படி சொல்லுற, நான் இருக்க உன் பாடு ஏன் திண்டாட்டம்"னு கேட்டேன்..
"கற்பகம் உன்னைக் கொஞ்சும்போதெல்லாம் என்னை ஓரக்கண்ணால சைட்டுதானே அடிச்ச, இப்ப கற்பகத்து ஆதரவு இல்லங்கவும்தானே உன் மரிக்கொழுந்தை நினைச்சு ஏங்குற? மறுபடியும் கற்பகம் ஆதரவுன்னா என் பாடு பாவம் தானே"ன்னு என்னமா என்ன நையாண்டிப் பண்ணுனாகத் தெரியமா..
ம்..இதெல்லாம் மாமா ஊருக்கு போறதுக்கு முன்னாடி அம்மன் கோயில் படித்துறையில உக்காந்து என் கூட பேசிகிட்டிருந்தது.. மாமா ஊருக்குப் போயி பத்து நாளாகுது.. அத்தையும், அம்மாவும் நேருக்கு நேரா எதுவும் பேசிக்கிறது கிடையாது.. மத்தபடி நான் பயந்த மாதிரி ரொம்ப பெரிய சண்டை எதுவும் நடக்கல..இந்தவாட்டி டவுனு சின்னம்மாவோட மந்திரி வேலை எதுவும் சரியா மாஞ்சாப்போடலை..
டவுனு சின்னம்மாவோட பொண்ணப்பத்தி நான் உங்ககிட்ட சொல்லலையே..அழகுலயும், குணத்துலயும் என் மாமனுக்கு பொருத்தமானவளான்னு என்கிட்ட கேட்டுறாதீங்க.. ஏன்னா இந்நேரம் உங்களுக்கே என்னப்பத்தியும், என் மாமனைப் பத்தியும் தெரிஞ்சுருக்கனும் .. இப்படிப்பட்ட கேள்வி கேள்வியா ஆகுறதுக்கு முன்னாடியே அது 'தீயில போட்ட பஞ்சா ஆயிரும்'னு... சரி, அந்த பொண்ணைப் பத்தி சொல்லுறேனே.. அவ பேரு மேனகா.. நல்ல உசரமா, அழகான பொண்ணுதேன்.. ஆனா எனக்குத்தேன் அவள பாக்கும்போதெல்லாம் அவுக அம்மா முகமும், பேச்சும் நினைவுக்கு வர்றதால உள்ளூர எனக்கு கொஞ்சம் பயம்..கொஞ்சம் புடிக்காது.. சில சமயம் தேவையேயில்லாம குளத்தாங்கரையிலயும், அடிபம்பு குழாயில தண்ணி பிடிக்கும்போதும் என்னோட வம்பு பிடிப்பா, என்னை ராசியில்லாதவன்னு கிண்டல் பண்ணுவா.. சில சமயம் எனக்காக விட்டு கொடுப்பா.. எங்க அம்மா அப்படி பேசினதெல்லாம் மனசில வச்சுக்காதப்பான்னு சொல்லுவா.. நல்லவதேன்னு வச்சுக்கோங்களேன்.. நம்ப ஏன் அநியாயமா ஒரு பொண்ணைப் பத்தி பேசி பாவத்தைச் சம்பாதிக்கனும்...
சரி இப்ப என் கதைக்கு வருவோமே... அந்தப் பத்து, பன்னெண்டு நாளு, உண்மையிலே நான் எல்லா பயத்தையும் மறந்து பழைய படி ரொம்ப நம்பிக்கையோட என் மாமனுக்காக காத்துகிட்டுருந்தேன்.. அந்த வெள்ளிக்கிழமை மாமா பரிட்சையில பாசாகணும், சீக்கிரமா வேலை கிடைக்கணும்னு எங்க ஊரு அம்மனுக்கும், அய்யனாருக்கும் மாவிளக்கு போட்டேன்.
ஆனா அம்மன் கோயில்ல உடைச்ச தேங்காதேன் சரியில்லாம போயிடுச்சு.. சாமிக்கு உடைக்குற தேங்காய் சரியில்லன்னா ஏதோ தகாதது நடக்கப்போகுதுன்னு பூசாரி அய்யா சொன்னாரு. இத்தனைக்கும் அது எங்க வயக்காட்டு தென்னை மரத்து தேங்காய்தேன்..அவரு அந்த வார்த்தையை சொன்னவுடனே ஊருக்குள்ள இருக்குற கடையிலேருந்து ஒரு தேங்காய வாங்கி வந்து சாமிக்கு உடைச்சிட்டேன்..
"அம்மா, என்ன தப்பு நடந்துருந்தாலும் தண்டனையை எனக்குக் கொடு, என் மாமனை நீதேன் பத்திரமா பாத்து காத்து நிக்கணும், தயவுசெஞ்சு அருள் புரிம்மா"ன்னு பய, பத்திரமா மனமுறுகி வேண்டிக்கிட்டேன்..ஆத்தா புண்ணியத்துல அந்த காயி நல்ல காயா இருந்தது, நல்லபடியா உடைஞ்சது..
இருந்தும் என்னவோ தெரியலை உடைஞ்ச அந்த அழுகுன தேங்காயும், பூசாரி அய்யா சொன்ன வார்த்தையும் அடிக்கடி எனக்குள்ள வந்து வயித்துல புளியக்கரைச்சுதுங்க...
விடிஞ்சதும் இறங்கப்போகுது ஒரு பெரிய அடிங்கிறதுக்கு அறிகுறியா, இல்ல வேற எதுவுமான்னு எனக்கு சரியா விளங்கலை..
காலையில ஒரு பத்துமணியிருக்கும் டவுனுலேருந்து மணியக்காரு வீட்டுக்கு போனு.. அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல சொல்லி.. டவுனுலேருந்து அத்தை வீட்டுக்கு சேதி சொல்ல சொல்லி போனுனவுடனே நான் மட்டுமல்ல ஊரே அல்லோல பட்டுருச்சு..
ஏற்கனவே என் மனசுல குடி கொண்டுருந்த பயத்துல இந்த சேதிங்கிற வார்த்தையே என்னை அரை நினைவுக்கு கொண்டுபோயிடுச்சு.. இதுல பாப்பாத்தி உன் மாமா, உன் மாமான்னு திக்கி இழுத்ததுல ரொம்ப பயந்து முழு நினைவும் போயி மயங்கிட்டேன்..
(படிகள் இருக்கு உள்வாசல் நுழைய..)
---------******--------------
வாசற்படி - 6
Sunday, November 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment