வாசற்படி-4
"என்ன ஆச்சுந்த., ஏன் இங்க வந்து உக்காந்து அழுதுகிட்டிருக்க"ன்னு கைமேல சாய்ஞ்சவள தன் தோளுல சாச்சு, என் தலையை வருடிக்கொடுத்துகிட்டே கேட்டுச்சு என் மாமா.. இந்த ஆதரவு இல்லாமத்தானே எல்லாம் இருந்தும், நாதியத்தவளா கிடந்தேன் இம்புட்டு நாளும்...
என் தேம்பலையும், ஆசுவாசத்தையும் அடக்கி நிமிர்ந்து என் மாமனைப் பார்த்தேன்.. நான் கேட்க நினைத்ததை என் வாயும், கண்ணும் சொல்லத் தடுமாறினாலும், அர்த்தம் புரிஞ்சுகிட்ட என் மாமா, "உன் நினைப்பு ரொம்ப அதிகமாயிடுச்சு, என்னால எந்த வேலையும் சரியா செய்ய முடியலை.. அதேன் காலேஜிக்கு லீவு போட்டுட்டு, உன்னை பாத்து, இன்னும் கொஞ்ச நாளைக்கு என்னை எனக்குத் திருப்பிக்கொடுன்னு கேட்டு வாங்கிகிட்டு, அப்படியே நம்ப குடும்பத்துலயும் என்னதான் நடக்குதுன்னு பாத்துட்டுபோலாமுன்னு வந்தேன்"னு என் நெத்தியில முட்டிச் சொன்னாக..
பஸ்ஸுல வரும்போது நம்ப பாக்கியம் பயலைப் பார்த்தேன், அவன்தேன் நம்ப குடும்பத்துல நடக்குற கூத்தையும், உன் பாட்டையும் முழுக்க விவரமா சொன்னான்.. "உன்னால பொம்மிய பார்க்க கூட முடியுமா என்னன்னு தெரியலடா"ன்னும் சொன்னான்.. என் பொம்மிய பார்க்க யாருகிட்ட உத்தரவு வாங்கணும்னு எனக்குள்ள ஆத்திரம் பொங்கினாலும், ஏன்னே தெரியல இந்த அய்யனாரப் பார்த்து ஒரு ஆதரவு ஓட்டு வாங்கிகிட்டு, எதாவது பிரச்சனையினா உன் குதிரையை குடுத்து உதவு, நாங்க தூரதேசம் போயி வாழன்னு சொல்லலாமுன்னு வந்தா.. அவரு என் பொம்மியவே என் கிட்ட குடுத்துட்டாரு"ன்னு நக்கலா என் கண்ணத் தொடச்சிவிட்டுகிட்டே சொன்னாங்க என் மரிக்கொழுந்து.
"ரொம்ப பயந்துட்டியா.., 'நீதேன் எனக்கு நாந்தேன் உனக்கு' இதை யாராலயும் மாத்தி எழுத முடியாது.. நீ என்னைக்கோ உன் மரிகொழுந்தோட பொண்டாட்டியாயிட்ட, இப்படி தொட்டாச்சினுங்கி பொண்டாட்டியா யாரோ ஏதோ சொன்னதுக்கெல்லாம் அழலாமா"ன்னு கேட்டுச்சே.!.என் மச்சான்.!., எனக்கு இந்த உலகமே மறந்து போச்சு..
"என்ன அப்படி பார்க்குற, இப்ப சொல்லு.. நீ யாரு பொண்டாட்டி?"ன்னு என்னை என் மாமா உலுக்க, நான் என் மாமன் கண்ணுலேருந்து எனக்காக வடிஞ்சிருந்த அந்த உசிருத்தண்ணிய தொடச்சிவிட்டேன்..
ஏதோ ஆடு, மாடுக சத்தம் கேட்டு குளத்துப்பக்கம் திரும்பி பார்த்தா, கொல்லைக்காட்டுலேருந்து ஆடு,மாடுகளை ஓட்டிகிட்டு அத்தை வந்துகிட்டு இருந்தாங்க.. அதுக்காங்குள்ளியும் என் அத்தானை நான் பிரியப்போறேனான்னு, ஒன்னும் விளங்காம திரு, திருன்னு முழிச்சிகிட்டுருந்தேன்.. ஏதோ சுதாரிச்சதில மாமனோட கைப்பிடிய மட்டும் விலக்க முடிஞ்சுது.. அத்தை எங்களை பார்த்துட்டாங்க..
யாரதுன்னு உத்து பார்த்த அத்தை, அய்யனாரு மேட்டுல நிக்குறது நானும் மாமாவுங்கிறதை கண்டுபிடிச்சிட்டாங்க. "முருகேசு..!.. எப்படா வந்த.. ஏன் இங்க நிக்குற? "ன்னு ஆச்சர்யபட்டு கேட்க, "இப்பதாம்மா வந்தே..ன்.. பொம்..மி...ன்னு" மாமா திக்கித் திணர, அத்தை என்னை கோபமா பாத்துட்டு "வா வீட்டுக்கு"ன்னு மாமாவை கைய புடிச்சு இழுத்துட்டு போயிட்டாங்க.. என்னால பின்னாடியே ஓடவும் முடியாம, மாமாவும் என்ன திரும்பி திரும்பி பார்க்க, நான் முழிச்சிகிட்டே தயங்கி தயங்கிப் பின்னாடியே வந்தவ எப்படியோ வீடு போயி சேர்ந்தேன்..
என்ன நடக்கபோகுதோ, எதெல்லாம் வெடிக்கப்போகுதோன்னு பட படத்து வீட்டுத் தாழ்வார சன்னலு வழியா வாரியையும், எங்க மாமா வீடு இருக்கும் கோடியையும் பாத்துகிட்டு உக்காந்துருந்தேன்..
"என்னை படுக்கவச்சது பத்தாதுன்னு இப்ப என் பிள்ளையையும் பறிக்க கடந்து அலையுது கொள்ளிவாயி பிசாசு"ன்னு சகட்டமேனிக்கு கத்திகிட்டேதேன் (இல்ல என்னை திட்டிக்கிட்டேதேன்) வீட்டுக்குள்ள நுழைஞ்சிருக்காக எங்க அத்தை.
"முறைப்பாடு போட்டு வெட்டி விட்டாச்சு, இனி சொந்தமுமில்ல பந்தமுமில்ல, கடந்து துடிக்காம போயி படிக்கிற வேலையை பாரு"ன்னு இழுத்துட்டு போன பிள்ளைக்கு காபி தண்ணிகூட குடுக்காம கராரா பேசியிருக்காக அத்தை..
நல்லவேளை, பதிலுக்கு மாமா எதுவும் எதிர்த்து பேசாம "பசிக்குது, சோத்த போடும்மா"ன்னு கால கழுவிகிட்டே சொல்லிருக்கு.. இருந்த ஆத்திரத்தையெல்லாம் சாப்பிடுறதுல தீர்த்துக்கிட்டு கொஞ்சம் பொறுமையா இருந்துருக்காங்க மாமா..
அத்தை கோபம் தனுஞ்சி மெதுவா "இங்க பாருடா, உன் படிப்புக்கெல்லாம் டவுனுலேருந்து பொண்ணெடுத்தாதேன் கௌரவமா இருக்கும், அந்த தர்த்திரியம் நமக்கு வேணாமுன்னு" சொல்லியிருக்காக..
"யாரம்மா தர்த்திரியம்னு சொல்ற, அவ கையாலதானே விதைநெல்ல சாமிக்கு படைப்ப.., இவ்வளவு நாளு மகராசியா, இந்த வீட்டுக் கன்னி தெய்வமா தெரிஞ்சவ இப்ப மட்டும் உனக்கு எப்படி தர்த்திரியமா தெரியுறா.."ன்னு மாமா கேட்க, "தாய் மாமன் வீட்டு பசு மாட, அதுவும் நிறமாச பசுமாட உல வச்சு கொன்ன கொலகாரிடா அவ.., உனக்கு என்ன தெரியும் சாஸ்திரத்த பத்தி.. சில சிறுக்கிங்க சமையிற நேரம், முறைமாமன் வீட மூலையிலயும் உக்காரவைக்கும், மிஞ்சி, மீறிப்போனா முழுசாவும் அழுச்சிடும்.. எந்த நேரத்தில சமைஞ்சாலோ, என் குடும்பத்தை உலுக்கி எடுத்துட்டா மூலச்சிறுக்கி.. இப்பதேன் அந்த உறவ வெட்டிவிட்டு நிம்மதியா இருக்கோம், நீ எதையும் கிளறாத"ன்னு அத்தை பதில் கொடுக்க, "நான் பொறந்தநேரம் உனக்கோ, அப்பாவுக்கோ ஆகாதுன்னு சொல்லியிருந்தா என்னை அப்பவே கொன்னுருப்பியாம்மா"ன்னு மாமா கேட்க, அத்தை விக்கிச்சு பதில் சொல்ல முடியாம நின்னுருக்காக..
"மண்ணச்சநல்லூருலேருந்து இருந்த நிலத்தையெல்லாம் வித்துட்டு ஒட்டி ஒட்டாம இருந்த உறவோட ஒத்து வாழ இந்த சொந்த ஊருக்கு வந்தோமே.. அப்பகூட அந்த மண்ணச்சநல்லூர் கிளி ஜோசியக்காரனும், ஆவூரு உடுக்கை சாமியாரும் சொன்னாகளேம்மா 'எனக்கு சனிதிசை நடக்குது அதேன் இப்படி குடும்பத்தை ஆட்டிப் படைக்குதுன்னு, அப்ப ஏம்மா என்னை முறைப்பாடு போட்டு வெட்டி விடலை? அன்னைக்கே வெட்டிவிட்டுருந்தீன்னா இன்னைக்கு இந்த உறவுமில்லாம, நானுமில்லாம நீ நிம்மதியா வாழ்ந்திருக்கலாமேம்மா..?.."ன்னு மாமா அணுஆதாரமா கேட்க, அத்தையால எந்த பதிலும் சொல்ல முடியலை..
"அவ அப்பன் ஆத்தாளுகிட்ட சொல்லி ஏதோ மந்திரம் பண்ணி அந்தச் சிறுக்கி உன்னை மந்திருச்சி விட்டுட்டா"ன்னு அத்தை கண்ணை கொஞ்ச நேரத்தில கசக்கிருக்காக..
அத்தை அப்படி சொல்லிருந்தாலும், மாமா கேட்ட கேள்வில பொதஞ்சிருந்த உண்மையும், அதோட தெளிவும் கொஞ்சமாவது அத்தைக்கு விளங்கிருக்கும்ங்கிறது என்னோட நம்பிக்கையாயிருந்துச்சு.. அதே சமயத்தில எனக்குள்ள ஒரு பயமும் வேண்டுதலுமிருந்துச்சு "எங்க அந்த டவுனு சின்னம்மா எதையாவது சொல்லி அத்தை புத்திய திசை திருப்பிடுமோ"ன்னு..
அடுத்த நாளு காலையில மாமா எங்க வீட்டுக்கு வந்திருந்தாங்க.. நாந்தேன் முதல்ல பார்த்துட்டு பாயெடுத்து போட்டுட்டு அம்மாவ கூப்பிட்டேன்..
அம்மாவுக்கு தான் தம்பி புள்ள வந்து நிக்குதேங்கிற பாசமிருந்தாலும் "தான் தம்பியே இல்லன்னு ஆயிடுச்சு.. தவிர இதனால இன்னும் பல பிரச்சனைகள் வருமோ"ன்னு பயம்.. "தப்பா எடுத்துக்காத முருகேசு, ஏற்கனவே இங்க பல பிரச்சனைகள், இன்னும் இவளுக்கு ஊரறிய ராசியில்லாதவன்னு பொட்டுகட்டாததுதேன் பாக்கி.. படிச்ச புள்ள, தயவுசெஞ்சு நீயே புரிஞ்சுகிட்டு போயிடு.. உங்க அம்மா வந்து எதாவது ரகளை செஞ்சா, உன்னை வச்சுகிட்டு எதிர்த்து நின்னு பேசுறதுக்கு எனக்குத் தெம்புமில்ல, மாமாவுக்கு தெரிஞ்சா பெரியா வம்பாவும் போயிடும்"னு புறடியில அடிக்கிற மாதிரி படார்னு பேசிட்டாங்க..
எங்க அம்மா இப்படி பேசும்னு சத்தியமா நான் நினைக்கவே இல்ல... சின்ன வயசிலேருந்தே மாமாமேல பெரிய மனுசாலுகளுக்கெல்லாம் நிறைய பாசமும் உண்டு, நல்ல மதிப்பும் உண்டு. என்னாலதானே மாமாவுக்கு என் அம்மா வாயிலேருந்து இப்படி ஒரு அவமானப் பேச்சுன்னு எனக்கு ஆத்திரமா வந்துது.
ஆனா மாமா அதையும் பொருத்துகிட்டு," அத்தை, எத்தனை கோயிலுக்கு போனாலுஞ்சரி, நீங்க என் அத்தைங்கிறதையும், நான் உங்க தம்பி புள்ளங்கிறதையும் மாத்தமுடியாது, அதே மாதிரி பொம்மி எனக்குத்தேன், இந்த விதையை விதச்சது நீங்கல்லாம்தேன்.. உங்க எல்லாத்தையும் விட எனக்காக வேண்டிக்கிறதும் அவதேன், எனக்காகன்னு இருக்குறவளும் அவதேன்.. நீங்க பெரியவங்க எவ்வளவு வேணும்னாலும் கௌரவம் பாத்துக்கோங்க, எவ்வளவு வேணும்னாலும் சண்ட போட்டுக்கோங்க அதுல நாங்க தலையிடல, அதே மாதிரி நீங்களும், உங்க சண்டை எங்க வாழ்க்கையில மூக்க நுழைக்காம பாத்துக்கோங்க.. உங்க விளையாட்டுல எங்க வாழ்க்கையை பழிகெடாவா ஆக்கிடாதீங்க.. இதைத்தேன் எங்க அம்மாகிட்ட சொல்லிருக்கேன்.. அதையேதேன் உங்ககிட்டயும் சொல்லிக்கிறேன், நான் வர்றேனுங்க அத்தை"ன்னு சொல்லிட்டு விருட்டுன்னு கிளம்பிட்டாங்க..
(படிகள் இருக்கு உள்வாசல் நுழைய..)
--------------------****------------------
வாசற்படி-5
Tuesday, November 20, 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment