Wednesday, November 14, 2007

வாசற்படி - 7

ம‌ணிய‌க்காரு வீட்டு முத்தத்திண்ணையிலதேன் (அது கொஞ்சம் பெரியத் திண்ணை) பேச்சு வார்த்தை.. ரெண்டு குடும்ப‌த்து பெரிய‌ ஆளுங்க, அப்ப‌ற‌ம் ஊரு பெரிய‌ ஆளுங்க எல்லாம் கூடியாச்சு, அத்தையோட முறையீட‌ கேட்க‌..

"ஏதோ சொந்த‌ ஊருல‌ வ‌ந்து வாழ‌ வ‌ந்தோம், நல்லா வாழ்ந்தோம், ஆனா இன்னைக்கு அந்த‌ சொந்த‌மே எங்க‌ள குட‌ல‌றுக்குது.. புடிக்கலைன்னுதேனே முறைப்பாடு போட்டுகிட்டோம், அப்ப‌ற‌முமேன் எங்களோட‌ வ‌ந்து ஒட்டுறாங்க‌.. எங்க‌ளுக்கு அந்த வீட்டு உறவும் வேணாம், பொண்ணும் வேணாம்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு ந‌ல்ல‌ப‌டியா பேசி, பின்னாடி பிர‌ச்ச‌னையெதுவும் வாராம உறுதி வார்த்தை கொடுத்து முடிச்சு விட்டீங்க‌ன்னா இந்த‌ ஊருல‌ இருக்கோம், இல்ல‌ன்னா நாங்க‌ இந்த‌ ஊரை விட்டேப் போறோம்"னு க‌ட்ட‌ன்ரைட்டா பேசிட்டாங்க‌ எங்க‌ அத்தை..

'எல்லாம் கேப்பாரு பேச்சு கேட்டு வ‌ந்த‌ புத்தி'ன்னு என் சினேகிதிக‌ளும் தெரிஞ்ச‌வ‌க‌ளும் சொன்னாக‌..

"என்ன‌தேன் கேப்பாரு பேச்சுன்னாலும், கேட்ட‌ என் அத்தைக்கு எங்க‌ போச்சு புத்தி.. என்னால‌ எப்ப‌டி என் மாம‌னை பிரிஞ்சு இருக்க‌ முடியும்?, இல்ல‌ மாமாவால‌தேன் என்னை பிரிஞ்சு எப்ப‌டி இருக்க‌ முடியும்.?. அதுக்கு எல்லாத்துக்கும் கார‌ணமா இருக்குற என் ராசியை, என்னையை விஷ‌ம் வ‌ச்சு கொன்னு போட்டுருங்க‌ன்னு சொல்லியிரு ந்தாலும்" நான் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டுருப்பேன்.. அத்தைக்கு ஏன் எங்க ம‌ன‌சு புரிய‌லை... அத்தைக்குப் புரிய‌லையா?, இல்லை எங்க‌ள‌ ப‌டைச்ச‌ அந்த ஆண்ட‌வ‌னுக்குப் புரிய‌லையா.?..

"க‌ற்ப‌க‌ம் சொல்லுற‌துலையும் நியாய‌மிருக்குதுல்ல‌ப்பா.. சாஸ்திர‌ம், ச‌ட‌ங்கு, சாமிச்ச‌ட்ட‌ம் எல்லாம் உண்மைதானேப்பா.. அது சொல்லுறாப்புல, அது குடும்ப‌த்துக்கும் தொட‌ர்ந்து அடி மேல‌ அடி விழுந்துகிட்டுதானே இருக்கு.. அதுவுமில்லாம‌ சுத்துப்ப‌ட்டியில‌ இருக்குற.. கிராம‌ம் க‌ண்ட‌ வ‌ரையிலும் தெரியும், வீர‌மாகாளிய‌ம்ம‌ன் சாமி அருளும், அது முறைப்பாடுச் ச‌ட்ட‌மும்..இது எல்லாம் தெரிஞ்சும் உற‌வு கொண்டாடிகிட்ட‌து நியாய‌மில்ல‌.. ந‌ம்ப‌ளால ந‌ம்ப‌ சுத்தியிருக்குற‌வ‌ங்க‌ளுக்கு ந‌ல்ல‌து நட‌க்காட்டியும் கெடுத‌ல் ந‌ட‌க்காம‌னாவ‌து பாத்துக்க‌னும்.. அத‌னால க‌ற்ப‌க‌த்தோட‌ முறையீட‌ ந‌ம்ப‌தேன் ஏத்துகிட்டு எல்லாத்துக்கும் ஏத்த‌மாதிரி ந‌ல்ல‌து ப‌ண்ண‌னும்..அதே ச‌ம‌ய‌த்தில‌ கூட‌ப்பிற‌ந்த‌ உட‌ன் பிற‌ப்புக‌ வாயிலேருந்து வார்த்தை எதுவும் வாராம, ந‌ம்ப‌ எந்த‌ முடிவும் எடுக்க‌ முடியாது.. நீ என்ன‌ சொல்லுற த‌ங்க‌வேலு"ன்னு (என் பெரிய‌ மாமா)ம‌ணிய‌க்கார‌ரு என் பெரிய‌ மாமாவ‌ப் பாத்து கேட்க..

"நாங்க‌ளும் சில சாமி ஆடுற‌வ‌க‌கிட்ட‌ சாமி கேட்டுட்டோம் 'பொண்ணு எடுக்க வேணா'முன்னுதேன் சாமி குறி சொல்லிருக்கு.. அதேமாதிரி வீர‌மாகாளி கோயில்ல‌யும் முறைப்பாடு போடுற‌துக்கு முன்னாடி சாமிகிட்ட‌ உத்த‌ர‌வு வாங்கினோம்.. ஆனா அதை மீறி நடந்தது சாமிக் குத்தமா ஆயிருந்தாலும், மத்த குறியெல்லாம் வச்சு பார்க்கும்போது , பொண்ணு வேணாமுன்னுதேன் தோணுது.. அதுதேன் ரெண்டு குடும்ப‌த்துக்கும் ந‌ல்ல‌துன்னு தோணுது.. என்னால உறவைப் ப‌த்தி எதுவும் இப்ப சொல்லுற‌துக்கில்ல'ன்னு சொல்லி பெரிய‌ மாமா, என் த‌லையில ம‌ண்ணை வாரி போடுவாருன்னு நான் எதிர்பார்க்க‌லை..

என‌க்கு, பெரிய மாமா சொன்ன‌தை குத்த‌ம் சொல்லுற‌தா இல்ல என்ன‌ இப்ப‌டி அணு அணுவா, அங்க‌ அங்க‌மா நோக‌டிக்கிற‌ ஆண்ட‌வ‌னை குத்த‌ம் சொல்லுறதான்னே தெரிய‌லை..

அம்மாவால‌யும், அப்பாவாலயும் அவ‌மான‌த்துல எதுவும் பேச‌ முடிய‌லையாம்.. தான் நிலைமை ஒரு தீண்ட‌த்த‌காத‌ நிலைமையா ஆயிடுச்சே.. ப‌ண‌ங்காசு நிறைய‌ இல்லாட்டியும்.., ம‌திப்பும், ம‌ரியாதையாயுமா வாழ்ந்த‌ ஊருல‌ பிராது வாங்கி த‌லைகுனிஞ்சு நிக்க வேண்டிய‌தா இருக்குதேன்னு அப்பாக்குள்ள‌ ஆத‌ங்க‌ம் வெடிக்க‌ ஆர‌ம்பிச்சிருச்சு..

"க‌ற்ப‌க‌ம் த‌ங்க‌ச்சி சொன்ன‌ பிராதை நான் ஏத்துக்குறேன், ஊரு பெரிய‌வ‌க‌ பாத்து என்ன‌ முடிவெடுக்குறீங்க‌ளோ அதுக்கு எங்க‌ குடும்ப‌ம் க‌ட்டுப்ப‌டும்"னு எங்க அப்பாரும் கோனாங்கித் தனமா வார்த்தை கொடுத்துட்டாரு..

"மாரியப்பன் பிராதை ஏத்துகிட்டதாலயும், மதிக்கிறதாலயும், பிரச்சனையை சுமூகமா தீர்க்கலாமுன்னு நினைக்கிறோம்..இப்போதைக்கு இந்த‌ ரெண்டு குடும்ப‌த்துக்கும் இடையில எந்த ஒரு உற‌வும் வ‌ச்சுக்க‌ வேணாம், அதே மாதிரி பொம்மிய‌ தாய் மாம‌ன் வீடு இல்லாம‌ வேற‌ இட‌த்தில க‌ட்டிகொடுக்க‌ணும்னு சொல்லிக்கிறோம்னு" பேச்சு வார்த்தைய 'விளங்காத பய ஊருல வெளக்கெண்ணெய் பேச்சா'பெரிய ம‌னுச‌னுங்க‌ பேசி முடிச்சிட்டாங்க..

'கிட்ட‌த்த‌ட்ட‌ ப‌தினாலு வ‌ருஷ‌மா "புருஷ‌ன், பொண்டாட்டி"ங்கிற ஒரே புத்தியில சுத்தி வந்த உற‌வுதானே என‌க்கும் என் மாம‌னுக்கும் உள்ள‌ உற‌வு.. வ‌ன‌வாச‌மாம் எங்க‌ள் காத‌ல் வாழ்க்கையை முடிச்சு, க‌ல்யாண‌ங்கிற ப‌ட்டாபிஷேக‌த்தை ந‌ட‌த்தி வைப்பாங்க‌ன்னு பார்த்தா, எங்க‌ளை பாடையில ஏத்த‌யில்ல' பாக்கு வெத்த‌ல‌ போட்டு பேசியிருக்காக‌..

வ‌ய‌சாக‌ ஆக‌ பார்வைதானே ம‌ங்கிப்போகும், ம‌தியுமா ம‌ங்கிப்போகும்.!.

தான் பெத்த‌ புள்ளைக்கு உசிரோட‌ கொள்ளி வ‌ச்சிட்டு ஆத‌ங்கமா ந‌ட‌ந்துவாராறு என் அப்பா.. க‌ட்டின‌வ‌ன் வார்த்தைக்கு ம‌டியில‌ சும‌ந்த‌தை க‌ட்டையில ஏத்தி விட்ட என் க‌ட்டுக‌ழுத்தி (சும‌ங்க‌லி) காமாட்சி (என் அம்மா) க‌ண்ண‌ க‌ச‌க்கிகிட்டே வாராக பின்னால‌..

வ‌ந்த‌ அப்பா என் முக‌த்தை ஏறெடுத்தும் பார்க்க‌லை.. 'காமாட்சி, சாமிகிட்ட இருக்க‌ அந்த‌ ம‌ஞ்ச‌ப்ப‌ய எடு'ன்னாரு.. எடுத்துக்குடுத்தாக‌ என் அம்மா.. 'வ‌ர‌ப் பொழுதானாலும் ஆகும்'னு சொல்லிட்டு போயிட்டாரு.. 'எல்லாம் முடிஞ்சிருச்சு, க‌ண்ட‌தையும் ம‌ன‌சில‌ போட்டு உலட்டிக்காம சொன்னப் பேச்சை கேட்டு, செய்ய‌ச் சொல்ற‌தை செய்யி'ன்னு எதோ வீட்டு வேலைக்காரிகிட்ட‌ சொல்லுற‌ மாதிரி சொல்லிட்டு போயாச்சு என் அம்மா..

ந‌ட‌ந்த‌ விவ‌ர‌த்தையெல்லாம் ஒப்பிச்சுட்டு என் அம்மாவும், அப்பாரும் க‌ட்டுன‌க் கூத்தையும் பாத்துட்டு ந‌டைய‌க் க‌ட்டியாச்சு பாப்பாத்தி..

அடுத்த‌ நாளு காலையில‌தேன் ம‌ஞ்ச‌ப்பையி விவ‌ர‌ம் முழுசா தெரிய‌ வ‌ஞ்சுது.. பையில‌ இருந்த‌து என் ஜாத‌கமாம்.. உள்ளூருல இருக்குற‌வ‌க‌கிட்டயும், சுத்துபட்டு சொந்தங்ககிட்டயும் ஆளுவிட்டு விசாரிச்சாச்சாம்.. ஒருத்த‌னும் என்ன‌ க‌ட்டிக்க‌ச் ச‌ம்ம‌திக்க‌லையாம்.. சில‌ பேத்துக்கு என் ராசிமேல‌ ப‌ய‌ம், சில பேத்துக்கு நான் என் மாமாமேல வ‌ச்சிருக்கும் நேச‌த்தில‌ ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு அதுல ச‌ந்தேக‌ம், சில பேத்துக்கு என் மாமா மேல ப‌ய‌ம், சில‌ பேத்துக்கு ஜோடிக‌ளை பிரிப்பதுல‌ ந‌ம்ப‌ க‌த்தியா இருக்க‌வேணாமுங்கிற‌ ந‌ல்ல‌ அக்க‌றை..சொந்த‌க்கார‌வுக, தெரிஞ்ச‌வுக, தெரியாதவக‌கிட்ட எல்லாம் சொல்லி வெளியூருல‌ கிழ‌க்கு இல்ல‌னா தெக்குப் ப‌க்க‌ம் மாப்பிள்ளைப் பாக்க‌ச் சொல்லி சொல்லியாச்சாம்..

'கையிலயே ஊத்துக்குழி வெண்ணெய‌ வ‌ச்சுகிட்டு இப்ப‌டி கிறுக்குத்த‌ன‌மா ஊரு ஊரா தேடுற' என் அப்பாரை என்ன‌ன்னு நான் சொல்லுற‌து..

இன்னும் மாமா ப‌ரிட்சை முடிஞ்சு வ‌ர‌ ப‌தினேழு நாளிருக்கு..எப்ப‌டியாவ‌து நான் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு க‌ட‌த்திட்டேன்னா, அப்ப‌ற‌ம் எப்ப‌டியும் என் மாமா இந்த‌ சிக்க‌லிலேருந்து என்னை மீட்டுரும்.. மாட்டிக்க‌மாட்டேன்னு என‌க்குள்ள‌ எதோ ஒரு தைரிய‌ம் இருந்துச்சு..

பாக்கிய‌ம் ப‌ய அப்ப‌யும் சொன்னான்.. நாந்தேன் "வேண்டாம்பா.. மாமா பாவ‌ம், ஏற்க‌ன‌வே அதுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல.. நீ வேற‌ போயி அதுகிட்ட‌ இதெ‌ல்லாம் சொன்னீன்னா, அப்ப‌ற‌ம் ஒன்னு அதால‌ ச‌ரியா ப‌ரிட்சை எழுத‌ முடியாது இல்ல‌ அது ப‌ரிட்சையே எழுதாமா ஊருக்கு வ‌ந்துரும்.. அதோட‌ மூனு வ‌ருஷ‌ம் ப‌டிச்ச‌தெல்லாம் வீணாப் போயிடும்"னு சொன்னேன்..

ராசிங்கிற‌ பேருல ஊசிப்போன‌ இந்த‌ உளுந்த‌ வ‌டை உள்ளூரிலே விலை போகாத‌ போது, வெளியூரிலையா விலை போகப்போகுதுன்னு ஒரு மத மதப்புல இருந்துட்டேன்..

ஆனா என் கிர‌கம்.., அற‌ந்தாங்கிக்கு அங்கிட்டு இருக்கும் காதேரிப்ப‌ட்டியிலேருந்து ஒரு சனியன புடிச்சாந்துட்டாரு என்னை பெத்த‌ ம‌க‌ராச‌ன்.. எவ‌னோ சொன்னானாம், எவ‌னையோ போயி பாத்தாராம், இந்த‌ மாப்பிள்ளையை புடிச்சாராம்.. மாப்பிள்ளை லாரி டிரைவ‌ரா வேலை பாக்குறாராம், எப்ப‌டியும் ஒரு லோடுக்கு 50 - 100ரூபாய் சம்பாதிப்பாராம்.. கூட‌ப்பிற‌ந்த‌து ஒரு அக்காவும் ஒரு த‌ம்பியுமாம்.. எல்லாத்துக்குமே அங்க‌னைக்குள்ள்வே க‌ல்யாண‌மாயிடுச்சாம் .. இவ‌ருக்கும் என்னைப் போல‌வே ராசி ச‌ரியில்லாம போயிடுச்சாம்.. அதுதேன் எங்க‌ அப்பாவுக்கு ரொம்ப‌ புடிச்சுருந்துதாம்.. மாப்பிள்ளை வீடு பெண் பார்க்க‌ வ‌ந்தாச்சு.. அருவ‌ருப்பா போயி நின்னேன்... டீ, காபி எதுவும் நான் குடுக்க‌லை.. டிரைவ‌ர் மாப்பிள்ளைகிட்ட என்னைப் ப‌த்தி எல்லாமும் சொல்லிட்டாராம் என் அப்பாரு.. இப்ப‌டிப் ப‌ட்ட‌ பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்குற‌துல, அவ‌ருக்குத்தேன் ஏக‌ப்ப‌ட்ட சந்தோஷ‌மும், புண்ணிய‌மும்னு சொன்னுச்சாம் அந்த காக்கா..

"என‌க்கு ஒரு கெட்ட‌து ந‌ட‌க்கனும்னா ம‌ட்டும் க‌ண்ண‌மூடி க‌ண்ணத் திற‌க்குற‌துக்குள்ள ந‌ட‌க்குது.. ஒரு ந‌ல்லது ந‌ட‌க்க‌ எம்புட்டு நாளு, எம்புட்டு வ‌ருஷ‌ம், எம்புட்டு யோச‌னை யோசிக்குது என் வாழ்க்கை".. என்ன‌டா இது விந்தைனு, எல்லாம் என‌க்கு ஏதோ சித்து விளையாட்டுமாதிரியே தெரிஞ்சுது.

'என் மாமாவோட‌ க‌டைசி ப‌ரிட்சைக்கும் முத ப‌ரிட்சை அன்னைக்குத்தேன் என் க‌ல்யாணத் தேதி'...

மாமாவுக்குத் தெரியாம விஷ‌ய‌த்தை ம‌றைச்சு மாமாவ‌ ஒழுங்கா பரிட்சை எழுத‌ வைக்க‌ அத்தை ட‌வுனுக்கு புற‌ப்ப‌ட்டுகிட்டு இருந்தாக‌..

ஊருக்குள்ள‌ உள்ள‌ எல்லா சின்ன‌துக்கும் விவ‌ர‌முள்ள, அனுப‌வ‌முள்ள‌ பெரிய‌வ‌ங்க‌கிட்டேருந்து அறிவுரை.. "யாரும் பொம்மி க‌ல்யாண‌த்துல‌ எந்த‌ வித‌ குழ‌ப்ப‌த்தையும் உண்டு ப‌ண்ணாதீங்க‌.. அவ அப்ப‌ன் மான‌ஸ்த‌ன்.. ரோச‌த்தோட‌ கொடுத்த‌ வாக்கை காப்பாத்த‌ ந‌டையா ந‌ட‌ந்து மாப்பிள்ளைய புடிச்சாந்துருக்கான்.. க‌ல்யாண‌ம் நின்னுச்சுன்னா அவ‌ன்பாவ‌ம் உங்களை சும்மாவிடாது.. அந்த‌ புள்ளைக்கு அங்க‌தேன் வாழ‌ணும்னு ஆண்ட‌வ‌ன் அது த‌லையில‌ எழுதி வ‌ச்சிருக்கான்.. அதனால‌தேன் ஜாத‌க‌மெல்லாம் ஒத்துபோயிருக்கு.. மூக்க‌ நுழைச்சு மூச்சுத் திணற வச்சுராதீங்க ஒரு குடும்ப‌த்தை, ப‌ய‌ புள்ளைகளா.."ன்னு..

நான் நேரா அய்ய‌னாரு கோயிலில‌ போயி கையில‌ சூட‌மேத்தி என் க‌ட‌மையை அவ‌னுக்கு செஞ்சு முடிச்சேன்..

செம்மிய‌ நிமிர்ந்து பார்க்க‌வும் என் ம‌ன‌சில‌ தெம்புஇல்ல‌..

அய்ய‌னாருகிட்டேருந்து க‌ரிச்சாந்தையும், ரோசு க‌ல‌ர் குங்கும‌த்தையும் எடுத்துகிட்டு நேரா மாமா வீட்டுக்குப் போனேன்..என்னை அத்தை விச‌ன‌மா பாத்தாக‌லா இல்ல‌ வித‌ண்ட‌வாத‌ம் வ‌ந்துருக்கேன்னு பாத்தாக‌லான்னு தெரிய‌ல‌..

'ப‌ய‌ப்ப‌டாதீங்க‌ அத்தை, இனிமே நானும் என் ராசியும் முழுங்குற‌துக்கு எதுவுமில்ல..என்னால உங்களுக்கு எந்த பிரச்சனையும் வாராது.. எல்லாந்தேன் முடியப்போகுதே..மாமா ந‌ல்லாயிருக்கனும் அதுதேன் என‌க்கு வேணும், இது அய்ய‌னாரு கோயிலில மாமாவுக்காக‌ நான் செஞ்ச வேண்டுத‌ல் சாந்தும், குங்கும‌மும்.. இது சாமியிதுதேன், மாம‌னுக்கு பூசி விட‌ப்போற‌து நீங்க‌தேன்.. அத‌னால எந்த‌ சாமிக்குத்த‌மும் ந‌ட‌க்காது.. அப்ப‌டி எதாவ‌து ந‌ட‌க்கனும்னா அது இந்த‌ வாட்டியாவது என‌க்கே நடந்து தொலைக்க‌ட்டும்.. மாமாவ ந‌ல்ல‌ ப‌டியா பரிட்சை எழுத‌ சொல்லுங்க'ன்னு சொல்லி அத்தை கையில கொடுத்துட்டு, கிள‌ம்பி வீட்டுக்கு வ‌ந்தேன்.. வாசலில அம்மா என்னைப் பார்த்தாக‌.. 'இந்த‌ வாட்டி எந்த‌ ச‌ண்டையும் வாராது.. சாமிக்குத்த‌மும் வாராது'ன்னு சொல்லிட்டு உள்ள‌றைக்கு வ‌ந்தேன்..

என் மாம‌னோட‌ நினைவுக‌ளை ஓட‌விட்டேன்..

"உள்ளூருல‌ இருக்குற‌வுகல‌ நேருல‌ போயி ம‌ஞ்ச‌ள், குங்கும‌ம் வ‌ச்சு க‌ல்யாண‌த்துக்கு அழைக்க அம்மா குங்கும‌ச்சிமிழோட‌ போயாச்சு".. அய்ய‌னாரு கோயிலிலேருந்து மாமா வீட்டுக்கு வ‌ரும்போது பிச்சாந்த அர‌ளி விதை ம‌டியில க‌ன‌த்துச்சு.. மாமாவோட‌ நினைப்போட‌ ஒரு கோழையா.. அர‌ளி விதையை அம்மியில‌ அரைச்சேன்.. பூமிய விட்டு பிரியிற‌துக்கு முன்னாடி எல்லா சொந்த‌ ப‌ந்த‌த்தையும் பார்த்தாச்சு, உள்குத்த‌லா சொல்லியாச்சு..

ஆனா என்னோட‌ இந்த‌ பிற‌ப்புக்கும், வாழ்ந்த‌ வாழ்க்கைக்கும், ம‌ண்ணை விட்டு பிரிய‌ப்போற‌ இந்த உசிருக்கு அர்த்த‌ம் சொல்லும் என் ம‌ரிக்கொழுந்துகிட்ட, என் புருஷ‌ன்கிட்ட‌ சொல்ல‌லையே..ம்ஹும்.. சொல்லாம‌ப் போனாதேன் தேடி வ‌ர‌மாட்டாக‌.. என் வீர‌சிங்கு இந்த திராணிய‌த்த‌வ‌ள‌ நினைச்ச‌தை நினைச்சு என்னை வெறுத்தாச் ச‌ரி.. ம‌ரிக்கொழுந்துன்னு ம‌ன‌சில‌ நினைச்சு முத உருண்டைய‌ முழுங்கிட்டேன்.. க‌த‌வு த‌ட்டுற‌ ச‌த்த‌ம் கேட்டுச்சு.. அன்னைக்கு ஆத‌ர‌வுக்கு ஏங்கின‌போது வந்த‌ மாதிரி இன்னைக்கு எனக்கு இந்த‌ உசிருக்கு மோட்ச‌ம் குடுக்க‌ வ‌ந்திருச்சா என் மச்சான்னு என‌க்குள்ள ஒரு ஆவ‌ல்..

ஆசையா போனேன்.. ஆனா அம்மா ச‌த்த‌ந்தேன் கேட்டுது.. நெஞ்செல்லாம் அடைக்கிற‌ மாதிரி இருந்த‌து.. மரிக்கொழுந்து வாசத்தை நினைப்பெல்லாம் மோந்துகிட்டுருந்ததால முழுங்கும் போது தெரிய‌லை க‌ச‌ப்பு.. இப்ப‌தேன் தெரியிது க‌ச‌ப்பும் எரிச்ச‌லும்..

'எங்க‌ கிராம‌த்துல எந்த‌ வீட்டுக்க‌த‌வும் சாத்தியிருக்காது.. ராத்திரியிலதேன் சில‌ வீட்டுக்க‌த‌வுக‌ சாத்தியிருக்கும்.. வீட்டு பெரிய ஆம்ப‌ளைக‌ க‌ட்டிலுபோட்டு திண்ணையில‌ இல்லைனா வாரியில‌தேன் ப‌டுத்துருப்பாக .. அத‌னால‌ எப்ப‌வும் எங்க‌ வீட்டுக்க‌தவு சாத்தியிருக்காது..' ஆனா இன்னைக்கு சாத்தியிருக்க‌வும் எங்க‌ அம்மா சுதாரிச்சுகிட்டாங்க.. க‌த‌வை ப‌ல‌மா த‌ட்ட‌ ஆர‌ம்பிச்சிட்டாக‌.. வாயெல்லாம் துடைச்சுகிட்டு க‌த‌வை போயி திறந்தேன்.. நான் எதோ தப்பு ப‌ண்ணியிருக்கேன்னு என் அம்மா க‌ண்டுபிடிச்சிருச்சு.. அடி ஒன்னும் இடிதேன்.. ஆனா என‌க்குத்தேன் அதெல்லாம் உண‌ர உண‌ர்ச்சியில்லையே.. க‌ண்ணெல்லாம் சொருக‌ ஆர‌ம்பிச்சிருச்சு.. என் மேல‌ வந்த‌ வாடைய‌ வ‌ச்சே, அர‌ளி வித‌ன்னு அடையாள‌ம் க‌ண்டுகிட்டாக‌ என் அம்மா.. உப்பில‌ த‌ண்ணிய‌ க‌ல‌க்கி.. இல்ல இல்ல..(அம்மா.. நெஞ்செல்லாம் எரியுதே)..த‌ண்ணியில உப்ப‌ க‌ல‌க்கி என்னை வ‌லுக்க‌ட்டாய‌மா குடிக்க‌ வ‌ச்சாங்க‌.. நானும் என்னால‌ முடிஞ்ச‌ வ‌ரை நெஞ்செரிச்சலுலயும் குடுத்தத் த‌ண்ணிய‌த் துப்பினேன்..

பாப்பாத்திய‌ கூப்பிட்டாக‌ அம்மா.. ஓடி வ‌ந்தா அவ‌ளும்..

என் கிட‌ப்ப‌ பார்த்து வைத்தியாயி (எங்க ஊரு ம‌ருத்துவ‌ ஆயாவ‌ அப்ப‌டித்தேன் கூப்பிடுவோம்) கூப்பிட‌ப் போயிட்டா..ஒழுங்கா த‌ண்ணிய‌ குடிக்கிறியா இல்லை இருக்கிற விதையை நான் திங்க‌வான்னு என்னை மிர‌ட்டினாங்க‌ என் அம்மா.. க‌ண்ணு ரொம்ப‌ சொருகிடுச்சு.. எப்ப‌டி அந்த‌ த‌ண்ணியக் குடிச்சேன், வைத்தியாயி வ‌ந்து என்ன‌ வைத்திய‌ம் பாத்துச்சுன்னு எல்லாம் என‌க்கு நினைவில்ல‌..

நினைவு வ‌ந்த‌ப்ப‌ வாந்தியும் கூடவே சேர்ந்து வந்துது.. முழு நினைவு வ‌ந்து பொழ‌ச்ச‌வுடனேதேன் இருந்த‌து ஒப்பாரிக் க‌ச்சேரி..

'அடி பாதியில‌ போற‌வ‌ளே, பாடையில‌ போற‌வ‌ளே... நீ போயிட்டா எங்களுக்கு ஏது நாதி..அடி நாதியெத்து போற‌வ‌ளே, ந‌ட்ட‌ ந‌டுவுல‌ போற‌வுளே.. நீ போயி நாங்க எங்களையையே சுடுகாட்டுல‌ வ‌ச்சுக்குற‌துக்கு, பொறுத்து இருடி உன் அப்ப‌னும் வ‌ர‌ட்டும்.. எல்லோரும் போயி குழியில‌ இற‌ங்கிடுவோம்"னு எங்க‌ அம்மா முந்தானையில‌ சிந்த‌ ஆர‌ம்பிச்சுட்டாக..

"எங்க‌ளுக்கு என்ன‌ வேண்டுத‌லா, உன் மாமனுக்கு உன்னை க‌ட்டி வைக்காம‌ இருக்க.. உன் அத்தைதானேடி உன்னை வேண்டாங்கிறா... உன் ராசிதானேடி அவ‌ குடும்பத்தோட‌ ஒத்து வாழ விடமாட்டேங்குது, நீ போனா முருகேசு ம‌ட்டும் இருப்பானா.. அவ‌னுந்தானேடி செத்துபோவான்.. ஏன்டி இப்ப‌டி எல்லாத்தையும் குழியில‌ த‌ள்ள‌ அலையிற‌.. எவ‌னுக்கோ ஒருத்த‌னுக்கு க‌ழுத்த‌ நீட்டி வாழ்ந்துதேன் தொலைஞ்சா என்ன"ன்னு ருத்திர‌ தாண்ட‌வ‌ மந்திர‌ம்பாட‌ ஆர‌ம்பிச்சிருச்சு எங்க‌ அம்மா..

நான் எடுத்த‌ க‌டைசி முய‌ற்சியும் தோத்துப்போச்சு..

(ப‌டிக‌ள் இருக்கு உள்ளே நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 8

No comments: