Saturday, November 24, 2007

வாசற்படி - 3

யாரு க‌ண்ணுப‌ட்டுச்சோ?, எங்க‌ குடும்ப உற‌வு இப்ப‌டி அத்துகிட்டு நிக்குது... "இந்த‌ வ‌ருஷ‌ம் ஏந்தான் பொறந்துச்சோ", ம்..ம்..பெண் மனசாச்சா.."எல்லாத்துக்கும் காரணம் நாந்தானோ"ன்னு என்னை நானே நொந்துகிட்டு கிடந்தேன்...

கல‌ங்கி நிக்கும் என் கோல‌த்தை பார்த்து, "வாரந்தவறாம வெள்ளிக்கிழமை, வெள்ளிக்கிழமை அம்மன் கோயில்ல எலுமிச்சை விளக்கு போடுடி, உன் நல்ல மனசுக்கு ஆத்தா எல்லாத்தையும் சரியாக்கிடுவா"ன்னு என் தோழி பாப்பாத்திதேன் என்னை கூட்டிட்டு போனா.. ஆயிர‌ம் க‌வ‌லையையும், க‌ல‌க்க‌த்தையும் ம‌ன‌சுக்குள்ள‌ க‌ச‌க்கிபோட்டு வ‌ச்சுருந்தாலும், அம்ம‌ன் முக‌த்தை பார்த்த‌வுட‌னே எல்லாம் விர‌ய‌ப்ப‌ட்டு என் க‌ண்ணை குள‌மாக்கிடுச்சுங்க‌.. ம‌ன‌சுக்குள்ள எங்கோ ஒரு மூலையில ஏதோ ஒரு வ‌கையான‌ நிம்ம‌தி துளிர்விட‌ ஆர‌ம்பிச்சுது..

இப்படியே நாளுக நகர, ஒரு வெள்ளிக்கிழ‌மை என் பிற‌ந்த நாளு வந்த‌து, இந்த நாளிலேருந்தாவ‌து இனி என் வாழ்க்கையில‌ நல்ல‌து ந‌ட‌க்க‌ட்டும்னு கோயிலுக்குப் போறேன்..அங்க ப‌ச்சை புட‌வையில அம்ம‌ன் த‌ரிச‌ன‌ம் என் அத்தை உருவ‌த்தில‌.!..
என‌க்குள்ள அம்புட்டு ச‌ந்தோஷ‌ம்..

என்னைப் பார்த்து முக‌த்தை ஒரு ப‌க்க‌மா திருப்பிக்கிட்டாலும், நானே வ‌ழிவிக்க‌ போயி, "என‌க்கு இன்னைக்கு பிறந்த‌ நாளுங்க‌ அத்தை, என்னை ஆசிர்வாத‌ம் ப‌ண்ணுங்க"ன்னு சொன்னேன்..
எங்க ஊருக்கு வ‌ந்த‌ நாளிலேருந்து என் பிறந்தநாளு, திருவிழா, தீபாவ‌ளி, பொங்க‌லு எல்லா விசேஷ‌த்துக்கும் க‌ண்ணாடி வ‌ளைய‌ல் வாங்கி என் கைக‌ளில‌ மாட்டிவிட்டு "என்னாடி என் ச‌க்காள‌த்தி, எப்படி எனக்கு ம‌ரும‌க‌ளா வ‌ர‌ப்போற"ன்னு என் கொமுட்டுள (கன்னத்துக் குழி) குத்துவாங்க என் அத்தை.. "இப்ப‌டி எல்லா பாச‌த்தையும், பந்த‌த்தையும் ப‌ழைய‌ நினைப்புன்னு சொல்லுறாப்புல‌ அழுக்காக்கிட்டோமே"ன்னு எங்க‌ அத்தை வ‌ருத்தைப்ப‌ட்டு விக்கிச்சு நின்ன‌ அந்த‌ நொடி இன்னும் என் க‌ண்ணை விட்டு ம‌றைய‌ல‌..
இருந்தும் த‌ன்னைத் தானே ஏமாத்திகிட்டு, வறட்டு வம்புதேன் கௌரவம்னு "நல்லாயிரு"ன்னு ஒட்டி, ஒட்டாம‌ ஒத்த‌ வார்த்தைய‌ சொல்லி கையில வச்சிருந்த குங்குமத்தை என் நெத்தியில‌ வைச்சுட்டு போனாங்க‌..

என‌க்குள்ள ஒரு ம‌த்தாப்பூ ச‌ந்தோஷம் அத்தை எனக்கு பொட்டு வச்சுவிட்டதுல‌.
ஆனா அந்த‌ ம‌த்தாப்பூ முழுசா ஒரு நாளைக்குக்கூட‌ நிலைக்க‌லை.

அடுத்த‌ நாளே அத்தைக்கு ஏதோ உட‌ம்புக்கு சுக‌மில்லாம‌ போயிடுச்சு.. ஆகாத‌ ம‌ரும‌க அழுதாலும் த‌ப்பு, சிரிச்சாலும் த‌ப்புங்கிற‌ பொழ‌ப்பா போயிடுச்சு என் நிலைமை.

என்னன்னு சொல்லுறது.?..

வ‌ட‌க்கித்தெரு செவ‌த்த‌ கிழ‌வி செத்த‌ இழ‌வுக்குப் போன‌ இட‌த்தில‌ "முறைப்பாடு உள்ள இட‌த்தில‌ உள் வ‌ஞ்ச‌க‌மா உற‌வுபாடி, சாமிக்குத்த‌மாக்கி, நல்லாயிருந்த‌வ‌ள‌ ப‌டுக்க‌ப்போட்ட பாவிக‌ல்லாம் இருக்க, வாழ வ‌ழியெத்து நீயா போக‌ணும்னு" ஒப்பாரி ப‌டிச்சு என் அம்மாவை வ‌ம்புக்கு இழுத்துருக்காக‌ அந்த‌ ட‌வுனு சின்ன‌ம்மா..
எங்க‌ அம்மாவுக்கு உட‌னே ரோச‌ம் பொங்க‌, "இழ‌வுக்குப் போன இட‌த்துல‌ கூட‌ உன் இழ‌வு என்னை ப‌டுத்துதேடி.., அவ‌ள் ஆசிர்வாத‌ம் வ‌ந்துதேன் உன்னை வாழ‌ வைக்க‌ப்போகுதா"ன்னு அவுக‌ ஒப்பாரியை வெள‌க்கமாத்தாலே என் முதுகில ப‌டிச்சுட்டாங்க...

என‌க்குள்ள இருக்குற ந‌ம்பிக்கையையெல்லாம் ஆண்ட‌வ‌ன் இப்ப‌டி சித‌ற வ‌ச்சு வேடிக்கை பார்ப்பான்னு நான் க‌ன‌வு கூட காண‌லையேன்னு மூலையில‌ முட‌ங்கி உக்காந்துருந்தேன்... ஏன்னே தெரிய‌லை .. எங்க‌ ஊரு அய்யனாரு முகமும், செம்மியும் என‌க்குள்ள ம‌றைஞ்சு, ம‌றைஞ்சு வ‌ந்துபோச்சு.. கொல்லையில இருந்த வாழையிலேருந்து என் ம‌ன‌சு போல‌ ச‌ருகாகிட்டுருந்த ஒரு இலைய‌ பிச்சு அதுல வெள்ள‌ச் சோறையும், புளித்துவைய‌லையும் மடிச்சு எடுத்துகிட்டு அய்ய‌னார பார்க்க போனேன்..

சின்ன‌ வ‌ய‌சில‌ ஒவ்வொரு நாளும் ப‌ள்ளிக்கூட‌த்துக்குப் போறப்ப‌ என் ம‌ரிக்கொழுந்து மாம‌னோட வந்து இவ‌ருக்குத்தேன் வ‌ந்து கும்புடு போட்டுட்டு போவேன்.. கோயிலிலேருந்து ரெ‌ண்டாவதா இருக்குற ஆல‌ம‌ர‌த்துக்குக் கீழ இந்த‌ ம‌ண்ணை ம‌டியா நினைச்சு குத்த‌ வ‌ச்சு உக்காந்துருக்கும் இந்த செம்ம‌ண் குதிரைதான் எங்க‌ குதிரை. என் காதுகுத்து அன்னைக்கு இந்த‌ அய்யனாருக்கு நேந்துவிட்ட‌ குதிரை. ஒவ்வொரு வ‌ருஷ‌மும் பள்ளிக்கூடம் திறக்குற அன்னைக்கு வந்து இது முதுகில என் மாமனோட அந்த புது வருச வகுப்பை அய்யனாரு சாமிகிட்ட இருக்கும் கரிச்சாந்தெடுத்து எழுதி வச்சது, கடைசி ப‌ரிச்சை அன்னைக்கு பாஸுன்னு வந்து எழுதி வச்சது எல்லாம் கிழவிக கண்ணுக்குத் தெரியுற மாதிரி மங்கலா தெரியுது பாருங்க.. அய்யோ.!!.. நான் முதல்ல எழுதின என் மரிக்கொழுந்து மாமன் பேரு பாதி அழிஞ்ச மாதிரி இருக்கே.. கடவுளே இதுக்காகதான் என்ன கூப்பிட்டியா..
என் மாமனோட பேரை அழுத்தி எழுதிகிட்டிருந்தேன்..
ரொம்ப அழுத்திட்டேனோ..? குதிரைக்கு வலிச்சிருச்சு போல, என் கண்களிலிருந்து ஊத்து வடியுதே..

ரொம்ப நாளா நான் உங்களுக்கு என் மாமனை பத்தி சொல்லவே இல்லையே... ..ம்.. மாச‌ந்த‌வ‌றாம போஸ்ட்கார்டு வாங்கி " நாங்க‌ எல்லாம் ந‌ல்லாயிருக்கோம் மாமா, நீ உன் உட‌ம்பை பாத்துக்க‌, ந‌ல்லா ப‌டி "ன்னு எழுதி க‌டுதாசி போட்டுருவேன்.. எந்த‌ ச‌ண்டைய‌ ப‌த்தியும் நான் மாம‌னுக்கு சொன்ன‌தில்ல.. அதுவே பாவம்.., தன்னந்தனி ஆளா கஷ்டப்பட்டு படிக்குது.. இதுல இதெல்லாம் வேற அதுக்கு சொல்லி ஏன் அதை கலக்கி விடணும்.. எப்படியும் ஒன்னு சேர்ந்துருவோமுங்கிற நம்பிக்கைதேன் எனக்குள்ள இருக்கே.. சேர்ந்துதேன் ஆகணும், எனக்குதேன் கல்யாண பந்தம்னாலே, "மரிக்கொழுந்து பந்தம்" தானே..!!. என்ன நான் சொல்லுறது..

மாமா ஊரு பக்கம் வந்து கிட்டதட்ட ஏழு மாசமாகப்போகுது.. கடைசி வருசமில்ல, படிப்பு வேலை கொஞ்சம் அதிகமாம், ஏதோ புராஜெக்டெல்லாம் பண்ணனுமாம்.. ஆனாலும் மாமா மறக்காம எனக்குத் தனியா கடுதாசி போட்டுருவாங்க, மரிக்கொழுந்து வாசத்தோட.. எனக்கு மரிக்கொழுந்து தானே புடிக்கும்.. அதேன் என் மாமா கடுதாசியில மரிக்கொழுந்து பூவை தேச்சுத்தேன் அனுப்பும்..

பட்டணத்துக்கு மாமாவை பார்க்கப்போன பெரிய மாமாவும், அத்தையும் மாமாகிட்ட நடந்த சமாச்சாரத்தெல்லாம் சொல்லிருப்பாங்க போல.. அதேன் "பொய் சொல்ல‌ க‌த்துகிட்டியாடி என் பொம்மி; இன்னும் கொஞ்ச‌ நாளு பொருத்துக்கோ"ன்னு இந்த‌ மாச‌ம் போட்ட‌ க‌டுதாசியில‌ சொல்லியிருந்தாங்க மாமா.. அய்யோ!! என‌க்குள்ள ஏதோ ப‌ண்ணுதே..

என‌க்கு என் மாம‌ன் ஆத‌ர‌வு அந்த நேரத்தில கட்டாயத் தேவையா இருந்த‌து.. என்னையும் மீறி என் மனசு எதை, எதையெல்லாமோ நினைக்குது, கடந்து துடிக்குது.. என் செம்மியை (அதேன் எங்க‌ செம்ம‌ண் குதிரை) க‌ட்டி புடிச்சு அது முதுகில‌ என் க‌ன்ன‌ம் சாச்சு க‌ண்ணீர் வ‌டிச்சுட்டுருந்தேன்.. ஒரு தொடுத‌லில‌ நான் பூத்தேனே அதே உண‌ர்வை நான் உண‌ருகிறேனே இப்ப‌ன்னு திரும்பி பார்த்தா என் மாமா நிக்குது..
என‌க்கு நான் பார்க்குற‌து க‌ன‌வா, உண்மையான்னு, எதையும் நினைக்க‌த் தோண‌லை, எதுவும் பேச‌வும் முடிய‌லை..

பொங்க‌ப் பானை பொசுக்குன்னு பொங்குற‌ மாதிரி நானும் என் அழுகையும் பொங்க‌ ஆர‌ம்பிச்சுட்டோம்.. என் தோள‌ தொட்ட‌ கையில‌ அப்ப‌டியே த‌லை சாச்சுட்டேன்.. கண்ணுலேருந்து ம‌லை, ம‌லையா த‌ண்ணி, வாயி ஏனோ சிரிக்க‌த் துடிக்குது.. அன்னைக்குத்தேன் என் மாம‌னோட‌ க‌ண்ணுலேருந்து முத‌ முத‌ல்ல‌ த‌ண்ணிய‌ பார்த்தேன்..

(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------****---------------

வாசற்படி‍-4

No comments: