Saturday, December 1, 2007

வாசற்படி - 2

பச்சை ஓலைகுச்சி வீட்டுக்குள்ள வெளக்கமாரு துணையிருக்க, ஒலக்கை அணைபோட, திரைச்சேலை தடுப்போட ஒண்டியா உட்காந்துருந்தேன் நானு.. என் மாமன்ங்கிற ஒத்தையடி பாதையில மரிக்கொழுந்து வாசம் வயப்பட்டு மயங்கிக் கிடந்தது என் மனசு.. திடுக்குன்னு ஒரு சலசலப்பு..


விடுக்குன்னு என்னை என் சுய புத்திக்கு கொண்டு வந்தது அந்த சத்தம்.. "அத்தே..அத்தே"ன்னு என் அம்மாவை கூப்பிட்டுகிட்டே எங்க வூட்டுக்குள்ள நுழைஞ்ச என் மாமனோட சத்தந்தேன் அது.. சத்தம் கேட்டு, ஓலைக்குச்சி இடுக்குள காமிரா பார்வையா என் மாமன பார்த்து ரசிக்க நான் முண்டிகிட்டு கிடந்தா...அடுப்பாங்கரையிலதானே அத்தை இருக்காக, நம்ப ஆசைக்கிளியை திரைச்சீலை வழியாவாவது பார்ப்போம்னு நினைக்காம, பொட்டபுள்ளையாட்டம் வெட்கப்பட்டுகிட்டு, என் ஓலைகுச்சியக்கூட பார்க்க சங்கோஜப்பட்டுக்கிட்டு என் அம்மாகிட்ட உலரிகிட்டே பதில் சொல்லிகிட்டு இருந்தாங்க..


என் அத்தை, சமைஞ்சிருக்க எனக்குன்னு உளுந்தங்களியும், கோழிக்கரி குழம்பும் குடுத்துவிட்டுருக்காங்க.. அதை சொல்றதுக்கு ஏதோ வாத்தியாருகிட்ட திக்கித் திணறி பேசுற மாதிரி எத்தனை திக்கலு, எத்தனை விக்கலு.. அய்யோ!! என் மக்கு மாமான்னு இருந்தது எனக்கு..

ஆனாலும் பாருங்க இந்த சாமிக்குத்தான் என்மேல எம்புட்டு கொல்ல பிரிய‌ம்.. இல்லைனா.. இப்ப‌டி உரிய‌வ‌ன் கைப‌ட்டுத்தேன் நான் உக்காரணும்னு என் த‌லையில‌ எழுதி வ‌ச்சுருப்பாரா சொல்லுங்க..

என்னதேன் ஊருகட்டுப்பாடு, உறவு கட்டுப்பாடுன்னு இருந்தாலும், சின்ன வ‌ய‌சில எங்க‌ளுக்குள்ள போட‌ப்ப‌ட்ட ப‌திய‌ம் எங்க உசிருல‌யும், ம‌ன‌சிலயும், க‌ண்ஜாடை, வாய்ஜாடையா நல்லாவே வேருவிட ஆர‌ம்பிச்சுருச்சு..
என் சினேகிதிங்க யாராவ‌து.. ஏன் என் சினேகிதிங்க‌ன்னு சொல்ல‌ணும்... என்னை நானே நீ உன் ம‌ரிக்கொழுந்து மாம‌னை காத‌லிக்கிறியான்னு கேட்டா, இல்லைன்னுதேன் சொல்லுவேன்.. எனக்குள்ள இருக்குற என் மாம‌னோட நினைப்பும், என் மாமா என்மேல வ‌ச்சிருக்கிற நேசமும் காத‌ல்ங்கிற ஒரு சின்ன வார்த்தையில அட‌ங்காதுங்கிற‌து என் ஆத‌ங்க‌ம்... க‌தையில வர்ற ஆண்டாளு ஆண்டவன் க‌ண்ணனை எம்புட்டு நேசிச்சாகன்னும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை.. நான் என் மாம‌னை என் உசிர‌க்காட்டிலும் பெருசா நேசிச்சேன்னு ம‌த்த‌வ‌க‌ளுக்கு விள‌ங்குறாப்புல‌யும் என‌க்கு சொல்ல‌த்தெரிய‌லை..

ம‌த்த காத‌ல் ஜோடிக‌ளாட்ட‌ம் தொட்டுக்கிற‌து, ப‌ட்டுக்கிற‌துன்னு எங்க‌ளுக்குள்ள இல்லாட்டியும் எங்க ஊருக்காரவக ம‌த்தியில‌யும், உற‌வுக்காரவக ம‌த்தியில‌யும் எங்க மாமா என்னைத்தேன் க‌ட்டிக்கும்னு எல்லாத்துக்கும் ஒரு அசைக்க முடியாத ந‌ம்பிக்கை இருந்துச்சு...அதுமாதிரியே என்னதான் தொட்டு உறவாடாட்டாலும், மாமாவும் நானும் ஒரே ஊரில இருந்த‌தால எனக்கும் எந்த ஒரு ஏக்க உண‌ர்வும் ஏற்ப‌ட‌லை... மாமாவை பார்க்குற‌தே போதும்.. எப்ப‌டியும் இன்னும் கொஞ்ச நாளில மாமாவோட‌தானே இருக்க‌ப்போறேன், அப்ப‌ற‌ம் என்ன க‌வ‌லைன்னு இருந்த‌து..

ஆனா காலேஜ் ப‌டிப்புக்குன்னு மாமாவை ப‌ட்ட‌ண‌த்தில இருக்குற காலேஜில சேர்த்து ஹாஸ்ட‌லில த‌ங்கி ப‌டிக்க வைக்க‌ப்போறேன்னு என் பெரிய மாமா (என் ம‌ரிக்கொழுந்து மாமாவோட‌ அப்பா) எங்க அப்பாருகிட்ட சொல்லும்போதுதான் என‌க்குள்ள ஏதோ குடைய ஆர‌ம்பிச்சுச்சு. என‌க்குள்ள என் மாம‌னை பார்க்காமா இருக்க முடியுமாங்கிற ப‌ய‌மும், ஏக்க‌மும் வந்துருச்சு...

மேற்ப‌டிப்பு ப‌டிச்சா, ப‌ட்டிக்காட்ட‌யும், ப‌ட்டிக்காட்டு ம‌னுசால‌யும் திரும்பிக் கூட பார்க்கமாட்டாக‌ன்னு உள்குத்த‌லா உற‌வுக்கார‌வ‌ங்களும்... ஆம்ப‌ளைக‌ளும், பொம்ப‌ளைக‌ளும் ஒன்னா சேர்ந்து ப‌டிக்கிற காலேஜில ப‌டிச்சா ப‌ட்ட‌ண‌த்து பொட்ட‌ப்புள்ளைக கிராம‌த்து ப‌சங்க‌ள ஒரேய‌டியா வ‌லைச்சு போட்டுறுவாக‌ன்னு என் சிநேகிதிக‌ளும் ஏதோ பிணாத்திகிட்டு கிடந்தாக... என் புத்தி அதுக்கெல்லாம் செவி சாய்க்காம என் மாம‌னையே சுத்தி வ‌ந்து பிரிவுங்கிற வேட்கையில புழுங்க ஆர‌ம்பிச்சுருச்சு..

எதிர்கால‌த்துக்காக நிக‌ழ்கால‌த்தை விட்டுக்கொடுத்துதானே ஆக‌ணும்ங்கிற கட்டாய முடிவுல இர‌ண்டுபேருமே பிரிவை ஏத்துகிட்டு நாட்க‌ளை க‌ட‌த்தினோம்.

ஆனா விதி யாரைத்தேன் விட்டுத்தொலைக்குது... இந்த பிரிவு எங்க‌ளை வெகுசீக்கிர‌மா சேர்த்துவைக்க‌ப்போற அறிகுறின்னு ந‌ம்புன எங்க ந‌ம்பிக்கைக்கு ச‌குண‌த்த‌டையா வ‌ந்த‌து, என் அத்தையோட ஒன்னுவிட்ட‌த்த‌ம்பி வீட்டு வ‌ருகை...

ப‌ட்ட‌ணத்தில ப‌ஸ் க‌ண்ட‌க்குட்ட‌ரா வேலைப் பார்த்த‌வ‌ரு, ஒன்னா சாதி ச‌ன‌த்தோட பொழைச்சு வாழ‌லாமுன்னு பொஞ்சாதி சொன்ன யோச‌னையின் பேருல எங்க சித‌ம்ப‌ர‌ப்ப‌ட்டிக்கு ப‌க்க‌த்துல இருக்குற உசில‌ம்ப‌ட்டியில வ‌ந்து டேராபோட்டுட்டாக..

அந்த சின்னம்மாவுக்கு கொஞ்ச‌ம் வாயி அதிக‌மாம். சாதிச‌ன‌த்தோட எப்ப‌வும் ஒண்டாதாம்.. ப‌ட்ட‌ண‌த்துல இருந்த‌துல ஏதோ தக‌ராறும், சிக்க‌லும் ஆகிப்போன‌தாலதான் இப்ப‌டி பட்டிக்காட்டுல டேரான்னு எங்க சொந்த‌க்கார‌வுக எல்லாம் சொன்னாக..
என் மாமா இர‌ண்டாவ‌து வ‌ருச‌ம் காலேஜ் ப‌டிக்கும்போதுதான் எங்க இர‌ண்டு வீட்டு உற‌வுல‌யும் ப‌ல அடிக‌ள் விழ ஆர‌ம்பிச்சுச்சு..ம்ம்.. அடி மேல அடி விழுந்தா அம்மியே ந‌க‌ரும்போது ம‌னுசாலுக எம்மாத்திர‌ம்..

என் மாமா வீட்டில இருந்த ப‌சுமாடு ஒன்னு மாச‌மா இருந்து செத்துப்போச்சு.. வீட்டில இருந்த நிற‌மாச ப‌சுமாடு செத்துப்போன‌து குடும்ப‌த்துக்கு ஆகாதுன்னும், அது குடும்ப‌த்து ஆம்ப‌ளையோட பிற‌ந்த வீட்டு கோளாறுன்னும்.. அதுவும் நான் ச‌மைஞ்ச நேர‌ம் ச‌ரியில்ல‌ன்னும் புற‌லியை கிள‌ப்பிவிட்டுட்டாக அந்த புதுசா முளைச்ச சின்ன‌ம்மா.. அவுக‌ளுக்கும் என் வ‌ய‌சில ஒரு பொண்ணு இருக்கு...

நான் வ‌ய‌சுக்கு வ‌ந்துருந்த‌ப்ப எங்க அத்தை வீட்டில ந‌டந்த சின்ன சின்ன க‌ஷ்ட‌த்தையெல்லாம் ஊதி பெருசாக்குனாங்க அந்த சின்ன‌ம்மா... வீட்டுக்குள்ள ந‌ல்ல ம‌ன‌சும், ந‌ல்ல பார்வையும் இல்லாத ம‌னுசாலுக நுழைஞ்சா இப்ப‌டித்தேன் ந‌ட‌க்கும்னு புரியாம..அந்த சின்னம்மா பேச்ச கேட்டுகிட்டு அதிலேருந்து எங்க அத்தை எங்க அம்மாவோட விட்டாகுறை, தொட்டாகுறைன்னு எதுக்கெடுத்தாலும் சின்ன சின்ன‌தா ச‌ண்டை போட்டாக..

இது எல்லாத்துக்கும் மேல சூடு ஏத்துறாப்புல ஒன்னு ந‌ட‌ந்த‌து பாருங்க‌.... க‌ட‌வுளே, க‌ட‌வுளே!!! எங்க அம்மாவுக்கு ம‌ஞ்ச‌க்காமாலை வ‌ந்த‌தால, தெம்மாவூரு சாமியாருகிட்ட ம‌ந்திருச்சு க‌யிறு க‌ட்டிகிட்டு, ப‌த்திய‌ச்சோறும் அவ‌ருகொடுக்குற ப‌ச்சிலையும் சாப்பிட்டா குண‌மா போகும்னு ஊருக்கார‌வ‌க சொன்ன‌த ந‌ம்பி எங்க அப்பா, அம்மாவ கூட்டிகிட்டு தெம்மாவூரு போயிட்டு வந்தாரு..

இது ந‌ட‌ந்து ஒரு இர‌ண்டு நாளில‌, மாடுக‌ளை ஓட்டியார வ‌ய‌லுக்கு போன எங்க அத்தை வ‌ழுக்கி விட்டு கீழே விழுந்து, காலில சுளுக்காகி ப‌டுத்துட்டாங்க.. "என்னைப் ப‌த்தி பேசுன‌து பொறுக்காம‌, ந‌ட‌ந்த ச‌ண்டைகளையெல்லாம் கார‌ணமா வ‌ச்சு, என் அம்மா நோவுல படுத்ததுக்கு எங்க அத்தைதேன் காரணம்னு வஞ்சம் வச்சு, எங்க அப்பாரும் அம்மாவும் சாமியாருகிட்ட போயி ம‌ந்திருச்சு எங்க அத்தை வீட்டு மேல சூனிய‌ம் வ‌ச்சு, ம‌ந்திருச்ச த‌க‌டை எங்க அத்தை வீட்டு வ‌ய‌லில புத‌ச்சுட்டாக... அதுதேன் அத்தையோட ப‌டுக்கைக்கு கார‌ண‌ம்"னு வ‌தந்தியை வித‌ச்சுட்டாக புதுசா வ‌ந்த ம‌க‌ராசி...
அதுக்கு சேத்து சுதி பாடுற‌துக்குன்னு வ‌ய‌லுக்குப் போன என் பெரிய மாமாவை பாம்பு க‌டிக்க போயிருச்சு.. ந‌ல்ல வேளை பாம்பு க‌டிக்க‌லை, அதுக்காங்குள்ளியும் அடிச்சு கொன்னுபுட்டாக.. க‌டிக்க வ‌ந்த‌து ஓலை பாம்பானாலும் அது வந்த‌துக்கு கார‌ண‌ம் வ‌ய‌லில புத‌ஞ்சிருக்குற த‌க‌டுன்னு கார‌ண‌ம்காட்டி ச‌ண்டை போட்டாக எங்க அத்தை..


"என்ன‌தேன் இன்னைக்கு, நேத்து வருத்தம்னாலும், சொந்த உறவுல சூனியம் வைக்கிற வ‌ஞ்ச‌க‌க்காரி நான் இல்லை"ன்னு எங்க அம்மா வாயில‌யும், மாருல‌யும் அடிச்சுகிட்டு க‌த்த.. ச‌ண்டை முத்தி ம‌ண்ணை வாரி இரைச்சுக்குற அள‌வுக்கு போயிடுச்சு... இது வ‌ரைக்கும் ந‌டந்த ச‌ண்டைக ஒன்னுல கூட இரண்டு வீட்டு ஆம்ப‌ளைக‌ளும் க‌ல‌ந்துக்க‌லை, அதையும் பெரிசு ப‌டுத்திக்க‌லை.. அவுக பாட்டுக்கு இருந்தாக.. ஆனா இந்த பெரிய ச‌ண்டை எல்லாத்தையும் ரொம்ப‌வே உலுக்கிடுச்சு.. சண்டை‌யில நேர‌டியா எங்க அத்தைக்குத் துணையா அந்த சின்ன‌ம்மா க‌லந்துகிட்டு வ‌ஞ்ச‌கமா பல வார்த்தைக‌ளை கூற, அதைகேட்டு "உன் பொண்ணை என் த‌ம்பி வீட்டுல வாழ வைக்க‌த்தான‌டி இப்ப‌டி ச‌குனியாட்ட‌ம் ஆடுற கூனின்னு" எங்க அம்மா பொட்டுன்னு உண்மையை உடைக்க, அதை கேட்டு அந்த சின்ன‌ம்மா சாமியாட, க‌டைசியில ச‌ண்டை வெட்டுக்காயா முடிஞ்சுருச்சு..

ஆமாங்க ... இர‌ண்டு குடும்ப‌முமே பெத்த பிள்ளைக‌ளை, அவுக‌ளுக்குள்ள இருக்குற‌ ஆசையை, உற‌வை, ப‌ழைய குடும்ப உற‌வை எதையுமே நினைச்சு பார்க்காம, ரெண்டு குடும்ப‌த்து பெரிய ஆம்ப‌ளைக‌ளையும் ச‌க்க‌ள‌த்தி இழுப்பா வீர‌மாகாளி கோயிலுக்கு இழுத்துட்டு போயி, ரெண்டு வீட்டு உற‌வுக்கும் செத்தா இல்லை, வாழந்தா இல்லைன்னு முறைப்பாடு போட்டுட்டு வ‌ந்துட்டாங்க.....

(ப‌டிக‌ள் உண்டு முடிவைத் தொட‌..)

--------------***-------------

வாசற்படி - 3

No comments: