Friday, November 16, 2007

வாசற்படி - 6

க‌ண்ணு முழிச்சு பார்த்தப்பா 'என் வ‌யித்துல வ‌ந்து பொற‌ந்த‌து இப்ப‌டியா இருக்க‌னும்'னு த‌லையில‌ அடிச்சுகிட்டு அழுதாங்க அம்மா..

அய்ய‌ய்யோ.!!. என் மாம‌னுக்கு என்ன ஆச்சு, யாராவ‌து சொல்லித்தொலைங்க‌ளேன், என் மாம‌னை நான் பார்க்க‌னும்னு என்னை சுத்தி உக்காந்துருந்த என் சினேகிதிக‌ளை புடிச்சு உலுப்ப, "உன் மாம‌னுக்கு த‌லையில"ன்னு பாப்பாத்தி சொல்லாங்குளியும்..மங்கா, பாப்பாத்தி கைய‌ புடிச்சு அமுக்கி அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌ கொஞ்ச‌ம் ப‌க்குவ‌மா சொல்லுடின்னா..

எனக்கு இவ‌ளுக‌‌ போடுற‌ பீடிகையில‌ நெஞ்சு ரொம்ப பட படன்னு அடிக்க ஆரம்பிச்சிருச்சு.. எங்க.., பட படப்பு பொறுக்காம‌ வெடுச்சிரும் போல‌ இருந்துச்சு..

க‌டைசியில‌ அஞ்ச‌லைதேன் சொன்னா "ஒன்னுமில்ல‌டி பொம்மி, உங்க‌ மாம‌ன் காலேஜில‌ ஏதோ பொருக்கி ப‌ச‌ங்க‌ளுக்குள்ள ச‌ண்டையாம், அந்த பசங்கள்ள உன் மாமன் பிரண்டும் இருந்தானாம்.. அவனைக் காப்பாத்த போனதுல முருகேசு தலையில கொஞ்சம் அடியாம்.. ஆஸ்பத்திரியில சேத்துருக்காகலாம்"..

மாமாவுக்கு பெருசா எந்த‌ ஆப‌த்துமில்லாட்டியும், த‌லையுல மட்டும்தேன் அடிங்கிற‌து கொஞ்ச‌ம் ப‌ட‌ ப‌ட‌ப்பை குறைச்சாலும்.. என‌க்கு ஏதொ ரொம்ப‌ ப‌ய‌மா இருந்துச்சு..என‌க்கு மாமாவை பார்க்கனும் போல‌ இருந்துச்சு..எப்ப‌டி என‌க்குள்ள அம்புட்டு தைரிய‌ம் வ‌ந்த‌துன்னே தெரியலை..

முத்த‌த்துல, வாச‌ல் முன்னாடி உக்காந்திருந்த என் அப்பாருகிட்ட‌ போயி "அப்பா என்ன‌ ட‌வுனுக்கு கூட்டிட்டு போங்க‌ப்பா, மாமாகிட்ட‌ கூட்டிட்டு போங்க‌ப்பா, நான் மாமாவை பார்க்கனும்"னு ம‌ண்டி போட்டு அழுதுகிட்டிருந்தேன்.. மூலையில உக்காந்து அழுதுகிட்டுருந்த‌ அம்மா, நாலுகாலு பாய்ச்ச‌லா விரைஞ்சு என் ஜ‌டையை பிடிச்சு இழுத்து வீட்டுக்குள்ள‌ வ‌ந்து போட்டு, வெள‌க்க‌மாத்தாலே என்ன விலாசு விலாசுன்னு விலாசிட்டாங்க‌..

என‌க்கு என் அம்மா அடிச்ச‌ அடிய‌ விட‌ சொன்ன‌ வார்த்தைகதேன் வ‌லிக்க‌ ம‌ட்டும் செய்ய‌லை.. ரொம்ப‌வும் ப‌ய‌மூத்திடுச்சு..

"ஏன்டி இந்த‌ குடும்ப‌த்துல‌ பொற‌ந்த‌.., அதுவும் என் வ‌யித்துல‌ வ‌ந்து பொற‌ந்த‌.. பெத்தவ நானே சொல்லக் கூடாது, இருந்தாலும் என் வாயிலேருந்தே சொல்ல வைக்கிறியேடி பாவி..ஊருல எல்லாத்தையும் உன்னைப் பத்தி பேச வச்சிட்டியேடி பாழாப்போறவளே.. வெளியில தலைகாட்ட முடியிலையேடி...நீ வ‌ய‌சுக்கு வ‌ந்த‌ நேர‌த்துல‌ குறைன்னா நீ வாழாமா போக‌ வேண்டியதுதானே, ஏன் இப்ப‌டி இந்த‌ குடும்ப‌த்தையும், எங்க‌ ம‌ரியாதைய‌யும், சொந்த‌த்தையும் சீரழிக்கிற‌?"..

அம்மாவோட வெளக்கமாறு அர்ச்சனையிலேருந்து என்னை என் அப்பாரும், சினேகிதிகளுந்தேன் விடிவிச்சுருக்காக.. ஆனா அது எதுவும் என‌க்கு விள‌ங்க‌லை...

உண்மையிலே மாம‌வுக்குத் த‌லையில சின்ன‌ அடிதானா.?. அம்மா என்னை இந்த அள‌வுக்கு பேசுறாங்க‌ன்னா, மாமாவுக்கு ஏதோ ஆயிருச்சோ.?.அய்யோ.. என‌க்கு பைத்திய‌ம் புடிச்சிரும் போல‌ இருந்துச்சு..நான் மாமாவைப் பார்க்க‌னும், நான் மாமாவைப் பார்க்க‌னும்னு புல‌ம்பிகிட்டே இருந்தேன்.. "அழாத‌டி பொம்மி, ப‌ய‌ப்புடாத‌டி.. முருகேசுக்கு ஒன்னுமில்ல, சீக்கிர‌மா ஊருக்கு உன்ன‌ப் பார்க்க‌ வ‌ந்துருவான்னு" பாப்பாத்தி சொன்னா..

ரெண்டு நாளா நான் எதுவும் சாப்பிட‌லை, மாமா.. மாமாவப் பார்க்கனும்னு அன‌த்திகிட்டேருந்தேன்.. அய்ய‌னாருகிட்ட‌யும், அம்ம‌ன்கிட்ட‌யும், ம‌னசால‌ கெஞ்சி கூத்தாடிகிட்டிருந்தேன்.. செம்மி முதுகுல என் மாமன் பேரையும் அது பாஸாகுறதுக்காக வேண்டிகிட்டு கரிச்சாந்தாலயும், கரிக்கொட்டையாலயும் அழுத்தி எழுதினதுக்கு மன்னிப்பு கேட்டுகிட்டிருந்தேன்.. என் மாமனை சரியாக்க சொல்லி மன்றாடிகிட்டுருந்தேன்..அடுப்பாங்க‌ரை மூலையை விட்டு அங்கிட்டுகிங்கிட்டு ந‌க‌ர‌லை.. என‌க்கு என் மாம‌னைப் ப‌த்தின‌ சிந்த‌னையைத் த‌விர‌ வேற‌ எதுவும் இல்ல..

என் சினேகிதிங்க‌தேன் மாறி மாறி ஒவ்வொருத்தியா வ‌ந்து என்னை 'அழாத‌டி நீ ப‌ய‌ப்புடுற‌ மாதிரி ஒன்னுமில்ல‌'ன்னு ஆருத‌ல் சொல்லிகிட்டிருந்தாங்க‌..

க‌டைசில என் கோல‌த்தை பார்க்க‌ ச‌கிக்காம பாப்பாத்தி எங்க‌ அம்மா கிட்ட‌ ச‌ண்டைக்கு போயிட்டா.. " இங்க‌ பாரு நீயெல்லாம் ஒரு அம்மாவா.. அவ‌ளே ப‌ய‌ந்த‌வ‌.. வெறும‌ன ட‌வுனுலேருந்து சேதிங்கிற‌தை கேட்டே ம‌ய‌ங்கி விழுந்தா.. பாதி நாளு பேச்சு மூச்சில்லாம‌ கிட‌ந்தா.. யாரோ ஏதோ சொன்னாங்கங்கிற‌துக்காக உன் ஆங்கார‌த்தை அவ‌கிட்ட‌தேன் காட்ட‌ணுமா.. நீ சொன்ன‌த வ‌ச்சி முருகேசுக்கு என்ன‌வோ ஏதோன்னு இந்த‌ பைத்திய‌க்காரி ப‌ய‌ந்து கிட‌க்குறா..நீயே சொல்லு உன் வாயால‌, முருகேசு நல்லா இருக்கான், அவ‌ ப‌ய‌ப்படுற‌ மாதிரி அவ‌னுக்கு ஒன்னும் கிடையாதுன்னு.. " சொன்னா..

எங்க‌ அம்மா என்னைக் க‌ட்டி அணைச்சு அழுதாங்க‌.. " நீ நினைக்கிறாப்புல முருகேசுக்கு ஒன்னுமில்லடி, "சண்டையில முருகேசு த‌லையில லேசா காய‌ப்ப‌ட்டுருச்சு, ஆஸ்ப‌த்திரியில சேர்த்துருக்கோம், கொஞ்ச‌ம் வ‌ந்து பாத்துக்கோங்க"ன்னு போனு ப‌ண்ணிருக்காங்க‌.. உங்க‌ அத்தை ரொம்ப‌ பெருசா ஒப்பாரி வ‌ச்சிட்டு அப்ப‌வே உன் பெரிய‌ மாமாவோட ட‌வுனுக்கு கிள‌ம்பி போயிட்டா..

அந்த‌ உசில‌ம்ப‌ட்டியாதேன் எதிர்த்த வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு ரொம்ப கேவல‌மா உன்னைப் பத்தியும், நம்ப குடும்பத்தை பத்தியும் பேசிட்டா.. முருகேசுக்கு ஒன்னுன்னவுடனே என்னாலயும் எதிர்த்து பேச முடியலை.. 'நம்ப குடும்பத்தையே சூனியக்கார குடும்பம், நய வஞ்சகக்கூட்டம்னு பல வாரியா ரொம்ப பழைய குடும்ப சண்டையெல்லாம் எடுத்து வச்சு பேச ஆரம்பிச்சிட்டா.. நானும் எம்புட்டுதேன் பொறுத்துப்போக, அதேன் , "பனமரத்துக்கீழ நின்னவனுக்கு தேள் கொட்டினா, தென்னமரத்துக்கீழ நின்னவனுக்கு நெறி கட்டினாப்புலடி கதைக்கிற.. என் தம்பி குடும்பத்து மேல எனக்கில்லாத அக்கரை உனக்கென்னடி"ன்னு நான் கேட்க அவளும் பதிலுக்குப் பேச கொஞ்சம் பெரிய சண்டையாயிடுச்சு.. அந்த நேரம்னு வயலிலேருந்து வந்த உங்க அப்பா, 'வாரியில‌ நின்னு என்ன சண்டை உள்ள போ'ன்னு என்னதேன் அதட்டினாரு.. ஆனா அவ கொஞ்சம் கூட ஆம்பளைங்கிற‌ மட்டு, மரியாதையில்லாம உங்க அப்பாவைப் பார்த்து "ம்க்கும்.. விதியத்தவனுக்கு வெட்டி வீறாப்பு", "என‌க்கு ம‌ட்டும் இப்ப‌டி ஒரு த‌ர்த்திரிய‌ம் இருந்திருந்தா இப்ப‌டி ஊருக்கும், உற‌வுக்கும் சுமையாயில்லாம‌, எங்காவ‌து க‌ண்கானாத‌ ஊருல‌ உள்ள‌ கோயிலுக்கு நேந்துவிட்டுட்டு வ‌ந்திருப்பேனே ஒழிய‌ இப்ப‌டி மேய‌விட்டுட்டு உக்காந்திருக்க‌ மாட்டேன்.. 'நான் ஒருத்தி நாளும் உதுத்த‌துக‌கிட்ட போயி கோயில‌ ப‌த்தியும் சாமிய‌ப்ப‌த்தியும் பேசுறேனே'.. "ன்னு அநியாய‌த்துக்கு கேவ‌ல‌மா பேசிட்டா..

"கட்டினவனுக்கு தலகுனிவு நான் பெத்துவச்சிருக்குறதுனாலதானே"ன்னு உன் மேல ஆத்திரப்பட்டுட்டேன்டி இந்த அவலச் சிறுக்கி.. "முருகேசு நல்லா தான்டி இருக்கான், நீ எங்களுக்கு வேணும்டி"ன்னு என்னை கட்டிப் புடிச்சு ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிட்டாங்க என் அம்மா.. இருந்தும் என‌க்கு ந‌ம்பிக்கையில்ல‌.. என‌க்கு என்மேலவே ரொம்ப‌ ப‌ய‌ம் வ‌ர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு..மாம‌னை பார்க்க‌ப் போன‌ மாம‌ன் பிர‌ண்டுக‌ள்ல‌ ப‌ல‌ பேரும், ஊருல‌ அப்பாவ ம‌திக்கும் ப‌ல‌ பெரிய‌ ஆம்பிளைக‌ளும் வ‌ந்து 'முருகேசு ந‌ல்லா இருக்காம்மா'ன்னு சொன்னாங்க‌.. அப்ப‌வும் என‌க்கு ந‌ம்பிக்கை வ‌ர‌லை..

ட‌வுனுலேருந்து அத்தையும் மாமாவும் ம‌ட்டுந்தேன் திரும்பி வ‌ந்தாங்க..மாமா பிர‌ண்டு பாக்கிய‌ம் சொன்னான் 'மாமாவுக்கு ப‌ரிட்சை இருக்குற‌தால, மாமா ப‌ரிட்சையை முடிச்சிட்டு ஊருக்கு வ‌ரும்'னு..

அத்தை சொன்னாங்க "க‌ண்ட‌வுக‌ க‌ண்ணுப‌ட வேண்டாமுன்னுதேன் ட‌வுனுலே விட்டுட்டு வ‌ந்துருக்கோம்'னு..

இருந்தும் என் ஆசுவாச‌த்தை என்னால அட‌க்க‌ முடிய‌லை..ந‌ல்ல‌ வேளை அடுத்த‌ நாளு கொல்லைக்கு பாப்பாத்தியோட போகையில பெரிய‌ மாமாவைப் பார்த்தேன்.. பாப்பாத்திய கூப்பிட்டு மாமாவே சொன்னாக, 'அவ‌ன் ந‌ல்லா இருக்காம்மா, பரிச்சை முடிஞ்ச‌வுட‌னே வ‌ந்துருவான்..காய‌மெல்லாம் ஓர‌ள‌வு ஆர‌ ஆர‌ம்பிச்சிடுச்சு'ன்னு.. அப்பாடா... அதக் கேட்ட‌வுடனே, என‌க்குள்ள‌ ஒரு சின்ன‌ பெருமூச்சு.. அந்த‌ இட‌த்துலே அய்ய‌னாரு சாமிகிட்ட‌ வேண்டிக்கிட்டேன் "சாமி, என் மாம‌னை ப‌த்திர‌மா பாத்துக்க‌, ந‌ல்ல‌ப‌டியா அது ப‌ரிட்சை எழுதி ஊரு வந்து சேர‌ணும்.. நான் உனக்காக‌ கையில‌ க‌ற்பூர‌ம் ஏத்திக்கிறேன்னு"..

மாமா ஊருக்கு வ‌ர‌ப்போற‌ நாளுக்காக‌ வ‌ழிமேல‌ விழிவ‌ச்சு, அசோக‌ வ‌ன‌த்து சீதையா காத்திருந்தாலும், ம‌ன‌சுக்குள்ள‌ "அம்மா அன்னைக்குச் சொன்ன‌ வார்த்தைக‌ளும், அந்த‌ சின்ன‌ம்மா அம்மாவையும், அப்பாவையும் பேசின‌ பேச்சும்" வ‌ந்து வ‌ந்து ஏதோ ச‌குன‌ம் சொல்லிகிட்டுருந்துதுங்க‌..

..ஆச்சு.. அத்தை ஊரு பெரிய‌வ‌க‌ள தனியா கூப்பிட்டு எங்க குடும்ப‌த்தை க‌ண்டிக்க‌ச் சொல்லியும், உற‌வை வெட்டிவிட‌ச் சொல்லியும்" முறையிட்டுட்டாங்க..


(ப‌டிக‌ள் இருக்கு உள்வாசல் நுழைய‌‌..)

-----------***----------

வாசற்படி - 7

No comments: